புதன், 24 அக்டோபர், 2012

தேசியத் தலைவருக்கு தலையிலே துண்டு விழுந்தது எப்படி? டிரைவர் பெயரில்கூட சொத்து!

Viruvirupu
பா.ஜ.க., சகட்டு மேனிக்கு எல்லோர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகளை வாரி வீசிக்கொண்டுள்ள நிலையில், அக் கட்சியின் தேசிய தலைவர் கட்காரி மீதான அடுக்கடுக்கான புகார்கள் வந்து தலைசுற்ற வைக்கின்றன. அதையடுத்து, அவரது வர்த்தக நடவடிக்கைகள் கடும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, அவர் நிர்வகிக்கும் புத்ரி மின் மற்றும் சர்க்கரை ஆலைக்கு பணம் எங்கிருந்து வருகின்றது என்ற விஷயம், கண்காணிக்கப்பட தொடங்கியுள்ளது.
நிதின் கட்காரி, பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக (National Chairperson), 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர். மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த இவருக்கு எதிராக பல்வேறு ஊழல் புகார்களை, ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ அமைப்பின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார். முக்கியமாக, மகாராஷ்டிர மாநில நீர்பாசனத் துறையில் நடந்த ஊழலில் கட்காரிக்கு மிகப்பெரும் பங்கு உண்டு என கெஜ்ரிவால் குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கு கட்காரி தரப்பிலிருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த விவகாரம் அப்படியே இருக்க, தற்போது கட்காரியின் வர்த்தக தொடர்புகள் குறித்த பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

கட்காரி தேசியத் தலைவர் ஆவதற்கு முன்பு, மாநில அரசியலில் இருந்தவர். கடந்த 1995-ம் ஆண்டு முதல் 1999-ம் ஆண்டு வரை, மகாராஷ்டிராவை ஆட்சி செய்த சிவசேனா பா.ஜ.க. கூட்டணி அரசில் கட்காரி பொதுப்பணித்துறை அமைச்சராக பணியாற்றினார். கட்காரியின் ஊழல் நடவடிக்கைகள் அப்போதே தொடங்கி விட்டதாக, இப்போது குற்றம் சாட்டப்படுகிறது.
கட்காரி பொதுப்பணித்துறை அமைச்சராக பணியாற்றிய காலத்தில், பெரும் ரியல் எஸ்டேட் நிறுவனமான ஐடியல் ரோடு பில்டர்ஸ் என்ற நிறுவனத்திடமிருந்து கட்காரியின் நிறுவனம் ஏராளமான தொகை கடனாக பெற்றுள்ளது. தனது பதவியை பயன்படுத்தி அந்நிறுவனத்திற்கு ஏராளமான கான்டிராக்ட்டுகளை கட்காரி வழங்கியதாகவும், அதற்கு பிரதிபலனாக ஐடியல் ரோடு நிறுவனம் கட்காரியின் நிறுவனத்திற்கு நிதியுதவி செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஐடியல் ரோடு நிறுவனம் மட்டுமல்லாமல், நாட்டின் 4 முக்கிய நகரங்களில் உள்ள சுமார் 16 கம்பெனிகள் கட்காரியின் நிறுவனத்தில் பெருமளவு முதலீடு செய்துள்ளதாக தகவல்கள் உள்ளன.
கட்காரி நிறுவனத்தின் 2010 மற்றும் 2011ம் ஆண்டு கணக்குகளை ஆராய்ந்ததில் அதில் பங்குதாரர்களாக உள்ளவர்கள் குறித்த சுவையான மற்றும் ஆச்சர்யமான தகவல்கள் தெரியவந்துள்ளன. கட்காரியின் டிரைவர், அவரது அக்கவுண்டன்ட் மற்றும் அவரது நிறுவனத்தில் பணியாற்றும் இரு ஊழியர்கள் ஆகியோர் கட்காரியின் நிறுவனத்தில் பங்குதாரர்களாக உள்ளனர்.
இதே போல் பெரும் விமர்சனத்துக்குள்ளான புத்ரி மின் மற்றும் சர்க்கரை ஆலையில் கட்காரிக்கு உள்ள பங்கு ரூ. 3100 மதிப்பிலான 310 பங்குகள் மட்டுமே என்பது ஆச்சர்யமான தகவல்.
அதாவது, அவரது சொந்த நிறுவனம் என்று அறியப்பட்ட பல கோடி மதிப்புள்ள மின் மற்றும் சர்க்கரை ஆலையில் கட்காரி வெறும் 9 லட்சம் ரூபா மட்டுமே முதலீடு செய்திருப்பதாக ‘கணக்கு’ காட்டப்பட்டுள்ளது.
நிலைமை கட்காரிக்கு சாதகமாக இல்லை. இந்த விவகாரம் கட்சியின் கழுத்தை நெரித்தால், கட்காரியை கழுத்தை பிடித்து வெளியே தள்ளுவதைவிட பா.ஜ.க.-வுக்கு வேறு வழி இருக்கப்போவதில்லை.
அவர்களென்ன காங்கிரஸ் கட்சியா, தலைவரை வெளியே அனுப்ப முடியாத நிலையில் திணறுவதற்கு? தலையிலே துண்டு போட்டவரை, தலையைச் சுற்றி வீசிவிடுவார்கள் (என்று எதிர்பார்க்கிறோம்)

கருத்துகள் இல்லை: