வெள்ளி, 29 ஜூலை, 2011

Jaffna கோஷ்டி மோதல் வானை நோக்கிச் சுட்டுக் கட்டுப்படுத்தியது இராணுவம்

யாழ். நகருக்கு அண்மையில் புகையிரதநிலையத்திற்கு முன்பாக நேற்று இரவு 8.00 மணியளவில் இரு குழுக்களுக்கிடையே மோதல் இடம்பெற்றது. சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்ற இம்மோதலை, சம்பவ இடத்திற்கு விரைந்த இராணுவத்தினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மோதலைக் கட்டுப்படுத்தினர். சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

நேற்று இரவு 8.00 மணியளவில் ஆஸ்பத்திரி வீதி முலைவைச் சந்தியில் நின்ற ஒரு குழுவிற்கும் புகையிரதநிலைய வீதியில் நின்ற மற்றொரு குழுவிற்கும் இடையே மோதல் வெடித்தது. இரு தரப்பினரும் போத்தல்கள் மற்றும் கற்களால் மாறிமாறி தாக்கத் தொடங்கினர். இதனையடுத்து அப்பகுதி பெரும் களேபரப் பூமியாகக் காட்சியளித்தது.

அப்பகுதியூடான போக்குவரத்துகள் அனைத்தும் தடைப்பட்டன. வீதியில் போத்தல் சிதறல்கள் குவிந்து காணப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக கேள்வியுற்ற இராணுவத்தினர் விரைந்துசென்று வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மோதலை கட்டுப்படுத்தியதுடன் பொலிஸாருக்கும் தகவல்வழங்கினர். சம்பவ இடத்திற்கு விரைந்த யாழ்.பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான குழுவினர், சம்பவத்துடன் தொடர்புடைய 10 பேரைக் கைதுசெய்ததுடன் மோதல் குறித்த விசாரணைகளையும் மேற்கொண்டனர்.

இதேவேளை நேற்று இரவு முழுவதும் அப்பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தாக பிரதேச தகவல்கள் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை: