செவ்வாய், 23 அக்டோபர், 2012

பஞ்சாயத்து தோல்வியில் முடிந்துள்ளது பழனி மாணிக்கம் டி.ஆர்.பாலு

தி.மு.க.,வைச் சேர்ந்த, மத்திய அமைச்சர் பழனி மாணிக்கத்திற்கும், டி.ஆர்.பாலு எம்.பி.,க்கும் இடையிலான மோதலை, முடிவுக்குக் கொண்டு வர, பஞ்சாயத்திற்கு வருமாறு, கருணாநிதி விடுத்த அழைப்பை, டி.ஆர்.பாலு ஏற்க மறுத்து விட்டார்.கருணாநிதியின் அனுமதியின்றி, டி.ஆர்.பாலுவை விமர்சித்து, பழனி மாணிக்கம் பேட்டியளித்தாரா என்ற கேள்வி, தி.மு.க., வட்டாரத்தில் எழுந்துள்ளது. கட்சியில் நடக்கும், மோதலின் பின்னணி புரியாமல், அப்பாவி தி.மு.க., தொண்டர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். அதிருப்தி
தஞ்சாவூர் லோக்சபா தொகுதியை குறி வைத்து, டி.ஆர்.பாலு மேற்கொண்டு வரும் பணிகளால், அத்தொகுதியின் தற்போதைய எம்.பி.,யும், அமைச்சருமான பழனி மாணிக்கம், அதிருப்தி அடைந்தார். இவ்விருவருக்கும் இடையேயான மோதல், உச்சகட்டத்தை எட்டியது. பிரச்னை களை கட்சி தலைமையின் கவனத்துக்கு கொண்டு செல்லாத பழனி மாணிக்கம், பத்திரிகைகளுக்கு கொண்டு சென்றதால், தி.மு.க., தலைமை சங்கடத்துக்கு உள்ளானது.இருவருக்கும் இடையே யான, மோதலை முடிவுக்குக் கொண்டு வர, சென்னை சி.ஐ.டி., காலனியில் உள்ள, கனிமொழியின் வீட்டில், நேற்று முன்தினம், பஞ்சாயத்தை கூட்டினார் கருணாநிதி. பழனி மாணிக்கம், டி.ஆர்.பாலு ஆகிய இரு வருக்கும், கருணாநிதி அழைப்பு விடுத்தார்.


பஞ்சாயத்து

பழனி மாணிக்கம், கனிமொழியின் ஆதரவாளர், எனவே, சி.ஐ.டி., காலனி வீட்டில் பஞ்சாயத்து நடந்தால், ஒரு சார்பாக இருக்கும். அதனால், நான் பஞ்சாயத்துக்கு வர முடியாது. இது, கட்சிப் பிரச்னை. கட்சி அலுவலகமான அறிவாலயத்தில், பஞ்சாயத்தை நடத்தினால் வருகிறேன் என டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.பழனி மாணிக்கம் மட்டும் சென்னை வந்து, கருணாநிதியிடம் விளக்கமளித்துள்ளார். பாலு வராததால், கருணாநிதி கூட்டிய பஞ்சாயத்து தோல்வியில் முடிந்துள்ளது. இது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத, முன்னணி தி.மு.க., பிரமுகர் ஒருவர் கூறியதாவது:டி.ஆர்.பாலு மீது தவறு இருந்தால், அதை கட்சித் தலைமையிடம் தான் பழனி மாணிக்கம் தெரிவித்திருக்க வேண்டும். அதை விடுத்து, பத்திரிகைகளில் பேட்டியளித்தது எப்படி என்ற கேள்வி, கட்சி நிர்வாகிகளால் எழுப்பப்பட்டுள்ளது.பழனி மாணிக்கம் - பாலுவுக்கு இடையேயான மோதலில், டி.ஆர். பாலுவுக்கு ஆதரவாக ஸ்டாலின் களமிறங்கி உள்ளார். ஸ்டாலினுக்கு "செக்'
"சி.ஐ.டி., காலனியில் நடக்கும் பஞ்சாயத்துக்கு போக வேண்டாம்' என, ஸ்டாலின் தரப்பில் விடுக்கப்பட்ட உத்தரவால் தான், பாலு செல்லவில்லை.இளைஞரணி நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில், ஸ்டாலின் கை ஓங்கியிருப்பதை, தி.மு.க.,வின் இரண்டாம் கட்ட தலைவர்கள் விரும்பவில்லை. குறிப்பாக, தங்களது வாரிசுகளுக்கு இளைஞரணியில் பதவி கிடைக்காததால், அதிருப்தியடைந்த இவர்கள், கருணாநிதியிடம் புகார் கூறியுள்ளனர்.அதோடு, அழகிரி, கனிமொழி தரப்பும், இவ்விவகாரத்தில் தங்களின் வருத்தத்தை கொட்டிஉள்ளனர். இதனால், ஸ்டாலினுக்கு, "செக்' வைக்கும் வகையில், கட்சித் தலைவரே, பழனி மாணிக்கம் மூலமாக, இந்த நாடகத்தை ஏற்பாடு செய்ததாகக் கூறப்படுகிறது.பழனி மாணிக்கத்தை, டி.ஆர். பாலுவுக்கு எதிராக பேட்டி கொடுக்க வைத்து, அதன் மூலம் பஞ்சாயத்துக்கு இருவரையும் அழைத்து, கட்சியில் தன் செல்வாக்கை நிலை நிறுத்த திட்டமிட்டு, இந்த விவகாரத்தை தலைவர் கிளப்பியுள்ளார் என்ற கருத்து, கட்சி வட்டாரத் தில் உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.தி.மு.க.,வில் பல முறை கோஷ்டி தகராறுகள் நடந்தாலும், வெளிப்படையாக பேட்டி கொடுப்பதை, பெரும்பாலும் தி.மு.க., பிரமுகர்கள் தவிர்த்து வந்துள்ளனர்.

பின்னணி:

கட்சி தலைமையிடம் முறையிடாமல், வெளிப்படையாக கருத்து தெரிவித்தால், கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன.எம்.ஜி.ஆர்., வைகோ போன்ற பலமான தலைவர்களை கூட, இந்த காரணங்களுக்காக, கட்சித் தலைமை வெளியேற்றிஉள்ளது. அப்படியிருக்க, தற்போது, கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர் களிடையே எழுந்து உள்ள மோதலின் பின்னணி புரியாமல், தி.மு.க., தொண்டர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.


என் தூக்கம் போச்சு':
தி.மு.க., தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை: தி.மு.க., முன்னோடிகள், ஒருவருக்கொருவர் குழு சேர்த்துக் கொண்டு, தஞ்சை மாவட்டத்திலே மோதிக் கொள்கின்றனர் என்ற செய்தி, என்னை சாப்பிட விடாமலும், இரவு முழுவதும் தூங்க விடாமலும் செய்து விடுகிறது.பழனி மாணிக்கம் அளித்த பேட்டி பற்றி, டி.கே.எஸ்.இளங்கோவனும், செல்வமும் என்னிடம் வந்து கூறியவுடன், "இன்றிரவு என் தூக்கம் போச்சு' என்று கூறினேன். அது போலவே, இரவு முழுவதும் நான் உறங்கவில்லை.சில கட்சிகளின் தலைமையைப் போல, எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும், கட்சிக்காக உழைத்தவர்களாக இருந்தாலும், மூத்தவர்களாக இருந்தாலும், கண நேரத்தில், "கட்டம்' கட்டி விடுகின்றனர்.என்னால், அப்படி கடினமாக இருக்க முடிவதில்லை. அதையே காரணமாகக் கொண்டு, தாங்கள் எது வேண்டுமானாலும் செய்யலாம் எனக் கருதினால், பின்னர், நான் என்ன தான் செய்ய முடியும்.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
- நமது சிறப்பு நிருபர்

கருத்துகள் இல்லை: