வியாழன், 28 நவம்பர், 2019

குழந்தைகளை கடத்திக் கொலை செய்த மனோகரனின் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை

குழந்தைகளை கடத்திக் கொலை செய்த மனோகரனின் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை தினத்தந்தி :  கோவை மனோகரனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. சென்னை, கடந்த 2010-ம் ஆண்டு கோவையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த 10 வயது சிறுமி  மற்றும் 7-வயது சிறுவன் ஆகியோர் கடத்திப் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களது உடல்கள் பொள்ளாச்சி அருகே மீட்கப்பட்டன. பின்னர் நடைபெற்ற பிரேதப் பரிசோதனையில் சிறுமி  பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அதனையடுத்து நடைபெற்ற  விசாரணையில் வாடகை கார் ஓட்டுநர் மோகன்ராஜ் என்பவரும், அவரது நண்பன் மனோகரனும் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது போலீஸ் காவலிலிருந்து மோகன்ராஜ் தப்பிக்க முயன்றபோது போலிஸார் அவரைச் சுட்டுக் கொன்றனர். பின்னர் மனோகரன் சிறையில் அடைக்கப்பட்டார். 

இந்த வழக்கில் கோவை மகளிர் நீதிமன்றம் 2012 நவம்பர் 1 ம் தேதி மற்றொரு குற்றவாளியான மனோகரனுக்கு தூக்கு தண்டனை விதித்தது.  அந்த தீர்ப்பை எதிர்த்து  சென்னை உயர் நீதிமன்றத்தில் மனோகரன் மேல்முறையீடு செய்தார், ஆனால் உயர் நீதிமன்றம் மனோகரனின் தண்டனையை கடந்த 2014-ல் உறுதி செய்தது. அதை எதிர்த்து மனோகரன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். உச்ச நீதிமன்றமும் தூக்கு தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டது.


உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்ததையடுத்து, டிசம்பர் 2 ஆம் தேதி தூக்கிலிட வேண்டும் என்று கோவை நீதிமன்றத்தின் உத்தரவிட்டது. இந்த நிலையில், கோவை நீதிமன்றத்தின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. 

 ஆளுநருக்கு கருணை மனு அனுப்ப அவகாசம் வழங்காமல் தூக்கு தண்டனை நிறைவேற்ற உத்தரவு என மனோகரன் தரப்பில்,  சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டதோடு, 4 வாரங்களுக்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது

கருத்துகள் இல்லை: