சனி, 18 ஆகஸ்ட், 2012

பத்மா சேஷாத்திரி திருமதி ஒய்ஜிபியை கைது செய்து கொலை வழக்கு போடு!

கொலையான மாணவன் ரஞ்சன் – பத்மா சேஷாத்ரி பள்ளியின் தாளாளர் திருமதி ஒய்ஜிபி
திருமதி ஒய்ஜிபி-யின் பத்மா ஷேசாத்திரி பள்ளி சென்னையில் இருக்கும் பிரபலமான மேட்டுக்குடி பள்ளியாகும். இதன் கேகேநகர் கிளையில் நேற்று காலை நீச்சல் பயிற்சியின் போது நான்காம் வகுப்பு மாணவன் ரஞ்சன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருக்கிறான். வகுப்பு நடக்கும் போது முறையான பயிற்சியாளர் எவரும் அருகிலில்லை. இத்தகைய பள்ளிகள் மேட்டுக்குடியினரிடம் அதிக பணம் வாங்கி நடத்தபடுபவை என்றாலும் இலாபம் என்பதுதான் அவர்களது உயிர் மூச்சு. அதன்படி எதற்கு முறையான நீச்சல் பயிற்சியாளர் என்று அந்தப் பதவிகளை வெட்டி இருக்கக் கூடும்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்தப்பள்ளியின் ஆசிரியர்கள் குறைந்த சம்பளத்தில் கொடுமைப்படுத்தப்படுவதை எதிர்த்து போராடியதை இங்கே நினைவுபடுத்திக் கொள்வோம். ஆசிரியர்களுக்கே இதுதான் கதியென்றால் நீச்சல் பயிற்சியாளரெல்லாம் உரிய தகுதிகளுடன், அதிக சம்பளத்துடன் நிச்சயம் இருக்கமாட்டார்கள் என்பது திண்ணம்.

மேலும் சமச்சீர் கல்வி வருவதை எதிர்த்து முழுமூச்சுடன் போராடிய பார்ப்பன- மேட்டுக்குடி கூட்டத்திற்கு இந்த பள்ளியின் தாளாளர்தான் தலைமை தாங்கினார். ஆக கல்வியில் தனியார் மயத்தின் கொள்ளையை தடையின்றி நடத்தும் மற்ற கொள்ளையர்களுக்கு இந்த அம்மையார்தான் முன்னோடி.
சிறுமி சுருதி கொலையில் சியோன் பள்ளியின் தாளாளர் விஜயனை கைது செய்த போலீசு இங்கே திருமதி ஒய்ஜிபியை கைது செய்யவில்லை. வெறுமனே பயிற்சியாளர், உதவி பயிற்சியாளர்களை மட்டும் பேருக்கு கைது செய்திருக்கிறது. முழுப்பழியையும் இவர்கள் மீது போட்டு ஏதாவது தண்டனை வாங்கி வழக்கை ஊத்தி மூடிவிடுவார்கள். ஆகவே திருமதி ஒய்ஜிபையை கைது செய்து கொலை வழக்கு போடுவதுதான் தனியார் பள்ளிகளில் மாணவர் உயிரிழக்கும் சம்பவங்களை தடுத்து நிறுத்தும் என்கிறார் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில அமைப்பாளர் கணேசன். அவரிடம் நேற்று கலைஞர் டீவி கண்ட நேர்காணலை இந்த வீடியோவில் காணலாம்.

கருத்துகள் இல்லை: