புதன், 28 ஜூன், 2017

உதயகுமாரன் : என்னை அழிக்கப்பார்க்கிறார்கள்


என்னை அழிக்கப் பார்க்கிறார்கள்: சுப.உதயகுமாரன்கூடங்குளத்தில் அமைந்துள்ள 2 அணு உலைகளிலும் முழுவதுமாக மின்னுற்பத்தி நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அணு சக்திக்கு எதிரான போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமாரன் அணு சக்தியை எதிர்ப்பதால் தன்னை ஆரியத்துவ சக்திகள் அழிக்கப் பார்க்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
கூடங்குளத்தில் 1வது அலகு அணு உலை மற்றும் 2வது அலகு அணு உலை அமைக்கப்பட்டு மின்னுற்பத்தி செய்யப்பட்டுவந்தது. இந்நிலையில், முதலாவது அலகு அணுஉலை கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்டது. இரண்டாவது அணு உலையில் கடந்த மே மாதம் 5ஆம் தேதி டர்பைன் பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு மே 20ஆம் தேதி பழுது சரி செய்யப்பட்டு மின் உற்பத்தி தொடங்கியது. ஆனால், மீண்டும் நேற்று ஜூன் 27ஆம் தேதி பழுது ஏற்பட்டு மின்னுற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், நாளை ஜூன் 29ஆம் தேதி கூடங்குளத்தில் 3 மற்றும் 4வது அலகு அணு உலைகள்அமைப்பதற்கான கட்டுமான பணிகள் தொடங்கப்பட உள்ளது.

இந்நிலையில் அணுசக்திக்கு எதிரான போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் மற்றும் பச்சை தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமாரன் இன்று ஜூன் 28ஆம் தேதி தனது முகநூல் பக்கத்தில் ஆரியத்துவ அழிவு சக்திகள் என்னை அழிக்கப் பார்க்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
சுப.உதயகுமாரன் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:கூடங்குளம் அணு உலையின் முதல் அலகு இரண்டு மாதங்களுக்கு மேலாக மூடிக்கிடக்கிறது. பராமரிப்புப் பணிகள் நடக்கின்றனவாம். இப்போது இரண்டாவது அணு உலையில் தொழிற்நுட்பக் கோளாறாம். அதுவும் மூடப்பட்டுவிட்டது. இந்த லட்சணத்தில் 3, 4-வது அணு உலைகளுக்கு காங்கிரீட் போடுகிறார்கள். இவற்றையெல்லாம் மக்கள் கவனிக்காமல் இருக்க, பிரச்சினையை முற்றிலுமாக திசைதிருப்ப என்மீது அவதூறு பரப்புகிறார்கள். தமிழ் மக்களே, நாட்டு நடப்புக்களை புரிந்துகொள்ளுங்கள்! பாசிச சக்திகளின் பரப்புரையைப் புறந்தள்ளுங்கள். நான் உங்கள் பிள்ளை, ஆரியத்துவ அழிவு சக்திகள் என்னை அழிக்கப் பார்க்கிறர்கள் என்று தெரிவித்துள்ளார். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: