சனி, 20 அக்டோபர், 2012

போலீஸ் அதிகாரி சேலையை இழுத்தார். 'முடியாது’னு அழுதேன்

 பெரியபோலீஸ் அதிகாரி வந்தார் என் துணிகளை அவங்​களே கழட்டுனாங்க. கதவை ஒருத்தர் மூடிட்டுப் போனார். அதுக்குப் பிறகு அந்த அதிகாரி வலுக்கட்டாயமா என் மேல படுத்தார்.
பேய்களைக் கைது செய்யுமா அரசு?
பெண்ணுக்கு நடந்த கொடூரம்..
நீங்கள் படிக்கப்போகும் கொடூர சம்பவத்துக்குக் காரணமான போலீஸ்காரர்களின் பெயரைச் சொல்லப் போவது இல்லை. ஆனால், ஒரு பெண் ஆட்சி செய்யும் தமிழகத்தில், ஒரு அப்பாவிப் பெண்ணுக்கு எப்படிப்பட்ட துயரம் நிகழ்ந்​துள்ளது என்ற அதிர்ச்சி உச்சந்தலையைப் பிடித்து உலுக்குகிறது.

பாதிக்கப்பட்ட பெண் பேசுவதைக் கேளுங்கள். ''என் பெயர் வசந்தி. கணவர் பெயர் பெரியசாமி. இரண்டு பேரும் கூலி வேலைக்குப் போனாத்​தான் சாப்பிட முடியும். எங்களுக்கு மூன்று ஆண் குழந்தைகள். என்னோட அம்மா கடமலைக்குண்டுல இருக்காங்க. நாங்க இருக்கிறது பெரியகுளத்துல. சொந்தக்காரங்க வீட்டுல ஒரு பொருளை அடகுவச்​சிருந்தேன். அதை மீட்க பிப்ரவரி 11-ம் தேதி நரியூத்துக்குப் போனேன். அங்கே அவங்க இல்லைன்னதும் பெரியகுளம் திரும்புறதுக்காக பஸ்ஸுக்குக் காத்துட்டு இருந்தேன்.
அப்போ ராத்திரி 8 மணி இருக்கும். ரெண்டு போலீஸ்காரங்க பைக்ல வந்து என் பக்கத்துல நின்னாங்க. 'உன் மேல சந்தேகமா இருக்கு. ஸ்டேஷனுக்கு வா’ன்னு வலுக்கட்டாயமா ஒரு ஆட்டோவுல ஏத்தினாங்க. அப்போ ஸ்டேஷன்ல மொத்​தமே நாலு போலீஸ்காரங்க இருந்தாங்க. என்னை இழுத்துட்டு வந்த போலீஸ், 'இன்ஸ்பெக்டர் வந்து விசாரிப்பார்’னு சொல்லிட்டுப் போனார். இன்னொரு போலீஸ்​காரர் வந்து, 'பையில் என்ன இருக்கு?’ன்னு கேட்டு அடகுப் பொருளை மீட்க வெச்சிருந்த 6,700 ரூபாயை பிடுங்கிட்டு, கெட்ட வார்த்தையால திட்டிட்டுப் போனார்.

ராத்திரி 11 மணிக்கு பெரியபோலீஸ் அதிகாரி வந்தார். அழுதுட்டு இருந்த என் குழந்தையை, ஒருத்தர் தூக்கிட்டு வெளியே போயிட்டார். அதிகாரி என் பக்கத்துல வந்தார். 'கொஞ்ச நேரம்தான், நான் சொல்றதைக் கேட்டா, உடனே உன்னை ஊருக்கு அனுப்பி வைக்கிறேன்’னு சொல்லிட்டே என் சேலை யை இழுத்தார். 'முடியாது’னு அழுதேன். 'ச்சீ **... ஒழுங்கா அவுத்​துட்டு வா, இல்லைன்னா விபசார கேஸ் போட்டு நாளைக்குப் பேப்பர்ல உன் படம் வரும்’னார். அப்பவும் நான் அழுகையை நிறுத்தலை. உடனே ஒரு போலீஸைக் கூப்பிட்டு, 'என்னையா ஆளு இவ? உடனே ரெடி பண்ணுய்யா’ என்றார்.

உள்ளே வந்த ஒரு போலீஸ்காரர், என் கன்னத்தில் ஓங்கி அடிச்சார். மூங்கில் கம்பை வைத்து, என் முதுகிலும், மார்பிலும், இடுப்பிலும், கண்ணிலும், தொடை​யிலும் மாறிமாறி அடிச்சார். நான் கத்தி​யதும், 'கத்தாதே, கத்தாதே’ என்று வாயைப் பொத்தி வைச்சு அடிச்சாங்க. என் துணிகளை அவங்​களே கழட்டுனாங்க. கதவை ஒருத்தர் மூடிட்டுப் போனார். அதுக்குப் பிறகு அந்த அதிகாரி வலுக்கட்டாயமா என் மேல படுத்தார். 'சார், நான் இன்னைக்குத்தான் தலைக்கு ஊத்தி இருக்கேன். ரத்தப் போக்கு இருக்​கு’ன்னு சொன்னேன். 'உன் துணியை உருவும்​போதே தெரியும். இதுக்கு மேலே எதுவும் பேசாதே’ன்​னுட்டு...'' அதற்கு மேல் வசந்தியால் சொல்ல முடியாமல் நிறுத்துகிறார்.

''அதுக்கப்புறம் நான் மயங்கிட்டேன். அரை மயக்கத்துல கிடந்த என்னை அவங்கதான் எழுப்​பினாங்க. அந்த இடம் ரத்தமாக் கிடந்துச்சு. என் சேலையைக் கிழிச்சே அதையெல்லாம் துடைக்கச் சொன்​னாங்க. பாத்ரூம் போனேன். முதல்ல வெளியே போன போலீஸ்காரர் மறுபடி வந்து, அவரும் அதே கொடுமையைப் பண்ணினார். மறுபடியும் மயங்கிட்டேன். நள்ளிரவு நேரத்துல என் முகத்துல தண்ணீரை ஊத்தி எழுப்பினாங்க. 12.30 மணி இருக்கும். என் சேலை, பாவாடையைக் கொண்டு வந்து கொடுத்தாங்க. லோக்கல் டாக்டர் ஒருத்தர் ஒரு மணி நேரம் கழிச்சு வந்தார். என்னைப் பார்த்தார். ஏதோ ஊசி போட்டார். காலையில எழுப்பி விட்டு, சுடுதண்ணீர் வைச்சுக் குளிக்கச் சொன்னாங்க. பிறகு, அம்மாவுக்குத் தகவல் சொன்னாங்க. அன்னைக்கு முழுசும் ஸ்டேசன்லதான் இருந்தேன். மறுநாள் ராத்திரி பேப்பர்ல கையெழுத்து வாங்கினாங்க. 'சின்ன கேஸ் போட்ருக்கோம். ஒத்துக்கோ, இல்லைன்னா கஞ்சா கேஸ் போட்டு உள்ளே தள்ளிடுவோம். உன் குடும்பம் சீரழிஞ்சிடும்’னாங்க. பிறகு நீதிபதி வீட்டுக்குக் கூட்​டிட்டுப் போனாங்க. அப்புறம் நிலக்கோட்டை ஜெயிலில் அடைச்சுட்டாங்க. ஒரு மாசம் ஜெயில்ல இருந்தேன்'' என்று கதறினார் வசந்தி!

வெளியில் வந்தும் வசந்திக்கு நிம்மதி இல்லை. போலீஸ் உருட்டலும் மிரட்டலும் தொடரவே, விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார். பெரியகுளம் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு காப்பாற்றப்​பட்டுள்ள வசந்தி விவகாரத்தை, தவமணி என்ற வழக்கறிஞர் கையில் எடுத்துள்ளார்.

''ஒரு கையில் கத்தி, ஒரு கையில் கம்பு வைத்து வழிப்பறி செய்ததாக அப்பட்டமான பொய் வழக்கு வசந்தி மீது போடப்பட்டுள்ளது. 'வெளியே சொன்னால் கஞ்சா கேஸ் வரும்’ என்று அச்சுறுத்தி இருக்​கிறார்கள். இந்த வழக்கை எடுத்த எங்களுக்கே ஏகப்பட்ட மிரட்டல்கள் என்றால், அந்தப் பெண்ணை எப்படி எல்லாம் மிரட்டி இருப்பார்கள்?'' என்று கேட்கிறார் தவமணி.

வசந்தியின் கணவர் பெரியசாமியோ, ''அம்மா வீட்டுக்கு பொருளைத் திருப்பப் போனவ, அங்கேயே இருந்​துட்டான்னு நினைச்சுட்டேன். பேப்பர்ல பார்த்து பக்கத்து வீட்டுக்காரங்க சொன்ன பிறகுதான் விஷயமே தெரிய வந்துச்சு. மானத்துக்கு பயந்துக் கிட்டு அமைதியா இருந்தோம். போலீஸ்காரங்க வந்து மிரட்டிக்கிட்டே இருக்காங்க'' என்றார்.

இப்போதும் குற்றவாளிகள் பெயரை நாம் வெளியிடவில்லை. இந்தக் கொடூரச் செயலை செய்தவர்களை டி.ஜி.பி-யும் முதல்வரும் என்ன செய்யப்போகிறார்கள் என்பதை மட்டும் கவனித்துக் கொண்டே இருப்போம்!

- சண்.சரவணகுமார் http://www.tamilnadutalk.com/portal/index.php

கருத்துகள் இல்லை: