சனி, 6 ஆகஸ்ட், 2011

மிக்ஸி, கிரைண்டருக்கு பதிலா, தினமும் இலவச இட்லி, தோசை

தமிழக அரசின் நடப்பாண்டிற்கான வரவு – செலவு திட்டம் (பட்ஜெட்) தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 8,900 கோடி ரூபாய்க்கு புதிய திட்டங்களும், சலுகைகளும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
* மோனோ ரயில் திட்டப் பணிகள் இந்த வருடமே ஆரம்பிக்கப்படும்
* புதிய மேம்படுத்தப்பட்ட மருத்துவ காப்பீடுத் திட்டம் ஆரம்பிக்கப்படும்
* நடமாடும் மருத்துவமனைகள் செயல்படுத்தப்படும்
* புதிதாக மூவாயிரம் பேருந்துகள் வாங்கப்படும்
* வணிக வரித்துறை கணினி மயமாக்கப்படும்
* ஸ்ரீரங்கம் தொகுதியில் தேசிய சட்டபள்ளி அமைக்கப்படும்
இவை தவிர வறுமை ஒழிப்புத் திட்டம், காவல் துறை நவீன மயமாக்கல் என்பது போன்று சுதந்திர காலத்திலிருந்து அனைத்து பட்ஜெட்டுகளிலும் தாக்கல் செய்யப்படும் திட்டங்களும் உள்ளது.
மாணவர்களுக்கு இலவச லேப்டாப், ஏழைகளுக்கு இலவச மாடுகள், ஆடுகள் வழங்கும் திட்டம், அரசு கேபிள் டிவி என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் நகலாக இருக்கிறது பட்ஜெட்.
கிட்டத்தட்ட 16,800 கோடி ரூபாய் நிதிப்பற்றாக்குறை பட்ஜெட்டாக சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இலவசங்கள் தேவையா என்று யோசிக்காமல் அள்ளி வழங்குகிறார்கள். போன ஆட்சியில் என்ன தான் அள்ளி அள்ளி இலவசத் திட்டங்களாக வாரி வழங்கினாலும் கடைசியில் மக்கள் மொத்தமாக ஆப்பு வைத்ததை முதல்வர் நினைவில் கொள்ள வேண்டும். இலவசங்கள் மட்டுமே மக்களை செம்மைப்படுத்தி விடாது. “மீனை இலவசமாகக் கொடுப்பதை விட, மீன் பிடிக்கக் கற்றுக் கொடுங்கள்” என்ற ஹைதர் அலி காலத்து பழமொழியை இன்னமும் எத்தனை காலத்திற்கு தான் சுதந்திர இந்தியாவில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டுமோ! “ஆமாமாம்.. மிக்ஸி, கிரைண்டருக்கு பதிலா, தினமும் இலவச இட்லி, தோசை கொடுத்திடலாம்” என்று கோரிக்கை எழாத வரை சரி!

கருத்துகள் இல்லை: