ஞாயிறு, 24 நவம்பர், 2019

மகாராஷ்டிரா: உச்ச நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை!

மகாராஷ்டிரா: உச்ச நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை!மின்னம்பலம் : மகாராஷ்டிர முதல்வராக பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸுக்கும், துணை முதல்வராக அஜித் பவாருக்கும் அம்மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி நேற்று (நவம்பர் 23) காலை 8 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இது அரசியலமைப்புச் சட்டத்துக்கும், ஜனநாயக நெறிமுறைகளுக்கும் எதிரானது என்று கூறி சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருக்கும் வழக்கு இன்று (நவம்பர் 24) காலை 11.30க்கு அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
நேற்று இரவு டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா, “மகாராஷ்டிர ஆளுநரால் முறைகேடாக பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்ட முதல்வரையும், துணை முதல்வரையும் 24 மணி நேரத்துக்குள் பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்ல வேண்டும் என்று நாங்கள் கேட்டிருக்கிறோம். எங்கள் மனுவை அவசர வழக்காக நவம்பர் 24ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 11.30க்கு விசாரிப்பதாக உச்ச நீதிமன்றப் பதிவாளர் அலுவலகத்திலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் சட்டத்தின் மாட்சிமையை நிலைநிறுத்தும் என்றும், அரசியலமைப்பைக் காக்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம்” என்றார்.

அகாதி கூட்டணி சார்பிலான மூத்த வழக்கறிஞர் தேவ்தத் காமட் கூறும்போது, “பெரும்பான்மை பற்றிய எவ்வித விசாரணையும் இல்லாமல் மகாராஷ்டிர ஆளுநர் நேற்று முதல்வர் பட்னாவிஸுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்திருக்கிறார். எனவே கர்நாடக விவகாரத்தில் ஏற்கனவே உச்ச நீதிமன்றம் வழிகாட்டியதைப் போல 24 மணி நேரத்தில் அவர்கள் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று எங்கள் மனுவில் கூறியிருக்கிறோம். உச்ச நீதிமன்றம் எங்கள் கோரிக்கையை ஏற்கும் என்று நம்பிக்கையிருக்கிறது” என்று தெரிவித்தார்.
2006ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ‘ஓர் அரசாங்கத்தை உருவாக்க ஆளுநர் அழைக்கும் முன் அதற்கான அடிப்படை முகாந்திரங்களும், அடிப்படை ஆதாரங்களும் இருக்கிறதா என்பதை சோதித்துக் கண்டறிய வேண்டும்’ என்று குறிப்பிட்டிருப்பதை இந்த மனுவில் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். மேலும், ‘குறிப்பிட்ட ஓர் அரசியல் கட்சியோ அல்லது கூட்டணியோ தங்களுக்கு ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையினரின் ஆதரவு இருக்கிறது என்பதை ஆளுநரிடம் காட்ட முடிந்தால், ஆளுநருக்கு அந்த கட்சி / கூட்டணியை அழைப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால் பட்னாவிஸ் பதவியேற்புக்கு முன் அப்படி எந்த சட்ட நடைமுறைகளும் பின்பற்றப்படவில்லை. பட்னாவிஸுக்குப் பெரும்பான்மை இருப்பதற்கான ஆதரவுக் கடிதங்கள் காட்டப்படவில்லை. எம்.எல்.ஏ.க்களின் அணிவகுப்பு நிகழ்த்தப்படவில்லை. இந்த நிலையில் எந்த அடிப்படையில் ஆளுநர் பட்னாவிஸுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்? அதற்காக ஆளுநர் மாளிகையிலிருந்து ஆதாரங்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும்’ என்றும் அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த அவசர வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என்.வி.ரமணா, அசோக் பூஷண், சஞ்சீவ் கண்ணா ஆகியோர் விசாரிப்பார்கள் என்றும் நீதிமன்ற வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக நேற்று மாலை, “பட்னாவிஸ், அஜித் பவார் பதவியேற்பை ரத்து செய்ய வேண்டும்” என்று கோரிக்கை வைத்திருப்பதாகத் தகவல் வெளியானது. ஆனால், நேற்று இரவு அகாதி கூட்டணியின் வழக்கறிஞர்கள், “ஆளுநர் முடிவை எதிர்ப்பது மட்டுமல்லாமல் 24 மணி நேரத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்கச் சொல்லி உத்தரவிடக் கோருவதே பொருத்தமாக இருக்கும்” என்று கூறினார்கள்.

கருத்துகள் இல்லை: