சனி, 18 ஆகஸ்ட், 2012

போலீஸ் திருமதி ஒய்.ஜி.பி. பக்கமே செல்லவில்லை

சென்னை செல்வாக்கு பள்ளி மரணம்: முதல்வர் ஷீலா கைதும்.. உடனடி ஜாமீனும்!

Viru News
நீச்சல் பயிற்சியின் போது 4-ம் வகுப்பு மாணவன் ரஞ்சன் பலியான சம்பவம் தொடர்பாக சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி முதல்வர் ஷீலா ராஜேந்திரன் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். உடனே, இரவோடு இரவாக ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
சென்னை கே.கே.நகர் அழகிரிசாமி தெருவில் உள்ள பத்ம சேஷாத்திரி பள்ளியில் நேற்று முன்தினம் நடந்த இந்த துயர சம்பவம் தொடர்பாக ஆரம்ப கட்ட விசாரணையை முடித்துள்ளனர் கே.கே.நகர் போலீஸார். அதையடுத்து, ஜாமீனில் வெளியில் வரக் கூடிய இந்திய தண்டனை சட்டம் 304 ஏ என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இதற்குமுன், பள்ளிச் சிறுமி ஸ்ருதி இறந்த வழக்கிலும், ஜேப்பியாருக்கு சொந்தமான கல்லூரி கட்டிடம் இடிந்த விவகாரத்திலும், பள்ளி உரிமையாளர்களை கைது செய்ய வேண்டும் என்ற குரல்கள் பரவலாக ஒலித்தன. கைது செய்யப்பட்ட ஜேப்பியார், இன்னமும் விடுவிக்கப்படவில்லை.
இதனால், பத்மா சேஷாத்ரி பள்ளி உரிமையாளர் திருமதி ஒய்.ஜி.பி. எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படுவார் என்ற பேச்சு ஒன்று இருந்தது. அவருக்கு உள்ள செல்வாக்கு காரணமாக இந்த விவகாரம் அண்டர்-பிளே பண்ணப்படும் என மற்றொரு கருத்தும் இருந்தது.
விசாரணையின்போது, போலீஸ் பள்ளி உரிமையாளர் திருமதி ஒய்.ஜி.பி. பக்கமே செல்லவில்லை. பள்ளியின் நீச்சல் பயிற்சி மாஸ்டர் ராஜசேகரன், உடற்பயிற்சி மாஸ்டர் ரவிச்சந்திரன், நீச்சல் குள பொறுப்பாளர் ரெங்காரெட்டி, உதவியாளர் அருண்குமார், துப்புரவு தொழிலாளி ரவி ஆகிய 5 பேரை விசாரித்தனர்.

நேற்று முன்தினம் இரவு இந்த 5 பேரையும் கைது செய்த போலீசார், சைதாப்பேட்டையில் உள்ள மாஜிஸ்திரேட் வீட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
அந்த இடத்திலேயே 5 பேர் சார்பிலும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை ஏற்றுக் கொண்ட மாஜிஸ்திரேட், 5 பேரையும் ஜாமீனில் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
நேற்று காலையில் இன்ஸ்பெக்டர் மோகனசுந்தரம் பள்ளிக்குச் சென்று தாளாளர் இந்திரா வைத்தியநாதன், முதல்வர்  ஷீலா ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். அதன்பின், பள்ளி முதல்வர் ஷீலாவை நேற்றிரவு கே.கே.நகர் போலீசார் கைது செய்தனர்.
அவரும் ஜாமீனில் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டார்.

கருத்துகள் இல்லை: