புதன், 27 ஜூலை, 2011

எல்லாத்துக்கும் காரணம் அட்டர்னி ஜெனரல் வாகனாவதி தான்': ராசா

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த எல்லா பிரச்சனைகளுக்கும் இப்போதைய மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரான அட்டர்னி ஜெனரலான வாகனாவதி தான் காரணம் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா குற்றம் சாட்டினார்.

நேற்று நீதிமன்றத்தில் தனக்காக வாதாடிக் கொண்டிருந்த வழக்கறிஞர் சுஷில்குமாரை ஒரு நிமிடம் உட்காரச் சொல்லிவிட்டு எழுந்த ராசா, வாகனாவதி மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

ராசா வாதாடுகையி்ல், வாகனாவதி சொலிசிட்டர் ஜெனரலாக இருந்தபோது தான் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான விதிகள் முடிவு செய்யப்பட்டன. அவர் சொன்ன அறிவுரையின்படி தான் நான் எல்லாவற்றையும் செய்தேன்.

இதற்காக தொலைத் தொடர்புத்துறையிடம் ஏராளமாக கட்டணத்தையும் வாங்கினார். இப்போது அவர் அட்டர்ஜி ஜெனரலாக பதவி உயர்வும் பெற்றுவிட்டார்.

ஆனால், அவர் சொன்னதைக் கேட்டு செயல்பட்ட நான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். இது என்ன நியாயம்?. இதனால் வாகானவதியையும் இந்த வழக்கில் ஒரு சாட்சியாக சேர்க்க வேண்டும் என்றார் ராசா.

இந்தக் குற்றச்சாட்டை வாகனாவதி மறுத்துள்ளார். அவர் கூறுகையில், ஒரு குற்றம் சாட்டப்பட்ட நபரின் பேச்சுக்கு நான் பதில் சொல்ல மாட்டேன் என்றார்.

முன்னதாக இந்த விவகாரத்தில் வாகனாவதியிடமும் சிபிஐ விசாரணை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: