புதன், 27 நவம்பர், 2019

மகாராஷ்டிரா: உத்தவ் தாக்கரே முதல்வர்- காங்கிரஸ் என் சி பிக்கு இரு துணை முதல்வர் பதவிகள்!

மகாராஷ்டிராவின் முதல்வராகவும், கூட்டணி தலைவராகவும் உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்பட்டு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் எம்எல்ஏ-க்களால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 மகாராஷ்டிரா: உத்தவ் தாக்கரே முதல்வர்- இரு துணை முதல்வர்கள்!மகாராஷ்டிரா சட்டப் பேரவையில் ஆட்சி அமைப்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று(நவம்பர் 26) தீர்ப்பளித்தது. அதில், “நாளை(இன்று) மாலை 5 மணிக்குள் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பை நேரலையாக ஒளிபரப்ப வேண்டும். ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கூடாது" என்று உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், மகாராஷ்டிர அரசியலில் திருப்புமுனையாக அஜித் பவார் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து, மகாராஷ்டிராவில் முதல்வராக பதவியேற்று மூன்று நாட்களே ஆன நிலையில் தேவேந்திர பட்னவிஸும் ராஜினாமா செய்தார். ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியிடம் தனது ராஜினாமா கடிதத்தை பட்னவிஸ் கொடுத்தார். அதன் பின், பாஜகவின் காளிதாஸ் கொலம்ப்கர் மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் இடைக்கால சபாநாயகராக நியமனம் செய்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

தாக்கரே குடும்பத்தின் முதல் முதல்வர்
நேற்று மாலை, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் டிரைடெண்ட் ஹோட்டலில் கூட்டு ஆலோசனையில் ஈடுபட்டனர். சிவசேனாவின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே மூன்று கட்சிகள் கூட்டணி அமைப்பது குறித்த தீர்மானத்தை முன்மொழிந்தார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நவாப் மாலிக் மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிதின் ரௌத் ஆகியோர் அதை வழிமொழிந்தனர். இதன்பிறகு, அனைத்து எம்எல்ஏ-க்களாலும் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இக்கூட்டத்தில் மூன்று கட்சிகளின் கூட்டணிக்கு ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படும் என்றும் முடிவுசெய்யப்பட்டது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஜெயந்த் பாட்டீல், உத்தவ் தாக்கரே இந்தக் கூட்டணியை முதல்வராக இருந்து வழிநடத்த வேண்டும் என அனைவரும் விரும்புவதாகத் தெரிவித்தார். இதன்மூலம், உத்தவ் தாக்கரேவை முதல்வராக முன்மொழிந்த ஜெயந்த் பாட்டீல் தீர்மானத்துக்கு காங்கிரஸ் கட்சியின் பாலாசாகேப் தோரத் ஒப்புதல் அளித்தார். இதைத்தொடர்ந்து, கூட்டணியின் தலைவராகவும், மாநிலத்தின் முதல்வராகவும் உத்தவ் தாக்கரேவை முன்மொழிந்த தீர்மானத்தை, அனைத்து எம்எல்ஏ-க்களும் ஒருமனதாக நிறைவேற்றினர்.
இதையடுத்து இரவு 10 மணிக்கு, ஆளுநரைச் சந்தித்த உத்தவ் தாக்கரே ஆட்சியமைக்க உரிமை கோரினார். இந்நிலையில், மும்பை சிவாஜி பூங்காவில் நாளை(நவம்பர் 28) மாலை 6.40 மணிக்கு உத்தவ் தாக்கரே முதல்வராக பதவி ஏற்கிறார்.
அவருடன் காங்கிரஸைச் சேர்ந்த பாலாசாகேப் தோரத், என்சிபியைச் சேர்ந்த ஜெயந்த் பாட்டீல் ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று காலை 8 மணிக்கு மகாராஷ்டிர சட்டப்பேரவைக் கூட்டம் கூடுகிறது. இடைக்கால சாபாநாயகர் காளிதாஸ் கொலம்ப்கர், எம்.எல்.ஏக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.
சரத் பவாரை சந்தித்த அஜித் பவார்
துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அஜித் பவார், நேற்று இரவு திடீரென என்சிபி தலைவர் சரத் பவாரை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். சரத் பவாரின் மகள் சுப்ரியா சூலேவும் அப்போது இருந்தார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

நள்ளிரவு வரை இந்தச் சந்திப்பு நடந்தது. அஜித் பவார் ஆதரவால் ஆட்சிக்கு வந்த பாஜக அரசு பதவி விலகிய நிலையில், சரத் பவாரை அஜித் பவார் சந்தித்திருப்பது முக்கியமானதாக கருதப்படுகிறது. என்சிபி கட்சியின் மூத்த தலைவர்கள், அஜித் பவார் மீண்டும் கட்சியில் இணைய வேண்டும் என பதவி விலகியதுமே இனிப்புகள் வழங்கி அவரிடம் இக்கோரிக்கையை வைத்துள்ளனர். தற்போது அஜித் பவார் மீண்டும் என்சிபி-யில் சேர்த்துக் கொள்ளப்படுவாரா எனக் கேள்விகள் எழுந்துள்ளது.
அதே சமயம், தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்.சி.பி) மற்றும் சிவசேனா தலைவர்கள் சரத் பவாரின் இல்லத்தில் நேற்றிரவு சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

கருத்துகள் இல்லை: