சனி, 30 ஜூலை, 2011

பதட்டத்தில் சேலம் வீரபாண்டி ஆறுமுகம் கைது எதிரொலி

சேலம்: முன்ஜாமீன் பெற்றிருந்த முன்னாள் அமைச்சர் வீரபண்டி ஆறுமுகம் இன்று திடீரென மீண்டும் கைது செய்யப்பட்டதால் சேலம் மாவட்டம் முழுக்க பெரும் பதட்டம் நிலவுகிறது.

அங்கம்மாள் காலனி வழக்கில் முன் ஜாமீன் பெற்று நீதிமன்ற உத்தரவின் பேரில் காவல் நிலையத்தில் இன்று 3வது நாளாக கையெழுத்து போட வந்த வீரபாண்டி ஆறுமுகம் திடீரென எந்த அறிவிப்புமின்றி மீண்டும் கைது செய்யப்பட்டார். போலீசார் அவரிடம் காரணத்தையும் கூறவில்லை.

வேறொரு நில மோசடி தொடர்பாக அவரைக் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றதாகத் தெரிகிறது.

சேலம் காத்தநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாலமோகன்ராஜ் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று பின்னர் போலீஸார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

தனக்குச் சொந்தமான ரூ.6 கோடி மதிப்புள்ள 20 ஆயிரம் ச.அடி நிலத்தை மோசடி செய்ததாக பாலமோகன்ராஜ் புகார் அளித்துள்ளார். வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் அவரது தம்பி மகன் உள்பட மூவர் மீது இந்தப் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திமுகவினர் போராட்டம்

வீரபாண்டி ஆறுமுகம் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காவல் நிலையம் முன் திரண்டிருந்த திமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். போலீஸாருடன் மோதலிலும் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்ட வீரபாண்டி ஆறுமுகம் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கோயமுத்தூருக்கு அழைத்துச் செல்லப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சேலத்தில் பதட்டம்

இதனிடையே, வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் சேலம் நகரில் ஆங்காங்கே வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் பொதுமருத்துவமனை மற்றும் பேருந்து நிலையம் எதிரில் சில பேருந்துகளின் கண்ணாடிகளை உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சேலம் நகரில் காலை முதல் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

கருத்துகள் இல்லை: