சனி, 6 ஆகஸ்ட், 2011

பேராசிரியர் கூலை கைதுசெய்ய நீதிமன்று உத்தரவு Professor S. Ratnajeevan H. Hoole


- நமது நிருபர்
Hooleயாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ரட்ணஜீவன் கூலை கைது செய்யுமாறு ஊர்காவல்துறை மாவட்ட நீதிபதி திருமதி ஜோய்மகிழ் மகாதேவா இன்று உத்தரவிட்டுள்ளார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் அவருடைய அலுவலகத்தில் வேலைபார்க்கும் ஆண் பெண் ஊழியர்கள், கட்சி அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள், அனுதாபிகள் ஆகியோருக்கு எதிராக தொடர்ச்சியாக இணையத்தளங்கள் மூலம் அவதூறு பிரச்சாரத்தில் ஈடுபட்டு சமாதானத்திற்குப் பங்கம் விளைவிக்க முயன்றார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே பேராசிரியர் கூலை கைதுசெய்யுமாறு நீதிமன்று இன்று உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு ஜனாதிபதியிடம் தன்னை சிபார்சு செய்ய தவறியிருந்தார் என அமைசசர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து வந்த பேராசிரியர் கூல் அண்மைக்காலங்களில் அமைச்சரிற்கு எதிராக அவதூறுப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்திருந்தார். அண்மையில் இவர் எழுதியிருந்த கட்டுரையொன்றில் அமைச்சரும் அவரைச் சேர்ந்தவர்களும் கிறிமினல்கள் எனவும், அவருடன் இருப்பவர்கள் பலர் முன்னாள் புலி உறுப்பினர்கள் எனவும், இலங்கை ஜனாதிபதி அமைச்சருடனான தொடர்புகளை துண்டிக்காதுவிட்டால் மீண்டும் போராட்டம் வெடிப்பது தவிர்க்கப்படமுடியாதது எனவும் எச்சரிக்கை செய்திருந்தார். பேராசிரியரின் இந்த அவதூறுக் கட்டுரைக்கு எதிராக அமைச்சரின் ஆதரவாளர்கள் போராட்டம் ஒன்றிற்கு முஸ்தீபுகள் செய்யத் தொடங்கியதைத் தொடர்ந்து, பொலிசார் தலையிட்டதன் பின்னணியிலேயே தற்போது பேராசிரியர் கூலை கைது செய்ய நீதிமன்று கட்டளை பிறப்பித்துள்ளதாக அறியவருகிறது.
பேராசிரியர் கூலுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அவர் 2 வருடகாலம் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடலாம் என சட்டத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

கருத்துகள் இல்லை: