வெள்ளி, 26 அக்டோபர், 2012

அம்மாவை சந்தித்த கேப்டனின் எம்.எல்.ஏ.க்கள்!

ஜெயலலிதாவை சந்தித்த கேப்டனின் எம்.எல்.ஏ.க்கள்! “சும்மாச்சும்” ஜோக் அடிக்காதிங்க!

Viruvirupu,

தே.மு.தி.க., எம்.எல்.ஏ. ஒருவர், சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகத்தை சந்தித்தது, “சும்மாச்சும்” என்று சொல்லப்பட்டதால், பரபரப்பு சர்ரென்று இயங்கிய நிலையில், கேப்டனின் எம்.எல்.ஏ.க்கள் இருவர் இன்று காலையில் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்திருப்பது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தே.மு.தி.க.வின் மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ. ஆர்.சுந்தரராஜன், திட்டக்குடி எம்.எல்.ஏ. தமிழ் அழகன் ஆகிய இருவரும் இன்று காலை முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினர். தலைமைச் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
சந்திப்பு முடிந்து வெளியே வந்த இருவரும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, தங்களது தொகுதி வளர்ச்சிப் பணிகள் குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்ததாக தெரிவித்தனர்.     அப்படி எல்லாம் கூட அரசியலில் உண்டா ?

தங்களது தொகுதியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வளர்ச்சிப் பணிகள் ஏதும் நடைபெறாத காரணத்தால் தொகுதி மக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், இது குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்ததாகவும் தெரிவித்தனர். (இவர்கள் தொகுதிகளில் மட்டும்தானா இந்த நிலை? அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளுக்கு வந்து பாருங்க)
சொந்தக் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கே அம்மா தரிசனம் கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ள நிலையில், கேப்டனின் எம்.எல்.ஏ.க்கள் இருவர், தலைமைச் செயலகத்துக்கு ‘ஜம்’மென்று வந்தோமா, அம்மாவை சந்தித்துவிட்டு, ‘கம்’மென்று திரும்பினோமா என்று போயிருப்பது, தமிழக அரசியலை ஒரு உலுக்கு உலுக்கி விட்டுள்ளது.
இவர்களை அம்மாவை சந்திக்க ‘கம் கம்’ என்று அழைத்துவந்தது, ஒரு அ.தி.மு.க. அமைச்சர் என்று தெரிகிறது.
“இவர்கள் இருவரும், அ.தி.மு.க.-வின் இணைந்து, ‘சட்டமன்ற போட்டிகோ ரேஸ் அணி’யில் இணைந்து கொள்ள போகிறார்களா?” இந்தக் கேள்விக்கு, நேரடியாகவோ, மறைமுகமாகவோ கருத்து தெரிவிக்க மறுத்து நழுவினர் இருவரும். ஆனால் போகிற போக்கில், “அம்மா சூப்பரா ஆட்சி செய்றாக” என்று சிலாகித்துவிட்டு சென்றார்கள்.
இவர்களது தற்போதைய தலைவரான கேப்டன், “அம்மா ஆட்சி சுத்த மோசம்” என்று கூறிவரும் நிலையில், அதற்கு தலைகீழான கருத்தை இவர்கள் தெரிவித்திருப்பதால், இவர்கள் இருவரும் விரைவில் அ.தி.மு.க.,வில் இணைவது கிட்டத்தட்ட கன்பர்ம்ட்.
ஆளுங்கட்சி அ.தி.மு.க.-வுக்கு சபாநாயகருடன் சேர்த்து 151 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சமத்துவ மக்கள் கட்சி உறுப்பினர்கள் இருவரும் அடங்குவர். எதிர்க்கட்சியான தே.மு.தி.க.-வுக்கு 29 எம்.எல்.ஏ.க்களும், தி.மு.க.-வுக்கு 23 எம்.எல்.ஏ.-க்களும் இருக்கின்றனர்.
மொத்தம் 234 உறுப்பினர்களை கொண்ட தமிழக சட்டப்பேரவையில், 29 எம்.எல்.ஏ.க்களை கொண்டுள்ள தே.மு.தி.க.-வில் இருந்து 6 எம்.எல்.ஏ.-க்கள் விலகினால் மட்டுமே அக்கட்சி, எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்க நேரிடும்.
மீதி 4 பேர் எங்கே அமைச்சரே?

கருத்துகள் இல்லை: