ஞாயிறு, 14 அக்டோபர், 2012

வீரபாண்டி ஆறுமுகம்:போலீஸார் மீது வழக்குத் தொடுப்பேன்

 பழி வாங்கும் நோக்குடன் செயல்பட்ட சேலம் மாநகர போலீஸார் மீது வழக்கு தொடுக்க இருப்பதாக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தெரிவித்தார்.
வீரபாண்டி ஆறுமுகத்தை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தது செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. இதையடுத்து, வேலூர் சிறையில் இருந்து சனிக்கிழமை அவர் விடுவிக்கப்பட்டார். அங்கம்மாள் காலனி குடிசைகள் எரிப்பு வழக்கில் கடந்த ஜூன் 4-ஆம் தேதி கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட அவர், 131 நாள்களுக்குப் பிறகு சனிக்கிழமை பகல் 1.25 மணியளவில் வீடு திரும்பினார்முன்னதாக வீரபாண்டி ஆறுமுகத்துக்கு வழி நெடுகிலும் ஏராளமான திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், பொன்னாடை, மலர் மாலைகள் அணிவித்தும் வாழ்த்துத் தெரிவித்தனர். சுமார் 100 கார்கள் புடைசூழ பூலாவரியில் உள்ள வீட்டுக்குச் சென்ற அவருக்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடி நின்று வரவேற்புக் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் வீரபாண்டி ஆறுமுகம் கூறியது: அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மீது வழக்கு தொடரப்பட்டு குண்டர் சட்டம் பாய்ந்தது. ஆனால், இப்போது நீதி வென்று நான் விடுதலையாகி உள்ளேன். என் மீது பொய் வழக்கு தொடர்ந்த சேலம் மாநகர போலீஸாருக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. எனது வழக்கு தொடர்பான தீர்ப்பின் நகல் கிடைத்த உடன், கட்சி வழக்குரைஞர்களுடன் ஆலோசனை நடத்தி போலீஸார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்.
ஓரிரு நாள்களில் சென்னை சென்று திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்திப்பேன். சிறையில் இருந்து விடுதலையானதற்கு கருணாநிதி, மு.க.அழகிரி உள்ளிட்டோர் தொலைபேசியில் வாழ்த்துத் தெரிவித்தனர் என்றார் அவர்

கருத்துகள் இல்லை: