புதன், 15 ஆகஸ்ட், 2012

6 துணை நடிகைகள் உள்பட 23 இளம்பெண்கள் மீட்பு

சென்னை: நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படவிருந்த 23 இளம்பெண்களை போலீசார் மீட்டனர்.
கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் அருகே உள்ள சர்தார் பட்டேல் ரோட்டில் ஒரு சொகுசு பஸ் நிற்பதாகவும் அதற்குள் இளம்பெண்கள் பலர் இருப்பதாகவும் சி.பி.சி.ஐ.டி. விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த இடத்திற்கு சென்று பஸ்ஸை சுற்றி வளைத்து விசாரணை நடத்தியதில் அதில் இருந்த பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட கட்டாயப்படுத்தப்பட்டது தெரிய வந்தது.
பேருந்தில் திருவான்மியூரைச் சேர்ந்த சாய்சாது, ஆவடியைச் சேர்ந்த தமீம் அன்சாரி, பூந்தமல்லியைச் சேர்ந்த கற்பகம், ஸ்டெல்லா மற்றும் 7 பெண் புரோக்கர்கள் இருந்தனர். மேலும் 23 இளம்பெண்கள் இருந்தனர். விசாரணையில் அந்த புரோக்கர்கள் அதிக சம்பளத்தில் நல்ல வேலை வாங்கித் தருவதாகக் கூறி அந்த இளம் பெண்களை ஏமாற்றி அழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தவிருந்தது தெரிய வந்தது.

அதில் ஒரு பெண் சேலத்தைச் சேர்ந்தவர். சென்னையில் தங்கி வீட்டு வேலை செய்து வந்த அந்த பெண்ணுக்கு 16 வயது தான் ஆகிறது. மீட்கப்பட்ட இளம்பெண்களில் 6 பேர் வடபழனி, போரூர், எம்.ஜி.ஆர்.நகர் பகுதிகளைச் சேர்ந்த துணை நடிகைகள். மேலும் 3 பேர் பெங்களூர், ஹைதராபாத் மற்றும் புதுவையைச் சேர்ந்தவர்கள். அண்ணா பல்கலைக்கழகம் அருகே பஸ்ஸை நிறுத்திய புரோக்கர்கள் அந்த பெண்களிடம் உங்களை எல்லாம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீட்டுக்கு அழைத்துச் செல்கிறோம். அங்குள்ள வெளிநாட்டவர்கள் முன்பு நடனம் ஆடி அவர்களுக்கு பிடித்தவாறு நடந்தால் வெறும் 3 நாளில் ரூ.90,000 வரை சம்பாதிக்கலாம் என்று தெரிவித்தனர்.
இதைக் கேட்ட இளம்பெண்கள் அதிர்ச்சி அடைந்து தகராறு செய்தபோது தான் போலீசார் அங்கு வந்துள்ளனர். புரோக்கர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட 23 பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
புரோக்கர்களை விசாரித்தபோது, பண்ணை வீட்டில் ஒருவர் விருந்து கொடுக்கிறார். அவரிடம் தான் 23 பெண்களையும் ஒப்படைக்கவிருந்தோம் என்றனர். விருந்து கொடுத்தவர் யார் அதன் பின்னணி என்ன என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்.

கருத்துகள் இல்லை: