திங்கள், 17 ஜூன், 2013

கௌரவகொலைக்கு அஞ்சிய பஞ்சாப் காதலர்கள் ஆஸ்திரேலியாவில் தஞ்சம்

மெல்பர்ன்: ஜாதி மாறி திருமணம் செய்து கொண்ட பஞ்சாப் தம்பதி,
ஆஸ்திரேலியாவில் தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பஞ்சாபை சேர்ந்த சீக்கிய வாலிபர் ஒருவரும், இந்து மதத்தை சேர்ந்த இளம்பெண்ணும் கடந்த 5 ஆண்டுக்கு முன்னர் ஆஸ்திரேலியா வந்துள்ளனர். இருவரும் காதலித்து கடந்த 2007ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஆனால், தங்கள் பெற்றோருக்கு இதுபற்றி இருவரும் தெரிவிக்கவில்லை. எனினும் ஒரு கட்டத்தில் திருமண விஷயம் தெரிந்து வாலிபரின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.


இந்நிலையில் 2008ம் ஆண்டு விசா முடிந்து நாடு திரும்பும் நிலையில் காதல் ஜோடியினர் இருந்தனர். ஆனால், இந்தியாவில் பஞ்சாப் உள்பட சில மாநிலங்களில் ஜாதி மாறி திருமணம் செய்பவர்களை பெற்றோரே கவுரவத்துக்காக கொலை செய்வது அடிக்கடி நடக்கிறது. இதை காரணம் காட்டி தங்களுக்கு பாதுகாப்பு அளித்து விசாவை நீட்டித்து வழங்க வேண்டும் என்று காதல் ஜோடி விண்ணப்பித்தது. இதை ஆஸ்திரேலிய குடியுரிமை மற்றும் அகதிகள் துறை அதிகாரிகள் நிராகரித்தனர். இதையடுத்து, தங்களை அகதிகளாக கருதி தஞ்சம் அளிக்க வேண்டும் என்று கோரி, அகதிகள் மறு ஆய்வு டிரிபியூனலில் காதல் ஜோடி விண்ணப்பித்தது. அந்த மனுவும் நிராகரிக்கப்பட்டது.

Ôகாதல் திருமணம் செய்து கொண்ட காதல் தம்பதியினர், இந்தியாவிலேயே மும்பை, டெல்லி போன்ற பெரிய நகரங்களில் வாழலாம். அப்போது அவர்களை கண்டுபிடிக்க முடியாதுÕ என்று கூறி மனுவை டிரிபியூனல் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், பெடரல் சர்கியூட் கோர்ட்டில் சீக்கிய வாலிபர் அப்பீல் மனு தாக்கல் செய்தார். அதில், Ôதங்கள் பெற்றோருக்கு அரசியல் மற்றும் போலீஸ் செல்வாக்கு உள்ளது. இந்தியாவில் எங்கு தங்கினாலும் கண்டுபிடித்து விடுவார்கள். எனவே, ஆஸ்திரேலியாவில் தங்க அனுமதி அளிக்க வேண்டும்Õ என்று கூறினார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி வார்விக் நெவிலி, ஜாதி மாறி திருமணம் செய்து கொண்ட தம்பதி, ஆஸ்திரேலியாவில் தங்க அனுமதி வழங்குவது குறித்து டிரிபியூனல் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். எனினும், இந்த உத்தரவை எதிர்த்து ஆஸ்திரேலிய அதிகாரிகள் அப்பீல் செய்ய முடிவெடுத்துள்ளனர். காதலர்களின் நலன் கருதி அவர்களுடைய பெயர்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.

கருத்துகள் இல்லை: