வியாழன், 16 ஆகஸ்ட், 2012

அ.தி.மு.க அடிமைகள் கூட்டமே ஜெயாவின் காலில்

முகுல்-ராய்-சிவப்பு-கம்பள-வரவேற்புபிணங்களுக்கும் பரிதாபத்துக்குரிய மரண ஓலங்களுக்கும் மத்தியில் அதனை துக்கம் விசாரிக்க வந்தவருக்கு பன்னீர் தெளித்து பால் பாயாசம் கொடுத்து விருந்தோம்பும் கேவலம் தமிழர்களின் உன்னதப் பண்பாட்டைக் காட்டுகிறதா?








சொகுசு இரயிலும் – சிவப்பு கம்பளமும்
ஜூலை மாத இறுதியில் நடந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் 32 பேர் கருகி பலியானது நினைவிருக்கிறதா? தீயணைப்புக் கருவிகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேன்மக்கள் பயணம் செய்யும் பெட்டிகளுக்குத்தான் என்பது அவ்விபத்தை ஒட்டி வெளிவந்த பல செய்திகளின் மூலமே தெரியவந்தது. முதல் வகுப்பு இரண்டாம் வகுப்பு வேறுபாடு என்பது ஏழை உயிருக்கும் பணக்கார உயிருக்குமான வேறுபாடாகவும் இருப்பதை அறிந்து பலர் கொதித்தனர்.

விபத்து நடந்து 12 மணிநேரம் கழித்து பார்வையிட வந்தார் ரயில்வேத் துறை அமைச்சர் முகுல் ராய். சென்னையிலிருந்து நெல்லூருக்கு 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு ரயில்பெட்டியில் பயணித்து விட்டு, மீண்டும் சென்னை திரும்பிய போது, சென்ட்ரல் ரயில்நிலையத்தின் நடைமேடைகளைக் கழுவிச் சுத்தமாக்கி, வாசனைத் திரவியம் தெளித்து, சிவப்பு கம்பளம் விரித்து அவரை வரவேற்றிருக்கிறார்கள் தென்னக ரயில்வே அதிகாரிகள்! அமைச்சரின் நடத்தை இருக்கட்டும், அவருக்கு சிவப்புக் கம்பளம் விரித்த அதிகாரிகளின் நடத்தையை என்ன சொல்வது? பிணங்களுக்கும் பரிதாபத்துக்குரிய மரண ஓலங்களுக்கும் மத்தியில் அதனை துக்கம் விசாரிக்க வந்தவருக்கு பன்னீர் தெளித்து பால் பாயாசம் கொடுத்து விருந்தோம்பும் இந்தக் கேவலம் தமிழர்களின் உன்னதப் பண்பாட்டைக் காட்டுகிறதா?
இதே விபத்து மே.வங்கத்திலோ அல்லது கேரளத்திலோ நடந்திருந்தால் அங்கே எந்த அதிகாரியாவது இப்படியொரு சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்திருக்கக் கூடுமா?  தமிழன்தான் இளித்தவாயன், வடவர் ஆதிக்கம் என்று இனவாதிகள் தயார் நிலையில் வைத்திருக்கும் விடையை வழங்கக் கூடும். அது விடையல்ல, விடையைப் புரிந்து கொள்ள முடியாமல் தமிழ்மக்களின் மூளையை மறிக்கின்ற தடை.
வெற்றுச் சவடால், ஜம்பம், எதிரி கையை ஓங்குவதற்கு முன்னரே சரணடைதல், அதிகாரத்துக்குப் பல்லிளித்தல், பணிந்து கும்பிட்டு விழுதல் என்ற இந்த அடிமைக் கலாச்சாரம்தான் தமிழகத்தின் அரசியல் கலாச்சாரமாகிவிட்டது. மற்ற மாநிலங்களின் அரசியலும் பண்பாடும் உன்னதத்தில் உள்ளதாக இதற்குப் பொருள் அல்ல. இத்தகைய அருவெறுக்கத்தக்க அடிமைத்தனம் வேறு எங்கும் இல்லை என்பதே இதன் பொருள்.
அ.தி.மு.க அடிமைகள் கூட்டமே ஜெயாவின் காலில் விழுகிறது. அதிகாரிகளும் துணை வேந்தர்களும் ஜெயலலிதாவின் முன்னால் விநோதமான முறையில் உடம்பை மடித்தவாறு நிற்கப் பழகியிருக்கிறார்கள். இத்தகைய காட்சிகளை இந்தியாவில் வேறு எங்கே காணமுடியும்? வேறு எந்த முதலமைச்சராவது தலைநகரை விட்டு சுற்றுலாமைய மாளிகைகளில் தங்கி ஆட்சி செலுத்தியிருக்கிறார்களா? தலைமைச் செயலர் துவங்கி, பல்வேறு அதிகாரிகள், அமைச்சர்கள் வரை தமது கோப்புக்களை இருமுடியாகச் சுமந்து  கொடநாட்டிற்கு பயணிக்கிறார்கள். இத்தகைய கேவலத்தை ஊடகங்களும் அறிவுத்துறையினரும் அங்கீகரித்திருப்பதை வேறு எங்கும் காண இயலாது.
கோபாலபுரம் சி.ஐ.டி நகர் குடும்ப ஆட்சியைப் போன்ற அருவெறுக்கத்தக்க அற்பத்தனத்தை வேறு எங்காவது நாம் கண்டிருக்க முடியுமா?  டெசோ எனும் காற்றுப் போன பலூனைப் பாருங்கள்! சுதந்திர ஈழம் என்று தொடங்கி, பின்னர் அது ஈழத்துயரை பகிர்ந்து கொள்ளும் சோக காவியமாகி, பிறகு படம் கொடி முழக்கம் ஏதுமற்ற மவுன ஊர்வலமாகி, கடைசியில் உள்துறை அமைச்சகத்தின் நற்சான்று பெற்ற நடவடிக்கையாகிவிட்டது.
கெக்கெக்கே என்று கருணாநிதியைப் பார்த்து சிரிக்க விரும்பினால், ஈழத்தாய் என்று ஜெயலலிதாவுக்கு காவடி சுமந்த சீமான், நெடுமாறன், இன்னபிற தமிழினவாதிகளின் வரலாறும், ஈழத்தைக் காப்பாற்ற அத்வானியின் காலைப்பிடித்த வைகோ வின் அரசியல் சாணக்கியமும் நினைவில் வந்து நம்மை சிரிப்பாய் சிரிக்க வைக்கின்றன. கிளிநொச்சியின் தோல்வி, ஒரு மிகப்பெரிய பின்னடைவை முன்னறிவித்த பின்னரும், வெற்றி வெற்றி என்று ஆய்வுக்கட்டுரை எழுதுவது, எல்லாம் முடிந்து புல் முளைத்த பின்னரும், தம்பி இருக்கிறார் என்று சொல்லக் கேட்டு ஓ வென்று ஆர்ப்பரிப்பது இவையெல்லாம் தமிழகம் தவிர வேறு எங்கே சாத்தியம்?  யோசித்துப் பார்க்கும்போது, முகுல் ராய்க்கு சிவப்புக் கம்பளம் விரித்ததொன்றும் அவ்வளவு பெரிய பிரச்சினை என்று தோன்றவில்லை.

கருத்துகள் இல்லை: