வெள்ளி, 21 ஜூன், 2013

சூது கவ்வும்‘ பாணியில் கடத்தியதாக வாக்குமூலம்! சிறுவனை கடத்தி 13 லட்சத்துடன் தப்பிய கல்லூரி மாணவன் கைது

கல்லூரி மாணவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சூது கவ்வும்
சினிமா பாணியில் சிறுவனை கடத்தியதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள கொத்தம்பட்டியை சேர்ந்தவர் அருணாச்சலம். அரணிபட்டி ஊராட்சி செயலர். இவரது மனைவி ராணி. இவர்களது மகன் அழகேசன் (13). இவன் 8ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த 15ம் தேதி மாலை ராணியின் வீட்டுக்கு பைக்கில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், உறவினர்கள் என கூறி திருமண அழைப்பிதழ் தந்தனர். பின்னர் அருணாச்சலத்தின் அண்ணன் தனபாலுக்கு அழைப்பிதழ் தர வீட்டை காட்டும்படி கூறி சிறுவனை பைக்கில் அழைத்து சென்றனர். பின்னர் அவனை கடத்தி சென்றனர்.

'அதன்பின் சிறுவன் வீடு திரும்பவில்லை. அன்று இரவு அருணாசலத்தின் செல்போனை தொடர்பு கொண்ட மர்ம நபர், சிறுவன் அழகேசனை கடத்தி இருப்பதாகவும் ரூ.30 லட்சம் தந்தால் விடுவதாகவும், போலீசில் சொன்னால் அவனை கொன்று விடுவோம் என்று கூறி மிரட்டினார். இதுகுறித்து கந்தர்வகோட்டை போலீசில் அருணாச்சலம் ரகசியமாக புகார் செய்தார். போலீசாரும், ரகசியமாக மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கடந்த 17ம் தேதி மீண்டும் அருணாச்சலத்தின் போனுக்கு மர்ம நபர் தொடர்பு கொண்டான். அப்போது, Ôஎன்னிடம் அவ்வளவு பணம் இல்லைÕ என்று கூறினார். அதன்பின் பேரம் பேசி கடைசியில் ரூ.13 லட்சம் முடிவானது. இதையடுத்து, Ôதச்சன்குறிச்சி மலைக்கு 18ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பணத்தை கொண்டு வரவேண்டும். இதை போலீசுக்கு தெரியப்படுத்த கூடாதுÕ என்று மர்ம ஆசாமி கூறினான்.

எனினும், போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புதுக்கோட்டை எஸ்பி உமா தலைமையில் 8 தனிப்படை அமைக்கப்பட்டு புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் மப்டி உடையில் போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டனர். மர்ம நபர்கள் பேசிய செல்போன் டவர்கள் மூலம் மர்ம நபர்கள் தச்சன்குறிச்சி, வல்லம், செங்கிப்பட்டி, லால்குடி பகுதிகளில் மாறி மாறி செல்வது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பகுதிகளில் போலீஸ் காவல் பலப்படுத்தப்பட்டு தேடுதல் பணி நடந்தது.

தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை என 3 மாவட்ட போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் மர்ம ஆசாமி கூறியபடி 17ம் தேதி ரூ.13 லட்சத்தை நள்ளிரவு 2 மணிக்கு தஞ்சை & புதுக்கோட்டை சாலையில் காடவராயன்பட்டியில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரி அருகே முந்திரி காட்டில் அருணாச்சலம் வைத்தார். அந்த இடத்தை சுற்றிலும் போலீசார் மறைந்திருந்து கண்காணித்தனர். சிறிது நேரத்தில் பணப்பை மாயமானது. போலீசார் பலர் கண்காணிப்பில் இருந்த போதே பணம் காணாமல் போனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறிது நேரத்தில் மர்ம நபர் கூறியபடி தஞ்சை & திருச்சி சாலையில் சிறுவன் அழகேசனை போலீசார் மீட்டனர்.

இதையடுத்து பணத்துடன் தப்பிய ஆசாமியை பிடிக்க டிஐஜி அமல்ராஜ் மேற்பார்வையில் 8 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கும்பகோணம், சிதம்பரம், கடலூர், விழுப்புரம், சென்னை ஆகிய பகுதிகளில் தீவிரமாக விசாரித்தனர். கடத்தல் ஆசாமி பல செல்போன்களை பயன்படுத்தி பேசியிருந்தாலும், அவற்றின் ஐஎம்இஐ எண்ணை கொண்டு போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டனர். இந்நிலையில் சென்னையில் ஒரு இடத்தில் பதுங்கி இருந்த கடத்தல் ஆசாமியை போலீசார் அதிரடியாக சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.
அவரை இன்று காலை புதுக்கோட்டைக்கு அழைத்து வந்து ரகசிய இடத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், தஞ்சை மாவட்டம் வல்லம் அருகேயுள்ள அரையாணிப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் (24) என்பதும், தனியார் கலை கல்லூரியில் பிபிஏ இறுதியாண்டு படித்து வருவதும் தெரிய வந்தது.

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு Ôசூது கவ்வும்Õ சினிமாவில் வருவது போல மாணவனை கடத்தி பணம் பறித்ததாக போலீசில் ராஜேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடக்கிறது. அருணாச்சலம் கொடுத்த பணம் எங்கே என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

கருத்துகள் இல்லை: