திங்கள், 25 நவம்பர், 2019

காவல்துறை: இனி எல்லாமே தமிழில்தான்!

காவல்துறை: இனி எல்லாமே தமிழில்தான்!மின்னம்பலம் : தமிழக காவல்துறையில் அனைத்து தகவல் தொடர்புகளும் இனி தமிழில் தான் நடைபெற வேண்டும் என்று தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் ரயில்வே, பள்ளிக்கல்வித் துறை ஆகியவற்றில் இந்தித் திணிப்பு நடைபெறுவதாக அவ்வப்போது குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. சமீபத்தில் தமிழகக் காவல்துறையால் வழங்கப்பட்ட சலானில் தமிழ் இடம்பெறாமல், ஆங்கிலம் மற்றும் இந்தி மட்டுமே இடம் பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதுகுறித்து நமது மின்னம்பலத்தில் தமிழ்நாடு தினம்: தமிழ் எங்கே? என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இதனிடையே, தமிழகக் காவல்துறையில் கடந்த நவம்பர் 7ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை தமிழ் வளர்ச்சித் துறை சார்பாகத் தமிழ் ஆட்சிமொழி திட்டச் செயலாக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, சில ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. காவல் துறையின் கோப்புகளை எப்படி தமிழில் பராமரிப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று தமிழக டிஜிபி திரிபாதி அனைத்து காவல் ஆணையர்கள். ஐஜி, எஸ்பி ஆகியோருக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், இனி காவல்துறையில் அனைத்து நடவடிக்கைகளும் தமிழில் மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
”காவல்துறையில் தமிழ் மொழியில்தான் அலுவலக பயன்பாடுகள் இருக்க வேண்டும், அனைத்து பதிவேடுகளையும் தமிழில் பராமரிக்க வேண்டும். பதிவேட்டில் தமிழில் தான் கையெழுத்து இட வேண்டும். சுற்றறிக்கை, தகவல் தொடர்பு, கடிதங்கள் என அனைத்து நடவடிக்கைகளும் தமிழில் தான் மேற்கொள்ள வேண்டும். காவல் துறை வாகனங்களின் முன்பக்கத்தில் கண்டிப்பாகத் தமிழில் ‘காவல்’ என எழுதப்பட்டிருக்க வேண்டும். அனைத்து அலுவலக முத்திரைகளும் மற்றும் பெயர் பலகைகளும் தமிழில் இடம் பெற்றிருக்க வேண்டும்.
மேற்கண்ட பொருள் தொடர்பாக தலைமை அலுவலக அனைத்து பணியாளர்களுக்கும், பிற காவல் அலுவலகங்களில் பணிபுரியும் அனைத்து அலுவலர்களுக்கும் உரிய அறிவுரை வழங்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: