செவ்வாய், 26 நவம்பர், 2019

பாக்கியராஜ் : பொள்ளாச்சி சம்பவம்- பெண்களிடமும் தவறு உள்ளது

பொள்ளாச்சி சம்பவம்- பெண்களிடமும் தவறு உள்ளது: பாக்யராஜ்மின்னம்பலம் : பொள்ளாச்சி சம்பவத்துக்கு ஆண்கள் மட்டும் காரணமல்ல என்று இயக்குனர் பாக்யராஜ் பேசியிருப்பது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.
ஆர்பிஎம் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள படம் ‘கருத்துக்களை பதிவு செய்’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் நேற்று நடந்தது. அதில், இயக்குனர் பாக்யராஜ், எஸ்.வி.சேகர், தயாரிப்பாளர் கே.ராஜன், நடிகை மீரா மிதுன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய பாக்யராஜ், ‘ஒருவன் சின்ன வீடு வைத்துக்கொண்டால் அவர்களுக்கான காசு, பணம் உள்ளிட்ட தேவைகளை நிறைவேற்றிவிடுவான். சின்ன வீட்டுக்காக முதல் மனைவியான பெரிய வீட்டை அவன் தொந்தரவு செய்யமாட்டான். ஆனால், செய்தித் தாளில் கள்ளக்காதலனுக்காக கணவரைக் கொன்ற மனைவி, குழந்தையை கொன்ற பெண் என்றெல்லாம்தான் செய்தி வருகிறது.

 பெண்களுக்கு கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும், ஒரு வரைமுறை இருக்க வேண்டும். அவர்களுக்கு சுயக் கட்டுப்பாடு என்பது வேண்டும்” என்று குறிப்பிட்டார். தொடர்ந்து, “ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது. பெண்கள் வாய்ப்பளிப்பதுதான் தவறுகளுக்கு மூலக்காரணம் ஆகிவிடுகிறது. எனவே பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். ஆண்களை மட்டுமே குற்றம் சொல்லுவதில் நியாயமில்லை” என்று குறிப்பிட்டவர்,
“பொள்ளாச்சியில் தவறு நடந்தது என்றால் அதற்கு பசங்க மட்டுமே காரணமல்ல. பெண்களுடைய பலவீனத்தை சரியாகப் பயன்படுத்தி அவர்களை கொண்டுசென்றுவிட்டனர். அவன் செய்தது பெரிய தவறென்றால் அந்த வாய்ப்பை உண்டாக்கிக் கொடுத்த பெண்கள்தான் ரொம்பத் தவறு செய்துவிட்டனர்” என்று பேசியுள்ளார்.
பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களிடம் நட்பாக பழகி அவர்களை நயவஞ்சகமாக பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஒரு கும்பல் ஈடுபட்டு அதனை வீடியோவாக பதிவு செய்த கொடூர சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
இந்த கொடூர சம்பவத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில் பொள்ளாச்சி சம்பவத்தில் பெண்களும் தவறு செய்துள்ளனர் என பாக்யராஜ் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை: