வியாழன், 28 நவம்பர், 2019

சீமான் உண்ணும் விதத்தை நோட்டு புத்தகத்தில் குறிப்பெடுத்த புலிகள் - சீமான் நெகிழ்ச்சி!


நக்கீரன் : விடுதலை புலிகள் தலைவர் பிறந்த நாளையொட்டி சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பேசினார். நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, " ராஜூவ் காந்தி மரணத்தை பற்றி நான் பேசியதற்கு அவருடைய மாமன், மச்சான், தம்பி, பெரியப்பன், சித்தப்பன் எல்லாம் நம்மை திட்டி தீர்த்துவிட்டார்கள்.
இதோ பாருங்கள்,  பேசியவர்கள் எல்லோர் பேரையும் என் இதயத்தில் வைத்திருக்கிறேன். உங்களுக்கு சரியாக வாதிட தெரிந்தால், நல்ல ஆண் மகனாக இருந்தால் விவாதத்திற்கு வாருங்கள், நாம் சேர்ந்து பேசுவோம். வரலாற்றில் யார் பிழை செய்தது என்று பேசுவோம். வாங்க பேசி முடிவெடுப்போம். நீங்க என்ன பேசினாலும் நான் இப்படிதான் பேசுவேன். இப்படி பேசினால் எனக்கு ஓட்டு போட மாட்டேன் என்றால் அந்த ஓட்டே எனக்கு தேவையில்லை. ராஜூவ் காந்தி வாழ்க என்று சொன்னால் தான் ஓட்டு விழும் என்றால், ராஜூவ் காந்தி கட்சிக்கே யாரும் ஓட்டு போடவில்லையே.
நாங்கள் தான் கொன்றோம் என்று சொல்லும் நீங்கள், அப்படியே பஞ்சாப் சென்று சீக்கியர்கள் தான் இந்திரா காந்தியை கொன்றார்கள் என்று சொல்ல முடியுமா?

பஞ்சாப்பை விட்டி சொல்லியவர்களை அடித்து விரட்டி விடுவார்கள். இங்கே கேட்பதற்கு ஆளில்லை என்பதால்தான் வாய் கிழிய பேசுகிறீர்கள்.

 நான் இருக்கிறோன், இவர்களை அம்பலப்படுத்த, நான் அரசியல் கட்சி ஆரம்பித்ததே உடனே தேர்தலில் நின்று ஆட்சி பிடித்து அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதற்காக அல்ல. இப்படி எல்லாம் பேசுவதற்காகத்தான். அதனால் நாங்கள் இப்படி தான் பேசுவோம், யாருக்காகவும் அதனை நிறுத்த மாட்டோம்.
 

முன்னாள் பாதுகாப்பு துறை செயலாளராக இருந்த ஒருவர், இன அழிப்பு நடைபெற்றுகொண்டிருந்த சமயத்தில் என்ன நடந்தது என்று தன்னுடைய புத்தகத்தில் தெரிவித்துள்ளார். இலங்கை இறுதி கட்ட போரை நிறுத்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விரும்பிய போதும் அப்போதைய தில்லி தலைமையும், தமிழக தலைமையும் விரும்பவில்லை என்று தெரிவித்து இருக்கிறது. அதற்கான காரணத்தை நான் கூறுகிறேன்.

அவ்வாறு சமதானம் ஏற்பட்டு தமிழர்களுக்கான ஒரு ஆட்சி அமையுமானால், அது அப்பழுக்கற்ற, யஞ்ச லாவண்யம் அற்ற தூய்மையானதாக இருக்கும். தன் அண்டை நாடு  இப்படி இருந்தால் இங்கிருப்பவர்களுக்கு அது இடைஞ்சலாக இருக்கும், தங்களால் கொள்ளை அடிக்க முடியாது. அதனால்தான் இவர்கள் போரை நிறுத்துவதற்கான முயற்சியை ஆதரிக்கவில்லை. இல்லை என்றால் அங்கு தமிழக மக்களை பாதுகாக்கும், ஒரு அருமையான ஆட்சி அமைந்திருக்கும். பிரபாகரனை ஒருமுறை நேரில் பார்த்தால் போதும் அவருக்காக யாரும் உயிரை கொடுப்பார்கள். நான் அவரை நேரில் சந்தித்த போது அதைத்தான் நினைத்தேன். அவர் இலங்கை தமிழர்கள் படும் கஷ்டங்களை என்னிடம் சொல்லியபோது கீழே குனிந்து அழுதிருக்கிறேன்.

ஒருமுறை அண்ணன் பொட்டு அம்மன் வீட்டில் சாப்பிடச் சென்றோம். நானும், பொட்டு அம்மன், அண்ணி ஆகியோர் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அப்போது எனக்கு இட்லி, தோசை, சாம்பார், சட்னி எடுத்துவைத்தனர். உணவைப் பார்த்துவிட்டு இட்லியா என்று கேட்டேன். உடனே பொட்டு அம்மனும், அண்ணியும் சிரிக்க ஆரம்பித்துவிட்டனர். ஏன் சிரிக்கிறீர்கள் என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு பொட்டு அம்மன், ஒரு வாரம் பார், அவன் தோசை இட்லிக்கு வந்துவிடுவான் என தலைவர் பிரபாகரன் அவரிடம் சொன்னதாக சொன்னார். நானே ராமநாதபுரத்துக்காரன். காரம் அதிகம் சாப்பிடுபவன். நம்மை விட அவர்கள் அதிகமாக காரம் சாப்பிடுகின்றனர் என்று நினைத்தேன்.

ஒரு முறை தலைவருடன் அமர்ந்து சாப்பிட்ட  சம்பவம் அருமையானது. தலைவரும் நானும் காட்டிலுள்ள ஒரு அறையில் சாப்பிட்டோம். அப்போது, ஒவ்வொரு உணவாக காண்பித்து இது நன்றாக இருக்கிறதா என்று கேட்டுக்கொண்டே இருந்தார். அதற்கான தயாரிப்புகளுக்கு டைரக்‌ஷன் செய்ததும் தான்தான் என்று சொன்னார். நான் தலைவரை சந்தித்த காலத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் ஆளாக இருந்தேன்" என்றார்

கருத்துகள் இல்லை: