புதன், 3 ஆகஸ்ட், 2011

மற்றுமொரு சன் சீ கப்பல் அகதி நாடு கடத்தப்படுகிறார்!

எம் வீ சன் சீ கப்பல் மூலம் கனடாவைச் சென்றடைந்த இலங்கை அகதிகளுள் யுத்தக் குற்றம் புரிந்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ள மற்றுமொரு இலங்கையரை நாடு கடத்துமாறு கனடா உத்தரவிட்டுள்ளது. கனடாவில் தடைசெய்யப்பட்டுள்ள இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில், நாடு கடத்தப்படவுள்ள இலங்கையர் உறுப்பினராக இருந்துள்ளதாக கனடா அறிவித்துள்ளது. வடக்கில் தமிழீழம் கோரி தமிழீழ விடுதலைப் புலிகள் 30 வருடகாலமாக ஆயுதம் ஏந்திப் போராடினர். இந்தப் போராட்டமானது கடந்த 2009ம் ஆண்டுடன் முடிவுக்கு வந்தது. புலிகள் இயக்கத்துடன் சேர்ந்து குறித்த இலங்கையர் யுத்தக் குற்றத்தில் ஈடுபட்டதாக கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்பு சபை குறிப்பிட்டுள்ளது. சுமார் 492 இலங்கை அகதிகளை ஏற்றிய 59 மீற்றர் நீலமுடைய சன் சீ கப்பல் தாய்லாந்து விக்ரோரியா வழியாக பிரிட்டிஷ் கொலம்பியாவை சென்றடைந்தது. இவ்வாறு சென்றவர்களில் பலர் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என கனேடிய அரசாங்கம் சந்தேகிக்கிறது. இதன்படி கனேடிய பாதுகாப்புப் பிரிவினர் நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் இதுவரை 6 சன் சீ கப்பல் அகதிகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். மேலும் 8 இலங்கை அகதிகளை கனடா தடுத்து வைத்து விசாரணை செய்து வருகிறது

கருத்துகள் இல்லை: