வியாழன், 28 ஜூலை, 2011

எடியுரப்பா ராஜினாமா வெறும் 25 MLA க்களே ஆதரவு அதிர்ச்சி சோகம்

பெங்களூர்: வெறும் 25 எம்.எல்.ஏக்கள் வரை மட்டுமே தன்னை ஆதரித்ததால் கடும் அதிர்ச்சி அடைந்த முதல்வர் எதியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார். தனது ராஜினாமாக் கடிதத்தை கட்சித் தலைவர் நிதின் கத்காரிக்கு அவர் அனுப்பி வைத்தார்.

கர்நாடக சுரங்க ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முதல்வர் எதியூரப்பா உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று பாஜக இன்று காலை உத்தரவிட்டது. அவருக்குப் பதிலாக புதிய முதல்வரை தேர்வு செய்ய, பாஜக எம்எல்ஏக்களின் கூட்டம் நாளை நடக்கிறது என்றும் அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் கூறினார்.

ஆனால் இதை முதலில் எதியூரப்பா ஏற்கவில்லை. மாறாக, தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் கூட்டத்தை அவர் அதிரடியாக பெங்களூரில் கூட்டினார். ஆனால் அவருக்கு அங்கு பெரும் அதிர்ச்சியே காத்திருந்தது. அவர் கூட்டிய கூட்டத்துக்கு அதிகபட்சம் 25 பேர் வரை மட்டுமே வந்திருந்ததாக தெரிகிறது.

இதனால் அதிர்ச்சியுற்ற எதியூரப்பா தனது பிடிவாதத்தை தளர்த்தியாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். இதையடுத்து கத்காரியுடன் தொலைபேசியில் அவர் தொடர்பு கொண்டு பேசினார். கட்சி முடிவுக்கு தான் கட்டுப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், கத்காரியுடன் எதியூரப்பா பேசினார். அப்போது கர்நாடகத்தில் தனது நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறினார். மேலும் மேலிட முடிவுக்குத் தான் கட்டுப்படுவதாகவும் அவர் தெரிவித்தார் என்றார்.

இதையடுத்து தனது ராஜினாமா கடிதத்தை இன்று மாலையில் கத்காரிக்கு அனுப்பி வைத்தார் எதியூரப்பா.

இதன் மூலம் கர்நாடக பாஜகவில் நிலவிய பெரும் பூசல் முடிவுக்கு வந்துள்ளது. நாளை புதிய முதல்வரை பாஜக தேர்வு செய்யவுள்ளது.

எதியூரப்பாவுக்குப் பதிலாக புதிய முதல்வரை தேர்வு செய்ய நாளை பெங்களூரில் கர்நாடக பாஜக எம்எல்ஏக்களின் கூட்டம் நடக்கும். மூத்த தலைவர்களான அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங் ஆகியோர் முன்னிலையில் இக் கூட்டம் நடக்கும்.

அடுத்த முதல்வர் யார்?

அடுத்த முதல்வர் யார் என்பது பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் அனந்தக்குமார், ஈஸ்வரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர் ஆகியோரின் பெயர்கள் முன்னணியில் உள்ளன. இவர்களில் ஈஸ்வரப்பா, எதியூரப்பாவின் ஆதரவாளர் ஆவார். ஜெகதீஷ் ஷெட்டர் தீவிர எதியூரப்பா எதிர்ப்பாளர் ஆவார். இவர்கள் தவிர எதியூரப்பாவின் தீவிர ஆதரவாளரான வி.எஸ்.ஆச்சார்யாவும் போட்டிக் களத்தில் உள்ளார்.

கருத்துகள் இல்லை: