புதன், 27 நவம்பர், 2019

நித்தியானந்தா .. நடு இரவில் சிறுமிகள மீது பாலியல் துன்புறுத்தல், மர்ம மரணம்..

மின்னம்பலம் :  சர்ச்சை சாமியாரான நித்யானந்தா மீதான குற்றச்சாட்டுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பெங்களூருவைச் சேர்ந்த ஜனார்த்தனன் சர்மாவின் மகள்களைக் கடத்திய வழக்கு ஒரு பக்கம் பூதாகரமாகியுள்ள நிலையில், தற்போது கனடாவைச் சேர்ந்த முன்னாள் சிஷியை சாரா லாண்ட்ரி நித்யானந்தா மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.
நித்யானந்தா தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்க முயன்றதாகப் பெங்களூரு ராம்நகர் காவல் நிலையத்தில் சாரா லாண்ட்ரி புகார் தெரிவித்துள்ளார். நித்யானந்தா பேச்சுகளால் ஈர்க்கப்பட்டு 2015ல் பிடதி ஆசிரமத்திற்கு இவர் வந்துள்ளார். அங்கு சமூக வலைதள குழு தலைவராக இருந்துள்ளார். 2018ல் இவருக்கு நித்யானந்தாவின் உண்மை முகம் தெரியவந்துள்ளது. இதையடுத்து ஆசிரமத்தில் இருந்து வெளியேறியிருக்கிறார்.< இதுகுறித்து மின்னஞ்சல் மூலம் அவர் அளித்த 22 பக்க புகாரில், ”ஆன்மீகத்தின் பெயரில் ஆசிரமத்தில் இருக்கும் குழந்தைகளை நித்யானந்தா பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவார்” என்று குற்றம்சாட்டியுள்ளார். ஆசிரமத்தில் நடக்கும் பாலியல் தொந்தரவுகள், இதனால் நித்யானந்தாவை எதிர்த்தவர்கள் பற்றி பொய்யான தவறான அவதூறுகளை சமூக வலை தளங்களில் பரப்பத் தனது தலைமையில் நித்யானந்தாவால் குழு அமைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
”நித்யானந்தாவை எதிர்ப்பவர்கள் மீது அவதூறு கருத்துகளைப் பரப்ப நித்யானந்தாவும் ரஞ்சிதாவும் உத்தரவிடுவார்கள். பெங்களூருவைச் சேர்ந்த டிவி மோகன்தாஸ் பாய், அமெரிக்காவில் வசிக்கும் ராஜிவ் மல்ஹோத்ரா, குஜராத்தின் சமூக ஆர்வலரான அமிதாப் ஷா போன்றவர்களை நித்தியை ஆதரிக்கும் படியும், பொது மேடைகளில் நிதியளிக்கும் படியும் நித்யானந்தாவும், ரஞ்சிதாவும் தனக்கு நெருக்கடி கொடுப்பார்கள் .
நித்யானந்தா குருகுல பள்ளியில் படித்து வந்த 13 மற்றும் 14 வயது சிறுமிகள் தங்களுக்கு நேர்ந்த கொடுமையை என்னிடம் கண்ணீர் மல்க கூறினர். மகா சதாசிவோஹம் நிகழ்ச்சியில் சூப்பர் பவர் எதுவும் வரவில்லை என்று தெரிவித்த இந்த சிறுமிகளை ஒருவருக்கு ஒருவர் ரத்தம் வரும் வரை தாக்கிக்கொள்ள அவரது ஆசிரியர் துன்புறுத்தியிருக்கிறார். இதுமட்டுமின்றி ஆன்மீக பயிற்சி என்ற பெயரில் சிறுமிகள் ஒருவரை ஒருவர் கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொள்ளும் சம்பவங்களும் பிடதியில் நடந்துள்ளது.
2016ஆம் ஆண்டு நித்யானந்தா தனிப்பட்ட முறையில் முகநூல் மூலம் மெசேஜ் அனுப்புவார். பாலியல் ரீதியாக பேசுவார். நித்யானந்தா அவரை சதாசிவன் என்றும் தன்னை பார்வதி அவதாரம் என்றும் கூறி இருவரும் ஒன்றாக இருந்தால் மோட்ச இன்பத்தைப் பெற முடியும் என கூறுவார்” என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளார் சாரா.
2017ல் ஒருமுறை தனது அனுமதியின்றி தன் மீது கைவைத்து முத்தம் கொடுத்ததாகவும் குற்றம்சாட்டும் சாரா, நித்யானந்தா மாசாஜ் செய்துவிடச் சொல்லித் துன்புறுத்துவார் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், மெசஞ்சரில் நிய்தானந்தா, சாராவுக்கு முத்த ஸ்மையிலியையும் ஸ்வீட்டி என்று அழைத்தது உட்படத் தவறுதலாகப் பேசிய அத்தனை மெசேஜ்களையும் சாரா ஸ்கீர்ன்சாட் எடுத்து பெங்களூரு போலீஸுக்கு அனுப்பியுள்ளார். மேலும், இதற்கு முன் நித்யானந்தா மீது பாலியல் புகார் வந்த போது அவர் ஆண்மை இல்லாதவர் என கூறி வழக்கைத் திசை திருப்பியது முற்றிலும் பொய் என கூறியுள்ள சாரா, தனக்கு அளிக்கப்பட்ட பாலியல் ரீதியான துன்புறுத்தலைத் தொடர்ந்தே நித்யானந்தா மீதான பாலியல் குற்றச்சாட்டை நம்பியதாகவும் தெரிவித்துள்ளார்.
நித்யானந்தா மீது இவ்வாறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள சாரா, விசாரணை அதிகாரிகளிடம் வீடியோ கான்பிரன்சிங் மூலம் தனக்குத் தெரிந்த உண்மைகளைக் கூற தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மர்ம மரணம்-சிபிஐ விசாரணை கோரும் தாய்
பாலியல் துன்புறுத்தல், குழந்தைகள் கடத்தல் என நித்தி மீது குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிரமத்தில் மர்ம மரணங்கள் நிகழ்வதும் தெரிய வந்துள்ளது.
திருச்சி மாவட்டம் அர்ஜுனன் - ஜான்சிராணி தம்பதியினரின் 3ஆவது மகள் சங்கீதா. 2010ல் பிடதி ஆசிரமத்தில் சேர்ந்துள்ளார். 2014ல் மர்மமான முறையில் இறந்துள்ளார். அவரை துன்புறுத்தி கொலை செய்ததாக ராம்நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. சங்கீதாவின் பெற்றோர் அளித்த புகாரில், தனது மகள் தாக்கப்பட்டிருப்பதாகவும், அவரது உடம்பில் காயங்கள் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு சங்கீதாவின் தாய் ஜான்சிராணி நேற்று அளித்த பேட்டியில், ”ஆசிரமத்தில் இருக்கும் போது தனது மகளைத் தனியாகச் சந்தித்துப் பேச அனுமதி மறுத்தனர். ஆசிரமத்தில் எதோ ஒரு சம்பவம் நடந்துள்ளது. தனது மகளின் மரணம் குறித்தான போலீசாரின் விசாரணையில் நம்பிக்கை இல்லை. எனவே சிபிஐ விசாரணை வேண்டும். ஆசிரமத்தில் உள்ள பலரும் மிரட்டித் துன்புறுத்தப்படுகிறார்கள். கொலை செய்யப்படுகிறார்கள். எனவே அங்குள்ள பெண்கள், குழந்தைகள் அனைவரும் மீட்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
ஜனார்த்தனன் சர்மா தனது இரு மகள்களை மீட்கப் போராடி வரும் நிலையில், தற்போது ஜான்சிராணியும் ஆசிரமத்தில் இருக்கும் குழந்தைகளை மீட்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: