புதன், 27 நவம்பர், 2019

சரிவைத் தொடங்கிவைத்த 5 மாநிலத் தேர்தல்!' - பலிக்காத மோடி-அமித்ஷா வியூகம்

சத்யா கோபாலன் - விகடன் :  கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் உச்சத்திலிருந்த பா.ஜ.க-வின் மாநில செல்வாக்கு தற்போது கிடுகிடுவென சரியத் தொடங்கிவிட்டது. இந்திய அரசியலில் 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தல் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்தது. அதுவரை யாராலும் அசைக்க முடியாமல் இருந்த காங்கிரஸின் கோட்டையை ஒரே தேர்தலில் முற்றிலும் தகர்த்தது மோடி -
அமித்ஷா கூட்டணி.
காங்கிரஸ் அந்த ஆண்டு இந்தியாவில் வெறும் 7 மாநிலங்களில் மட்டுமே பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வந்தது. ஆனால், அதுவே அடுத்த மூன்று ஆண்டுகளில் சுமார் 21 மாநிலங்களை பா.ஜ.க கைப்பற்றியது. நாடு முழுவதும் வீசிய மோடி அலையே இதற்குக் காரணமாகக் கூறப்பட்டது. மோடியும் அமித்ஷாவும் இணைந்து இந்திய அரசியல் வரைபடத்தில் புதிய மாற்றத்தைக் கொண்டு வந்தனர் என்றே கூற வேண்டும். இந்தியா முழுவதும் நீல நிறமாக (காங்கிரஸ்) காட்சியளித்த மாநிலங்களை, 2014-ம் ஆண்டு இவர்கள் இருவரும் காவி நிறமாக (பா.ஜ.க) மாற்றினர். அரசியல் வரலாற்றில் இவர்கள் செய்த மாற்றம் அனைத்துத் தரப்பினரையும் உற்றுக் கவனிக்க வைத்தது.
ஆனால், அமித்ஷாவின் தேர்தல் வியூகம் நீண்ட நாள்களுக்கு பலன் கொடுக்கவில்லை. 2017-ம் ஆண்டு பல மாநிலங்களை தங்கள் வசம் வைத்திருந்த பா.ஜ.க-வின் பிடி 2018-ம் ஆண்டின் பிற்பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாக நழுவத் தொடங்கியது.
பா.ஜ.க ஆட்சி செய்த சில மாநிலங்கள் மற்றும் மாநிலக் கட்சிகள் காங்கிரஸ் கட்சியின் கூட்டணிக்குச் சென்றன.
2017-ம் ஆண்டு இந்தியா முழுவதும் 71% மாநிலங்களில் பா.ஜ.க தலைமையிலான ஆட்சி நடைபெற்றது. அதுவே தற்போது 40 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது. 2018-ம் ஆண்டு தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய ஐந்து மாநில தேர்தல் முடிவுகளிலிருந்துதான் பா.ஜ.க-வுக்கு சரிவு ஏற்படத் தொடங்கியது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களை காங்கிரஸ் கைப்பற்றியது. மிசோரம், தெலங்கானா போன்றவை மாநிலக் கட்சிகளிடம் சென்றன. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவுடன் மத்திய அரசுக்கு ஏற்பட்ட பிரச்னையால் அந்தக் கூட்டணியும் முடிவுக்கு வந்து ஆந்திராவிலிருந்தும் பா.ஜ.க வெளியேற்றப்பட்டது. இந்த வருடம் நடந்த தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் வெற்றி பெற்று முற்றிலும் பா.ஜ.க-வுக்கு இடம் அளிக்காமல் செய்தது.
அதேபோல், ஜம்மு காஷ்மீரில் நடந்து வந்த மாநிலக் கட்சியின் ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டு வரப்பட்டது. தற்போது அந்த மாநிலமும் யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுவிட்டது.
2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் என்னதான் பா.ஜ.க பெரிய வெற்றி பெற்றிருந்தாலும் மாநில அளவில் பா.ஜ.க-வுக்கான வாய்ப்பு மற்றும் செல்வாக்கு மிகவும் குறைந்துவிட்டது. தற்போது இந்தியா முழுவதும் பேசுபொருளாக இருந்த மகாராஷ்டிராவில் சத்தம் இல்லாமல், யாருக்கும் தெரியாமல் பா.ஜ.க-வின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டார். ஆனால், அவரது ஆட்சி நான்கு நாள்கள்கூட நிலைக்கவில்லை. நேற்று தன் முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்துவிட்டார்.
நாளை சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வராகப் பதவியேற்கவுள்ளார். அங்கு பா.ஜ.க-வின் கூட்டணியில் ஏற்பட்ட மோதலால் மகாராஷ்டிராவிலிருந்து பா.ஜ.க முற்றிலும் வெளியேற்றப்பட்டுள்ளது.
News Credits : India Today J">மோடி - அமித்ஷா

கருத்துகள் இல்லை: