செவ்வாய், 26 நவம்பர், 2019

உச்சநீதி மன்றம் : 15 மூட்டைகளில் வெடிகுண்டுகளை எடுங்கள், மக்கள் மீது வீசி கொல்லுங்கள்..

tamil.oneindia.com டெல்லி 15 மூட்டைகளில் வெடிகுண்டுகளை எடுங்கள், மக்கள் மீது வீசி கொல்லுங்கள்.. உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி 
டெல்லி: டெல்லியில் காற்று மாசு பிரச்சனையை குறைப்பதற்கு, உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று மத்திய அரசு மற்றும் பஞ்சாப், ஹரியானா மாநில அரசுகளை உச்சநீதிமன்றம் இன்று கடுமையாக விளாசி உள்ளது. டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து மோசமான நிலையிலேயே உள்ளது. அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் பயிர்க் கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் புகை, பனியுடன் சேர்ந்து பரவி வருவதால் நிலைமை மோசமாகி வருகிறது. டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்த வாகனங்களை இயக்குவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் நிலைமையில் மாற்றம் ஏற்படவில்லை. காற்று மாசு அதிகரிப்பு தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சம்பந்தப்பட்ட மாநில தலைமைச் செயலாளர்களை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டது. நான்கில் எதுவும் நடக்கும்.. மிக முக்கியமான 24 மணி நேரம்.. மகாராஷ்டிர அரசியலில் உச்சகட்ட பரபரப்பு! 
 காற்று மாசு தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கடினமான வார்த்தைகளை பயன்படுத்தி மத்திய, மாநில அரசுகளை விமர்சனம் செய்தது. ஒரே நேரத்தில் அத்தனை பேரையும் கொன்று விடுவது இதைவிட ஒரு நல்ல காரியமாக இருக்க முடியும்.
15 மூட்டைகளில் வெடிமருந்துகளை நிரப்பிக் கொண்டு வாருங்கள், ஒவ்வொருவராக கொன்று வீசி விடுங்கள். அதைவிடுத்து தினம்தினம் பொதுமக்கள் எதற்காக இப்படி ஒரு அவதிப்பட வேண்டும்? என்று உச்ச நீதிமன்றம் கடுமையான கேள்விகளை எழுப்பியது.
பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய இரு மாநிலங்களிலுமே உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பிறகும்கூட பயிர்க் கழிவுகளை விவசாயிகள் எரிப்பதற்கு அனுமதித்து கொண்டு இருக்கின்றன. இதன் காரணமாக டெல்லி வரை புகைமூட்டம் காணப்படுகிறது. நீங்கள் பொதுமக்களை இப்படியா நடத்துவீர்கள்? காற்று மாசு காரணமாக அவர்கள் சாகட்டும் என்று விட்டு விடுவீர்களா என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. 
பஞ்சாப் தலைமை செயலாளரை நோக்கி கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, உங்கள் மாநிலத்தை நிர்வகிக்க தெரியாமல் இருப்பதற்காக உங்கள் மீது நாங்கள் ஏன் அபராதம் விதிக்கக்கூடாது? நாங்கள் உத்தரவிட்ட பிறகும் மீண்டும் இவ்வாறு எப்படி நடக்கலாம் என்று கேட்டனர். அப்போது, இந்த விவகாரத்தை கட்டுப்படுத்துவதற்கு முயற்சி செய்வதாக தலைமைச்செயலாளர் தெரிவித்தார். ஆனால் நீதிபதி அருண் மிஸ்ரா, குறுக்கிட்டு, பஞ்சாப் மாநிலத்தில் இன்னும்கூட விவசாய கழிவுகளை எரிக்கும் நடவடிக்கை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது, என்பது தலைமைச்செயலாளர் பதிலில் இருந்தே தெளிவாக தெரிகிறது. இன்னும் எதற்காக அப்படி நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளத்தான் உங்களை நாங்கள் அழைத்தோம் என்றார். 
டெல்லியில் என்ன நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். ஒவ்வொரு வருடமும் இதுதான் நடக்கிறது. எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தால் அடுத்த வருடமும் இப்படித்தான் நடக்கும், என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. ஹரியானா தலைமை செயலாளரை நோக்கி, இந்தியாவில் இனிமேலும் மக்களின் உயிர் என்பது துச்சமாக மதிக்கப்படக்கூடாது. போபால் விஷவாயு கசிவு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணத் தொகை என்பது, இதே போன்ற பிரச்சினைகளில் உலகமெங்கும் வழங்கப்பட்ட நிவாரண தொகையுடன் ஒப்பிட முடியாது. மக்களை சரியாக கவனித்துக் கொள்ளாவிட்டால் தலைமைச் செயலாளர்கள் அந்த நாற்காலியில் உட்காருவதற்கு தகுதியற்றவர்கள் ஆகிறார்கள். மத்திய அரசும், டெல்லி மாநில அரசும் தங்களுக்குள் இருக்கும் பிணக்குகளை விலக்கி வைத்துவிட்டு அடுத்த பத்து நாட்களுக்குள் மக்கள் நலனுக்காக ஒருங்கிணைந்த ஒரு திட்டத்தை கொண்டு வர வேண்டும். காற்றை சுத்தப்படுத்தக் கூடிய கோபுரங்களை டெல்லியில் நிரந்தரமாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உச்ச நீதிமன்றம் தெரிவித்தது

Read more at: https://tamil.oneindia.com/news/delhi/better-to-kill-delhi-people-supreme-court-slams-centre-states-369549.html

கருத்துகள் இல்லை: