வியாழன், 28 ஜூலை, 2011

கப்பம் செலுத்தப்படாததால் பட்டனராசி கொலை

மட்டக்களப்பில் கப்பம் செலுத்தாதினால் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டவரது சடலம் இன்று தோண்டியெடுக்கப்படவுள்ளதாக கொழும்பு குற்றப்புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

பெப்ரவரி மாதம் 11ம் திகதி அன்று கடத்தப்பட்ட மதுரங்குளிய பட்டனராசி என்பவரது சடலமே இதுவென தெரிவிக்கப்படுகிறது.

அரச சார்பற்ற அமைப்பொன்றின் தலைவரான பட்டனராசி மட்டக்களப்புக்கு அமைப்பின் கடமை காரணமாக சென்றிருந்த போதே கடத்தப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து கடத்தல்காரர்கள் இவரது மனைவிக்கு தொடர்பினை ஏற்படுத்தி அவரை விடுவிக்க 20 மில்லியன் ரூபா கப்பம் கோரியுள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் புத்தளப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு அரசியல் தலையீட்டினால் விசாரணைகளை கொழும்பு குற்றப்புலனாய்வுத் துறையினரிடம் கையளிக்கப்பட்டது.

கொழும்பு குற்றப் புலனாய்வுத் துறையினர் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூவரை கைது செய்தனர். இவர்களுள் ஒருவர் அரசியல்வாதி ஒருவருடன் நெருக்கமான தொடர்பு கொண்டவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது பட்டனராசி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட இடம் குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது குறித்த இடத்தில் பாதுகாப்பு ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு சட்டரீதியாக சடலம் தோண்டியெடுக்கப்படவுள்ளதாக கொழும்பு குற்றப் புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: