வியாழன், 29 ஜூன், 2017

ஏமாற்றப்படுவதை அறியாதவரா ஜூலி? Big boss-25 லட்சத்துக்கு ... மெரினா ஜூலி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நூறு நாட்களுக்கு 25 லட்ச ரூபாய் வரை பேரம் பேசி முன் பணமும் பெற்றுள்ளார் ஜூலி என்ற செய்திகள் வெளியாகி உள்ளது.
சுமார் 20 லட்சத்திற்கு அதிகமான மக்கள் வந்து சென்ற ஜல்லிக்கட்டு போராட்டம் உலகை ஈர்த்தது அதன் ஐக்கியத்தாலும், போர்க்குணத்தாலும் ஜல்லிக்கட்டு என்பதை ஒரு அடையாளமாக வைத்து பல்வேறு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு கூட்டு மனச்சிதைவுக்கு உள்ளான சமூகம், மெரீனா போராட்டத்தோடு தன்னை இணைத்துக் கொண்டது. நம் சமகாலத்தின் மிகப்பெரிய அரசியல் எழுச்சியாக நடந்த அப்போராட்டத்திற்கு நடிகர் லாரன்ஸ், ஆர்.ஜெ.பாலாஜி, ஹிப் ஹாப் ஆதி போன்றவர்கள் உரிமை கொண்டாடிய போதிலும் யாராலும் கைப்பற்ற முடியாத போராட்டமாக நடந்து முடிந்தது மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம். அது சமரசமற்ற மக்கள் மயப்பட்ட போராட்டமாக நடந்த காரணத்தால்தான் மக்களை அச்சுறுத்தும் விதமாக போலீசார் இறுதியில் வன்முறையை கட்டவிழ்த்து விட்டு இன்னொரு மெரினா போராட்டம் உருவாகக் கூடாது என பொது மக்களுக்கு எச்சரிக்கையும் விடுத்தனர்.

அன்று தொடங்கி இன்று வரை மெரினா யுத்த பாதுகாப்பு வலையம் போல இருக்கிறது. மெரினாவுக்குள் நினைவஞ்சலி செலுத்தச் சென்ற திருமுருகன் காந்தி உட்பட நால்வர் குண்டர் சட்டத்தில் சிறையில் உள்ள நிலையில் அதே ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சில மணி நேரம் கோஷம் போட்ட ஜூலியானா புகழ் பெற்று ஜல்லிக்கட்டு ஜூலி ஆனார்.
ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்ட இந்த போராட்டத்தில், சசிகலா, முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷமிட்டு பிரபலமானவர் ஜுலி. தைரியமான பெண்மணி, வீரத் தமிழச்சி என்றெல்லாம் சமூக வலைதளங்களில் பாராட்டப்பட்டார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அதுபற்றி பெரிதாக வாய்திறக்காத ‘விஜய் டிவி’, தனது ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு ‘ஜல்லிக்கட்டு’ ஜுலி என்ற அடைமொழியுடன் அவரை பிரபலங்களில் ஒருவராக களமிறக்கியிருக்கிறது.
நேற்று ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஜுலியிடம், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டது பற்றி ஆர்த்தியும், காயத்ரி ரகுராமும் விவாதித்தனர். ஆர்த்தி, போராட்டம் என்றால் அமைதியான முறையில் இருக்க வேண்டும், கத்தி கூச்சலிடுவது போராட்டமல்ல என பேசினார். அமைதியான முறையில் கேட்டும் கிடைக்காததால்தான் இந்த வழியில் போராட்டம் நடத்தினோம் என ஜுலி கூறியதோடு தங்கள் வீட்டில் வளர்த்த மாடுகள் பற்றிய புள்ளி விவரங்களையும் முன்வைத்தார். ஜுலியின் கருத்தை ஆர்த்தி ஏற்க தயாராக இல்லை, எங்க ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு எதிராக கோஷமிடு பார்ப்போம் என நக்கலாக பதிலளித்தார். அதோடு, “மெரினாவில் கடைசி நாளில் யாரால் அடி வாங்குனாங்க..” என ஆர்த்தி கேட்கிறார். “இவங்களாலதான்..” என காயத்ரி சொல்கிறார். ஜூலியானாவோ “அப்படித்தான் சொல்கிறார்கள்” என சாதாரணமாக பதில் கூறுகிறார். இங்கே பிரச்சனை என்னவென்றால், விஜய் டிவிதான்.
மெரினாவில் போராடிய மாணவர்களுக்காக தங்கள் உடைமையை இழந்த மீனவ சமுதாயத்தினர், காவல்துறையால் தாக்கப்பட்ட இளைஞர்கள் பலர் இருக்கும்போது ஜுலியை முன்னிலைப்படுத்தி தங்கள் டிஆர்பி ரேட்டிங்-ஐ அதிகப்படுத்தும் வேலையை தெளிவாக செய்கின்றனர். இது போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை அவமதிக்கும் விதமாக இருப்பதோடு, ஜுலி மீது பலருக்கு வன்மத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சமூக வலைதளங்களில் ஜுலி பற்றிய தவறான கருத்துக்கள் உலா வர இதுவே காரணம்.விஜய் டிவியின் துவக்க நாள் நிகழ்வில் பாடல் வடிவில் நடனம் என்ற பெயரில் உடற்பயிற்சி  ஒன்றை செய்த ஜூலி “அதோ பாரு லைட்டு, தமிழந்தான் வெயிட்டு”  “மொளகாண்ணா காரம் தமிழண்ணா வீரம்” என்று பல கோஷங்களைப் போட்டு பெரிய  அல்வாதுண்டுகளை தமிழர்கள் வாயில் தள்ளிக் கொண்டிருந்தார்  tamilarasial.com/

கருத்துகள் இல்லை: