சனி, 27 அக்டோபர், 2012

குடிகாரக் கட்சியை உடைக்க புரட்சித்தலைவி முயற்சி

கருணைப் பெருங்கடலான காவியத்தாய்
முதல்வர் என்கிற பதவிக்கே பெருமை சேர்க்கும் முதல்வராக மாண்புமிகு தங்கத்தாரகை டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் விளங்குகிறார்கள். அவரது கருணைப்பார்வையில் தமிழகம் உலகின் நெ.1 மாநிலமாக விளங்குகிறது. அதனால்தான் லக்கிலுக் என்கிற பதிவர்கூட “புரட்சித்தலைவி தாயுள்ளம் கொண்டவர் என்பதிலோ, கருணைக்கடல் என்பதிலோ ஐயம் இருந்தால்கழுவில் ஏற்றப்பட தகுதியானவர்கள் ஆவோம்” என்று ஒபாமாவுக்கே அரசியல் பாடம் எடுக்கும் தங்கத்தாரகை டாக்டர் அம்மாவைப் பற்றி புகழ்ந்து எழுதியிருக்கிறார்.
கடந்த தேர்தலில் திருவாரூர் திம்மியான தீயசக்தியை ஓட ஓட விரட்டி, எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு கூட வக்கில்லாதவாறு அம்மா முடக்கினார் என்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது. மக்கள் மீது கருணை கொண்டே கருணைப் பெருங்கடலான காவியத்தாய் இத்தகைய இரும்புக்கர நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியிருந்தது. இதனால் வேறுவழியில்லாமல் குடிகார கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தையும், போனால் போகிறதென்கிற கருணைப்பார்வையோடு தாயுள்ளம் கொண்ட தமிழக முதல்வரும், புரட்சித்தலைவியும், கழகப் பொதுச்செயலாளருமான காவிரி தந்த கலைச்செல்வி வழங்கியிருந்தார்.



ஆனால் இந்த சிறிய பொறுப்பைகூட ஒழுங்காக செய்ய துப்பில்லாமல், சட்டமன்றத்துக்கு வந்தால் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மாவை எதிர்கொள்ள வேண்டுமே என்கிற அச்சத்தில் எதிர்க்கட்சித்தலைவர், சட்டமன்றத்தை ‘கட்’ அடித்துவிட்டு சத்யம் தியேட்டரில் பகல் காட்சி படம் பார்க்கச் சென்றுவிடுகிறார். இது ஜனநாயகத்துக்கு எதிரானது என்று மக்கள் தொடர்ச்சியாக மாசேதுங்கின் மறுபிறவியான மாண்புமிகு தங்கத்தாரகையிடம் நித்தம் நித்தம் புகார் மனு வாசிக்கிறார்கள்.
ஜனநாயகம் என்பது ஆட்சிக்கு மட்டுமல்ல, அதிமுகவுக்கும் என்பது அம்மாவின் நிலைப்பாடு. எனவேதான் உலகில் எங்குமே இல்லாத அதிசயமாக கழகத்தின் மாவட்டச் செயலாளர்களும், நிர்வாகிகளும் அம்மாவால் ஜனநாயகப் பூர்வமாக நியமிக்கப்படுகிறார்கள். ஜனநாயகத்துக்கு இவ்வளவு மதிப்புத் தரும் புரட்சித்தலைவியின் பொற்கால ஆட்சியில், ஜனநாயகத்தின் கழுத்தை நெரிக்கும் செயலை குடிகாரக்கட்சி மேற்கொள்ளுமேயானால், அதை எப்படி புரட்சித்தலைவி அம்மா அனுமதிக்க முடியும்?
ஆகையால் குடிகாரக் கட்சியில் இருந்தாலும் ‘ஸ்டெடி’யாக இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களை கடந்த இருதினங்களாக அம்மா சந்தித்து மக்கள் பிரச்சினைகளைப் பேசுகிறார். இதனால் அக்கட்சி உடையுமேயானால், அதற்கு பொறுப்பேற்க வேண்டியது அம்மாவால் வாழ்வு பெற்ற குடிகாரத் தலைவரே அன்றி, அம்மாவோ அம்மாவின் லட்சோப லட்சம் தொண்டர்களோ அல்ல.
இப்போதைக்கு திம்மி கட்சியின் தளபதியை எதிர்க்கட்சித் தலைவராக ஜனநாயகப் பூர்வமாக நியமிக்க புரட்சிக்கே பெருமை சேர்க்கும் புரட்சித்தலைவி முடிவெடுத்திருக்கிறார். பரிதாபகரமான நிலையில் இருக்கும் திம்மி கட்சி மீதான புரட்சித்தலைவியின் கருணைப்பார்வையாகதான் இதைப் பார்க்க வேண்டும். இந்த அரிய உண்மையை ஆராயாமல் குடிகாரக் கட்சியை உடைக்க புரட்சித்தலைவி முயற்சியெடுக்கிறார் என்று யாராவது எழுதுவார்களேயானால் அவதூறு வழக்கு தொடுக்கவே அவதாரம் எடுத்திருக்கும் நாம் அனுமதிக்க முடியாது என்கிற எச்சரிக்கையை மட்டும் இங்கே சொல்லிக் கொள்கிறோம்.

வாழ்க டாக்டர் புரட்சித்தலைவி அம்மாவின் ஸ்ரீராமராஜ்யம்.

கருத்துகள் இல்லை: