புதன், 3 ஆகஸ்ட், 2011

தூத்துக்குடி- கொழும்பு இடையே தோணி போக்குவரத்து நிறுத்தம்

தூத்துக்குடி: தூத்துக்குடி-கொழும்பு இடையேயான தோணி போக்குவரத்து துவங்கிய 2 மாதத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இத்தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முந்தைய காலம் தொட்டே தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு தோணிகள் மூலமாக சரக்கு போக்குவரத்து நடந்து வந்தது. மிளகாய் வத்தல், வெங்காயம், உருளைக்கிழங்கு, கருவாடு, சிமெண்ட், மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உள்ளிட்ட பொருட்கள் தோணி மூலம் இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டன. மேலும் அங்கிருநது பழைய இரும்பு பொருட்கள் உள்ளிட்டவை தூத்துககுடிக்கு வந்தன.

தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் 200 டன் முதல் 420 டன் வரை கொள்ளவு கொண்ட இயந்திரமயமாக்கப்பட்ட 40 தோணிகள் உள்ளன. இத்தொழிலை நம்பி 5 ஆயிரம் குடும்பத்தினர் உள்ளனர். பல்வேறு வணிக மற்றும் பொருளாதார காரணங்களால் கடந்த 2008-ம் ஆண்டு முதல் தூத்துக்குடி-கொழும்பு இடையே தோணி போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.

நலிவடைந்த தோணி தொழிலுக்கு புத்துயிர் அளிக்க தூத்துக்குடி தோணி உரிமையாளர் சங்கம் மற்றும் பல்வேறு வணிக அமைப்புகள் முயற்சி மேற்கொண்டன. இதன் விளைவாக தூத்துக்குடி-கொழும்பு இடையே தோணி போக்குவரத்து மீண்டும் ஷிப்பிங் என்ற நிறுவனத்தால் கடந்த பிப்ரவரி மாதம் 12-ம் தேதி துவங்கப்பட்டது.

இதனால் தோணி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் இந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. தொடங்கிய 2 மாதத்திலேயே தூத்துக்குடி-கொழும்பு இடையேயான தோணி போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: