திங்கள், 22 அக்டோபர், 2012

கொத்தடிமையாக குழந்தை தொழிலாளர்கள் ..அதிகாரிகள் உடந்தை?

ஈரோடு மாவட்டத்தில் கொத்தடிமையாக பணியாற்றி, 151 குழந்தைகள் மீட்கப்பட்ட நிலையில், பல ஆண்டாக அதிகாரிகள் சோதனையில் இறங்காதது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு, கருங்கல்பாளையம், ராஜகோபால் தோட்டத்தில், பெயரில்லாத நூல் மில் மற்றும் இதன் சார்பு நிறுவனம், சோலார், தனலட்சுமி சிந்தடிக்ஸ் (பி) லிட் மில்லில் இருந்து, 138 கொத்தடிமை குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.மூலப்பட்டறையை சேர்ந்த, சுரேஷ், இரண்டு மில்களின் உரிமையாளர். ஆனால், "கருங்கல்பாளையம் யூனிட், கருப்புசாமி, செந்தில் மற்றும் மணிகண்டன் ஆகியோர், ஒப்பந்த அடிப்படையில் நடத்துவதாகவும், சோலார் மில்லை மட்டும் தான் நடத்துகிறேன்' என, உரிமையாளர் சுரேஷ் தெரிவித்தார்.

புதிதாக ஒரு தொழிற்சாலை துவங்கி, அதற்கு மின் இணைப்பு பெறும்போது, நிறுவனத்தின் பெயர், உரிமையாளர் பெயர், மாவட்ட தொழில் மையம், தொழிலாளர் துறை, தொழிற்சாலை ஆய்வாளர், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தீயணைப்பு துறை, வருவாய் துறை, மாநகராட்சி அதிகாரிகளிடம், அனுமதி பெற்றிருக்க வேண்டும்.அரசு துறைகளின் அனுமதி கடிதத்தை இணைத்தால் மட்டுமே, தொழிற்சாலை நடத்த, மும்முனை மின் இணைப்பு வழங்கப்படும். ஆனால், கருங்கல்பாளையத்தில் இயங்கிய பிரச்னைக்குரிய மில்லை நடத்தியவர்கள், பல தவறான தகவலை கொடுத்து, அனுமதி பெற்றும், அதிகாரிகளை மில்லுக்குள் வராமல், "கவனித்தும்' வந்துள்ளனர்.

மத்திய கலால் வரி துறை பதிவு, கணக்கு, வருகை பதிவேடு, இயற்கை இடர்பாட்டுக்கான மீட்பு உபகரணங்கள் என, ஏதுமில்லை.நான்கு ஆண்டுக்கும் மேல், குழந்தை தொழிலாளர்களை கொண்டு மில்லை நடத்தியதாலும், மில் உரிமையாளரின் முறைகேட்டால், அரசுக்கும் பல லட்சம் ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது.குழந்தைகளை மீட்டபோது அங்கு வந்த, ஈரோடு தொழிற்சாலை ஆய்வாளர் சபீனா, "இதுபோன்ற மில் செயல்பட்டது எனக்கு தெரியாது' என, கூறி விசாரிக்க முயன்றார்.அப்போது, குறுக்கிட்ட கலெக்டர் சண்முகம், "உங்கள் வேலையை, நீங்கள் சரியாக செய்யவில்லை; இப்போது என்ன செய்ய வேண்டுமோ, அதை மட்டும் செய்யுங்கள்' என, எச்சரித்தார்

.தீயணைப்பு துறை நிலைய அலுவலர் ராமச்சந்திரன், "கருங்கல்பாளையம் பகுதியில், அனுமதியின்றி செயல்பட்ட மில்லில் ஆய்வு செய்யப்படும்; பாதுகாப்பு கருவிகள் இல்லாத பட்சத்தில், மேல் நடவடிக்கை எடுக்க, தொழிற்சாலை ஆய்வாளர், மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும்' என்றார்.ஆர்.டி.ஓ., சுகுமார், "தற்போது பயிற்சிக்காக வெளியூரில் உள்ளேன். குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்ட தொழிற்சாலையை, ஆய்வு செய்து, உரிமையாளர் மீதும், மில்லின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.குழந்தை தொழிலாளர் ஒழிப்புக்காக பல விழிப்புணர்வு நிகழ்ச்சி, விளம்பரங்களை செய்யும் அரசும், அதிகாரிகளும், நூற்றுக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்ட நிலையில் கூட, அந்நிறுவனம் மீதும், உரிமையாளர், ஒப்பந்தக்காரர்கள் மீதும் நடவடிக்கை எடுக்காமல், "வழக்கமான பேச்சுவார்த்தை' நடத்துவது, அரசின் மீதான நம்பகத்தன்மையை இழக்கச் செய்கிறது.குறிப்பாக, ஈரோடு மாவட்ட அதிகாரிகளின் செயல்பாடு வெட்டவெளிச்சமாகி உள்ளது.

- நமது நிருபர்

கருத்துகள் இல்லை: