திங்கள், 17 ஜூன், 2013

குடியால் தமிழகம் நாசமாகிறது சாண் ஏற முழம் சறுக்கிறது

குடிப்பழக்கம் குடும்பத்தை அழிக்கும். கோபமும் அப்படித்தான். இந்த
இரண்டும் ஒன்று சேர்ந்தால் கேட்கவா வேண்டும். குடித்துவிட்டு ஊர் சுற்றிய கணவனை கண்டித்துள்ளார் கர்ப்பிணி மனைவி. திருவிழாவுக்கு வந்திருந்த அவரது அம்மாவும் மகளின் நிலையை கண்டு மருமகனிடம் தகராறு செய்துள்ளார். போதையும் கோபமும் தலைக்கு ஏறியதில் மனைவியை வீட்டுக்குள் தள்ளி பூட்டிவிட்டு, மாமியாரை அரிவாள்மனையால் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டார் மருமகன்.
மதுராந்தகம் அடுத்த மாமண்டூர் காமராஜர் நகரை சேர்ந்த ஓட்டல் ஊழியர் அய்யப்பன் (30). படாளம் அம்பேத்கர் நகரை சேர்ந்த நாகா மகள் மீனாவை 2010 ல் திருமணம் செய்து கொண்டார். தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது மீனா மீண்டும் கர்ப்பமாக உள்ளார். மாமண்டூரில் கோயில் திருவிழா நடந்து வருகிறது. இதற்காக தனது அம்மா நவநீதத்தை (48) அழைத்திருந்தார் மீனா. நேற்று முன்தினம் மாலை வெளியில் சென்ற மருமகன் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராததால் அன்றிரவு மகள் வீட்டிலேயே நவநீதம் தங்கிவிட்டார்.< மறுநாள் காலை போதையில் வீட்டுக்கு வந்த அய்யப்பனை மனைவி கண்டித்திருக்கிறார். ‘இரவெல்லாம் எங்கே போனீர்கள்? இப்படி பொறுப்பில்லாமல் குடித்துவிட்டு சுற்றிக் கொண்டிருந்தால் குடும்பம் என்ன ஆவது?’ என கேட்க தம்பதிக்குள் தகராறு வலுத்தது. மகளுக்கு ஆதரவாக நவநீதமும் மருமகனிடம் சண்டை போட்டுள்ளார். ஆத்திரமடைந்த அய்யப்பன், மனைவியை குடிசைக்குள் தள்ளி  பூட்டினார். வீட்டில் இருந்த அரிவாள்மனையை எடுத்து நவநீதம் கழுத்தை அறுத்துள்ளார். வலியால் துடித்த நவநீதம், அந்த இடத்திலேயே மயங்கி விழுந்து இறந்தார்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அய்யப்பன் தப்பியோடி விட்டார். தகவலறிந்து வந்த போலீசார், பூட்டை உடைத்து மீனாவை மீட்டனர். புகாரின் பேரில் கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த அய்யப்பனை தேடிப் பிடித்து கைது செய்தனர். குடியால் கொலைகாரனாகி, இன்று சிறை கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கிறார்.

போதை பழக்கம் இன்று தீராத பெரும் வியாதியாகிவிட்டது. குடியால் பல குடும்பங்கள் சீரழிந்து வருகின்றன. தாலியை இழக்கும் பெண்கள், அனாதைகளாக்கப்படும் குழந்தைகள், கொலைகாரர்களாக மாறும் குடும்ப தலைவன்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இவை அத்தனைக்கும் குடியும் கோபமும்தான் காரணமாக உள்ளன. இளம்வயதிலேயே பலர் குடிக்கு அடிமையாகி விடுகின்றனர். இதனால் எதிர்காலத்தை தொலைத்துவிட்டு அவதிப்படுகின்றனர். குடிப்பழக்கம் தன்னையும் தனது குடும்பத்தையும் மட்டுமல்ல அடுத்தவர் குடும்பத்தையும் அழித்துவிடும்tamilmurasu.org

கருத்துகள் இல்லை: