செவ்வாய், 16 அக்டோபர், 2012

ஈரோட்டில் 77 கொத்தடிமைகள் மீட்பு

ஈரோட்டில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த ஸ்பின்னிங் மில்லில் கொத்தடிமைகளாக இருந்த 77 பேர் மீட்கப்பட்டனர். ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட கருங்கல்பாளையம் ராஜகோபால் தோட்டம் ஆறுமுகம் வீதியில் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான இடத்தில் கருப்புசாமி (60), மாணிக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (45), நசியனூர் பகுதியைச் சேர்ந்த செந்தில் ஆகியோர் சேர்ந்து தனலட்சுமி சிந்தடிக் ஸ்பின்னிங் என்ற பெயரில் ஸ்பின்னிங் மில் நடத்தி வருகிறார்கள்.

இங்கு 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்த மில்லில் வேலை செய்வதற்காக தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய மாவட்டங்களுக்கு சென்று அங்கிருந்து குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அழைத்து வந்துள்ளனர். குழந்தைகளின் பெற்றோரிடம் 10 ஆயிரம், 20 ஆயிரம் ரூபாய் அட்வான்சாக கொடுத்துவிட்டு அழைத்து வந்துள்ளனர்.

தினசரி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ஒரு ஷிப்டாகவும், இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை ஒரு ஷிப்டாகவும் தினசரி 2 ஷிப்ட் வேலை நடந்து வந்துள்ளது. இந்நிலையில் இந்த மில்லில் கொத்தடிமைகளாகவும், குழந்தை தொழிலாளர்களை பயன்படுத்துவதாகவும் ஈரோடு மாநகராட்சி மேயர் மல்லிகா பரமசிவத்திற்கு தகவல் வந்துள்ளது.

உடனடியாக மாவட்ட எஸ்.பி. பொன்னியை சந்தித்து கொத்தடிமைகள் குறித்தும், அவர்களை மீட்பது குறித்தும் ஆலோசனை நடத்தினார். போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி மேயர் மல்லிகா பரமசிவம், மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ் ஆகியோர் தலைமையில் அதிரடியாக மில்லுக்குள் சென்றனர். அங்கு வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களை அழைத்து விசாரித்தார். அப்போது 8 மணி நேரத்திற்கு பதிலாக 12 மணி நேரம் வேலை வாங்கியதும், குழந்தை தொழிலாளர்களை பயன்படுத்தியதும் தெரியவந்தது. அங்கிருந்தவர்களில் பெரும்பாலான குழந்தைகள் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதுகுறித்து உடனடியாக தர்மபுரி மாவட்ட கலெக்டருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து உடனடியாக மாவட்ட கலெக்டர் சண்முகம், மாவட்ட எஸ்.பி., பொன்னி ஆகியோர் சம்பந்தப்பட்ட மில்லிற்கு சென்று மீட்கப்பட்ட குழந்தைகளிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது குழந்தைகள் வறுமையின் காரணமாக படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வேலைக்கு வந்ததாக தெரிவித்தார்கள். தொழிற்சாலை நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

இது குறித்து கலெக்டர் சண்முகம் கூறியதாவது: இந்த மில் அனுமதியின்றி செயல்பட்டு வந்துள்ளது. இங்கு பணியாற்றி வந்த 60 பேர் தற்போது மீட்கப்பட்டுள்ளனர். இதில் 14 வயதிற்குட்பட்ட குழந்தை தொழிலாளர்கள் 25 பேர் வரை வேலை பார்த்து வந்துள்ளனர். குழந்தை தொழிலாளர்களை பயன்படுத்தியது தொடர்பாகவும் சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் சண்முகம் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: