செவ்வாய், 18 ஜூன், 2013

பெரியாரின் பெண்ணியமும் பெண்ணியவாதிகளின் பெரியார் எதிர்ப்பும்-புறக்கணிப்பும்

வே.மதிமாறன்
periyar
“இயற்கை உணர்ச்சியைக் கட்டுப்படுத்தும் சட்டங்களும், முறைகளும் சரிவர நடைபெறா. அப்படி எங்காவது நடைபெற்றாலும் நிலைத்திருக்க முடியாது. இந்தக் கொடுமைகள் இப்படியே இருக்குமானால் 4 அல்லது 5 பெண்கள் கூடி ஒரு ஆணை தங்கள் இன்பத்திற்கென்று ஏற்படுத்தி, அவனுக்கு நல்ல போஷணயும், அழகும் செய்து அடைத்து வைத்து அவனைத் தங்கள் காம இச்சை தீர்க்கும் இன்பப் பொருளாக அனுபவிக்கும் காலமும், வீட்டு அடிமையாய் நடத்தப்படும் காலமும் வந்துவிடும் என்று நாம் கருதுகிறோம். அப்படி வந்தால் ஆச்சரியப்படமாட்டோம்.
இந்நாட்டில் ஒழுக்கம் சீர்படவேண்டுமானல், விபச்சாரம் என்னும் காரியத்தில் உள்ள கெடுதிகள் நீங்கவேண்டுமானல், விதைவத் தன்மையும் ஆண்களுக்கு விபச்சாரத் தோஷமில்லை என்கிற நடப்பையும் ஒழித்தாக வேண்டும்.”- பெரியார் 8-2-1931
“ஆண் இரண்டு வைப்பாட்டிகளை வைத்துக்கொண்டால், பெண்கள் 3 ஆசை நாயகர்களை வைத்துக்கொள்ள முற்படவேண்டும். உடனே நிலைமை சரிபட்டுப் போகும். உண்மையான சமரசம் தோன்றிவிடும். பிறகு கஷ்டமே இருக்காது.” -பெரியார் 8-2-1931
பிராமணன் – சூத்திரன் என்ற அமைப்புகக்கும், பேதத்திற்கும், புருஷன்-பொண்டாட்டி என்ற விகித்திற்கும் எந்தவித வேறுபாடும் கிடையாதே! உலகத்திற்கு பயன்படும்படியான பேர் பாதி மனித சக்தியை, பெண்ணடிமை மூலம் நாம் விரயப்படுத்திக்கொண்டு வருகிறோம்.
பெண்கள் வீட்டிலேயே அடைப்பட்டிருப்பதால்தான் அதிகமாக பிள்ளை பெறுகிறார்கள். பிள்ளைகள் கவனிப்பதைப் பொழுது போக்காக கருதுகின்றனர். உத்தியோகத்துக்குப் போக ஆரம்பித்தால் பிள்ளைபெற வேண்டும் என்ற எண்ணமே பெண்களுக்கு வராது. உத்தியோகத்தில் சரிபகுதி பெண்களுக்குக் கொடுக்க வேண்டும். அதில் அவர்களை திருப்பி விட்டால் தாங்களாகவே பிள்ளை பெறுவதைத் தடுத்துக்கொள்வார்கள். பிள்ளை பெறுவதைத் தொல்லையாக கருதுவார்கள். -பெரியார் 17-3-1970
சம்பாதனை, குடும்பப் பொறுப்பு, குழந்தைகள் பெற்றல் அதைக் காப்பாற்றும் திறமை ஆகியவைகள் ஒரு பெண்ணுக்கு ஏற்பட்டு, இத்தன்மைகள் இல்லாத ஒரு புருசனை கட்டிக்கொள்வதாய் இருந்தால் மாத்திரம், ஆண்களைப் பெண்கள் அடக்கி ஆளமுடியும். முடியாவிட்டால் சம சுதந்திரமாகவாவது இருக்கமுடியும். -பெரியார் 1-3-1936
பெரியார் தன்னை ஒரு ஆணாக எப்போதும் கருதியதில்லை என்பதற்கு இதுபோன்ற அவருடைய சிந்தனைகள் ஒரு சாட்சி.
‘அப்போ அவரு என்ன பொட்டையா, இல்ல அலியா?’ என்று அவர் மீது மதப் பழமைவாதிகள் வெறுப்பைக் கொட்டினால், ‘ஆம் அதுதான் நானென்றால் அதுவாக இருந்துவிட்டுப் போகிறேன். ஆனால், இப்படி ஒரு குறிப்பிட்ட மக்களை இழிவான குறியீடாக காட்டுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இதுதான் உங்களின் ஆண் திமிர்’ என்று அதையும் பெண்ணியப் பார்வையில் கண்டிப்பார்.
இப்படி பேசுவதால் எல்லா மதவாதிகளும், தன் குடும்பத்து பெண்களைப் பற்றி இழிவாக பேசுவார்கள் என்று தெரிந்தும் பேசினார். அப்படி தன் வீட்டுப் பெண்களை இழிவாக பேசியதற்காக, அவர்கள் வீட்டு பெண்களைக் குறித்து பெரியார் ஒருபோதும் இழிவாக பேசியதில்லை.
காரணம், அவர்கள் வீட்டுப் பெண்களுக்கு அவர்களே எதிரிகளாக இருந்தார்கள். பெரியார்தான் ஆதரவாக இருந்தார். அவர்களின் கல்வி, விடுதலைக் குறித்து தொடர்ந்து போராடினார்.பெரியாரை இழிவாக திட்டியவர்களின் குடும்பத்து பெண்களும் இன்று படித்து நல்ல நிலையில் இருப்பதற்கு பெரியாரே காரணம்.
பெரியாரின் பெண் விடுதலை கருத்துகள் புகழ் பெற்றவை மட்டுமல்ல நேர்மையானவை. பெண்கள் விடுதலை குறித்து சிந்தனையாக மட்டுமல்லாமல் அவைகளுக்காக செயலாற்றியவர் பெரியார்.
குறிப்பாக சுயமரியாதை திருமணங்களை பெரியார் கொண்டு வந்தது, பார்ப்பன எதிர்ப்பு, இந்து மத எதிர்ப்பு, சடங்க மறுப்பு கருத்துகளுக்காக மட்டுமல்ல; அதைவிட முக்கியமாக இந்து திருமணமுறை முழுக்க முழுக்க பெண்களுக்கு எதிரான வடிவமாக இருக்கிறது என்பதினாலும்தான்.
‘கன்னிகாதான முகூர்த்தம்’ ‘தார முகூர்த்தம்’ ‘விவாக சுப முகூர்த்தம்’ என்றுதான் திருமணங்களை குறிப்பிடுவார்கள். இவைகள் எல்லாமே பெண்களை பொருளாக, இழிவாக சித்தரிப்பவை.
பெரியார் இது பற்றி சொல்கிறார்: கன்னிகா தானம் என்பதற்குக் கன்னியைத் தானமாகக் கொடுத்து விடுவது என்று பொருள். …. தாரா முகூர்த்தம் என்றால், பெண்ணை தாரை வார்த்து தானமாகக் கொடுப்பது.
அதனால்தான் பெரியார், ‘வாழ்க்கை ஒப்பந்த விழா’ ‘வாழ்க்கை துணை நலம்’ என்று பெண்களின் மரியாதைக்கு முக்கியத்துவம் தரும் சுயமரியாதை வாக்கியங்களை கொண்டு வந்தார். பெண்கள் திருமணம், கோயில் தவிர அரசியல், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாததினால்தான் பெரியார் பெண்கள் அதிகம் போகும் திருமணங்களில் பேசும் முறையை கொண்டுவந்தார். அதனால்தான் சுயமரியாதை திருமணங்களில் சொற்பொழிவு.
இதை புரிந்துகொள்ளாமல், ‘கல்யாண வீட்லகூட அரசியல் பேசுறானுங்கய்யா… அசிங்கம் புடுச்சவனுங்க..’ என்று வெறுப்படைகிற பழமைவாதிகள். ‘கல்யாண வீட்லகூட மந்திரம் ஓதுறானுங்கய்யா… மானங்கெட்டவனுங்க..’ என்று சொல்வதில்லை.
திருமணங்களில் பெரியார் பேசியவைகளில் சில…
பெண் பெருமை, வருணனை ஆகியவைகளில், பெண்கள் அங்கம் அவயங்கள், சாயல் ஆகியவைகளைப் பற்றி அய்ம்பது வரி இருந்தால், அவர்களது அறிவு, அவர்களால் ஏற்படும் பயன், சக்தி, திறமைபற்றி ஒரு அய்ந்து வரிகூட இருக்காது. பெண்ணின் உருவை அலங்கரிப்பது, அழகை மெச்சுவது, சாயலைப் புகழுவது ஆகியவை பெண்கள் சமுதயாத்திற்கு அவமானம். இழிவு. அடிமைத்தனம் என்பதை ஆயிரத்தில் ஒரு பெண்ணாவது உணர்ந்திருக்கிறார் என்று சொல்ல முடியுமா…
‘பெண்களுக்குத் தகப்பன் சொத்தில் உரிமை கிடையாது ஏன்? என்று எந்தப் பெண்ணாவது காரணம் கேட்டாளா? பெண்களை அனுபவிக்கிறவன், வேலை வாங்கிப் பயனடைகிறவன் காப்பாற்றமாட்டானா? என்பதுதான்.
பெண்கள் படிப்பு நல்ல மாப்பிள்ளை சம்பாதிக்க ஓர் அட்வர்டைஸ்மெண்டாக பயன்பட்டது தவிர, மற்றபடி வீணாகப் போய்விட்டதல்லவா? அதுபோல் ஒரு பெண்ணைத் தாய், தகப்பன் பி.ஏ., படிக்க வைத்து ஒருவன் கையில் பிடித்துக் கொடுத்து அந்தப் பெண் சமையல் செய்யவும் குழந்தை வளர்க்கவும், நகை, துணி அலங்காரங்களுடன் மக்கள் கவனத்தை ஈர்க்கவும் செய்தால், பி.ஏ., படிக்க வைத்த பணம் வீண் என்பதோடு, அதற்காக சர்க்கார் செலவழித்த மக்கள் பணமும் வீண்தானே? இது தேசியக் குற்றமாகாதா?
நான் ஒரு சில படித்த பெண்களைப் பார்க்கிறேன். வயிற்றில் ஒரு குழந்தை, கட்கத்தில் ஒரு குழந்தை. இவ்வளவோடு சிலருக்கு முன்னால் ஓடும்படியான ஒரு குழந்தையை விட்டுவிட்டு, இப்படியாகப் படைகளோடு நல்ல நிகழ்ச்சிகள் நடக்கும் கூட்டங்களுக்கு வந்து, நடுவிலிருந்து கொண்டு நிகழ்ச்சிகளுக்கு இடையுறும தொல்லையும் கொடுப்பதைப் பார்க்கிறேன். இதற்காக அவர்கள் வெட்கப்படாததையும், சிலர் வருத்தப்படுவதையும் பார்க்கிறேன். இது மனித சமூகத்தில் இருக்கத்தக்கதா? அதுவும் நாகரிக சமூகத்தில், படித்த பெண்கள் என்கிறவர்களிடையில் இருக்கத் தக்கதா என்று கேட்கிறேன். இந்த லட்சணத்தில் நகைகள், விலையுயர்ந்த துணிகள் அணிந்த குழந்தைகள் கூட்டத்தில் மலஜலம் கழிக்கும், கத்தும், ஆபாசம்!” – பெரியார்.
சுயமரியாதை திருமணத்தின் மூலமாக பெரியளவில் நன்மையையும் பெண்களே அடைந்திருக்கிறார்கள். குறிப்பாக நடுத்தர குடும்பத்துப் பெண்கள்.
தாலி கட்டுதல் என்பது முழுக்க முழுக்க பெண்களுக்கு எதிரானது. ‘நாய்க்குத்தான் கழுத்துல லைசன்ஸ் கட்டுவான். பொம்பளைக்கு எதுக்குடா தாலி? தாலிய எதுக்கு கட்டுறான் என்றால், அதை அறுப்பதற்காகத்தான். உயிரோடு இருக்கும்போது மட்டுமல்ல அவன் இறந்த பிறகும் மனைவியை நிம்மதியாக விடக்கூடாது என்பதற்காகவும்தான் தாலி கட்டுகிறான்’ என்பார் பெரியார்.
புரோகித மறுப்பு திருமணங்களை பாதி சுயமரியாதை திருமணம் என்றும். ஜாதி மறுப்பு திருமணங்களை முழுமையான சுயமரியாதை திருமணமங்கள் என்றும் அழைத்த பெரியார், ஜாதி மறுப்பு, புரோகித மறுப்பு, தாலி மறுப்பு திருமணங்களையே புரட்சிகர திருமணங்கள் என்றார்.
தன் தலைமையில் நடக்கும் ஒரு திருமணத்தில் பெரியார், ‘கல்யாணத்தையே தடை செய்யனும். ஒரு பெண்ணோட வாழ்க்கையை சீரழிக்க எத்தனைபேர் இங்க கூடி இருக்கிறார்கள். இனி மணமக்களை வாழ்த்தி பேசுறவன். கல்யாணத்தை நடத்தி வைக்கிறவன். கல்யாணத்திற்கு தலைமை தாங்குறவன் இவனுங்க எல்லோரையும் புடுச்சி ஜெயில்ல போடனும்’ என்கிறார். சுயமரியாதை திருமணத்திலேயே இப்படி பேசியிருக்கிறார்.
காரணம் தன் தலைமையில் நடந்த பல திருமணங்கள் திருமணத்திற்கு பிறகும் பெண்கள் அதுபோலோவே சமைக்க, துவைக்க, பணிவிடை செய்ய என்று பயன்படுத்தப்படுகிறார்களே என்ற கோபம் பெரியாருக்கு.
அதேபோல், பெரியாரின் நெருங்கிய நண்பர்களையும் அவரின் அமைப்புக்கு நன்கொடையும் தந்து உதவுகிற பிரபல ‘பெரிய’ மனிதர்களைகூட பெண்ணிய கருத்துகளுக்காக அவர் விமர்சிக்க தவறியிதில்லை.
அலங்காரம் ஏன்? மக்கள் கவனத்தை ஈர்க்கும்படியான நகை, துணிமணி, ஆபரணம் ஏன்? என்று எந்தப் பெண்ணாவது, பெற்றோராவது, ‘கட்டினவனாவது’ சிந்திக்கிறார்களா? . . . . . . . .
நான் பாமர மக்களை மாத்திரம் சொல்லவில்லை; நம் அறிஞர், செல்வர். தனக்கென வாழாப் பிறர்க்குரியாளரானவர்கள் என்று சொல்லப்படும் பெரியோர்கள் யோக்கியதையும், அவர்கள் பெண்கள் உலகத்துக்கு ஆற்றும் தொண்டுகளையுமே பற்றிச் சொல்லுகிறேன். சர். சண்முகம், சர். முத்தையா குமாரராஜா முதலாகிய திராவிடப் பேரறிஞர் செல்வர்களின் மனைவிகள், தங்கை, தமைக்கைகள், பெண்கள் எங்கே எப்படிப் பிறந்தார்கள்? எப்படி வளர்ந்தா்கள்? எப்படித் தகுதியாக்கினார்கள்? எப்படி இருக்கிறார்கள்?
ஷாப்புக் கடைகள், ஜவுளிக்கடைகள் ஆகியவற்றிற்கு போல் அல்லாமல் நாட்டுக்கு, மனித சமுதாயத்திற்குப் பெண்கள் உலகத்துக்கு இவர்கள் என்ன மாதிரியில் தொண்டாற்ற அல்லது தாங்களாவது ஒரு புகழோ, கீர்த்தியோ பெறத்தக்கபடி வைத்தார்களா? என்று கேட்கிறேன்.
இப்படி பெண்விடுதலை கருத்துக்களுக்காக தன் தோழமைகளையும் தன் இயக்கத்தையும் தன்னையுமே கடுமையாக விமரிசிததுக் கொண்ட பெரியாரை, பெண் விடுதலைக் குறித்து பேசுகிற பெண்கள் மதிப்பதில்லை. இதில் பார்ப்பன மற்றும் பார்ப்பன மனோபாவம் கொண்ட பார்ப்பனரல்லாத பெண்களும் (பார்ப்பன ஆதரவை இழக்க வேண்டிவரும்) ஒருபோலவே நடந்து கொள்கிறார்கள்.
பெரியாரை தவிர்ப்பதற்கான காரணம், ‘பெரியார் பார்ப்பனர்களை விமர்சித்ததே.’ சிலர் வெளிப்படையாக அதை சொல்லுக்கிறார்கள். சிலர் பெரியாரையும் தாண்டிய பெரிய புரட்சிக்காரர்கள் போல் பெரியாரை விமர்சிக்கிறார்கள். புறக்கணிக்கிறார்கள்.
பெரியாரையே மறுக்க, விமர்சிக்க, புறக்கணிப்பதற்காகவே மார்க்கியத்தையே கரைத்துக் குடித்த மேதவிகள் போல் தங்களை பாவித்துக் கொள்கிற இவர்கள், மற்ற நேரங்களில் ‘பெண்ணியமா..? அப்படின்னா..?’ என்று கேட்பவர்களையும்
கலை இலக்கியத்தின் பேரில் மிக பிற்போக்கான ஜாதிய அபிமானம், இந்து கண்ணோட்டம் கொண்ட நபர்களையும் ஆதரிக்கிறார்கள். இவர்களே மார்க்சியத்துக்கு நேர் எதிரான கருத்துகளை உதிர்க்கிறார்கள். பெண் – ஆண் இருபாலரிலும் மார்க்சின் பிறந்த தேதியை மட்டும் தெரிந்து வைத்திருப்பதினாலேயே மார்க்சியவாதிகளாக இருப்பவர்களும் இருக்கிறார்கள்.
ஆக இவர்களின் மார்க்சிய நிலைபாடு அல்லது மார்க்சிய ஆதரவு பெரியாரை எதிர்ப்பதற்காக, புறக்கணிப்பதற்காக மட்டுமே என்பது படு கேவலமாக அம்பலமாகிறது.
அதனால்தான் இவர்கள் பெண்விடுதலைக் கருத்துகளை மார்க்கிய பின்னணியில் பார்க்காமல், பாரதியின் பாடல் வரிகளுக்கு பெண்ணிய சிந்தனையில் முட்டுக் கொடுக்கிறார்கள்.
முற்போக்கான வடித்தோடு அல்லாமல் எந்த தத்துவத் தெளிவுமற்று பெண்களை இழிவாக கருதுகிற, நடத்துகிற இந்து மத்ததோடு தொடர்பு படுத்தி, இந்துமத பின்னணியில் பெண் விடுதலையை இரண்டு இரண்டு வரிகளில் பாட்டெழுதிய பாரதியை மேற்கோள் காட்டி சிலிர்க்கிறா்கள்.
பெண் விடுதலைக் குறித்து அவர் ஒன்றும் பேசவில்லை என்பது மட்டுமல்ல, பெண்களை இழிவாகவும் எழுதியவர் பாரதி. எடுத்துக்காட்டிற்கு சில,
‘கண்கள் இரண்டிருந்தும காணுந்திறமையற்ற
பெண்களின் கூட்டமடி! கிளியே!
பேசிப் பயனென்னடி|?
‘வீரரைப் பெறாத மேன்மை தீர் மங்கையை
ஊரவர் மலடியென்றுரைத்திடு நாடு’
‘ஆணுருக்கொண்ட பெண்களும் அலிகளும்
விணில் இங்கிருந்தெனை வெறுத்திடல் விரும்பேன்’
‘பெண்மை கொண்டேதோ பிதற்றி நிற்கின்றாய்’
‘நெட்டை மரங்களென நின்று புலம்பினார்
பெட்டைப் புலம்பல் பிறர்க்கு துணையாகுமோ?’
‘பெரும்படையுமாம் பெண்மையெங் கெய்தினை?’
இப்படிப்பட்ட பாரதி தான் பெரியாரை மட்டுமல்ல,  மார்க்சையே தாண்டிய பெண் விடுதலைப் போராளியாக தெரிகிறார்  ‘மார்க்சிய’வாதிகளுக்கு.
பாரதியை ஆதரிப்பதற்கு இவர்கள் தீவிரமாக சொல்லும் இன்னொரு காரணம்,
‘பேராசைக் காரனடா பார்ப்பான் – ஆனால்
பெரிய துரை என்னிலுடல் வேர்ப்பான்’ என்று தன் சொந்த ஜாதியையே எதிர்த்தவன் பாரதி என்கிறார்கள். என்ன நியாயம் இது?
‘எங்க ஜாதிக்காரங்களுக்கு ஜாதி உணர்வெல்லாம் கிடையாது தெரியுமா?’ என்பதுபோலவும்,
கம்யுனிஸ்ட் கட்சிகளை, மார்க்சிய லெனினிய அமைப்புகளை ‘பார்ப்பனத் தலைமை’ என்று எதிர் நிலையில் பலரால் விமர்சிக்கப் படுவதைப்போலவே, அதே காரணத்திற்காகவே ஆதரிக்கிற பலரும் இருக்கிறார்கள்.
‘பிராமணர்களை எல்லாம் திட்டிப்பேசுறாரே.. அவரே பிராமணர்தான் தெரியுமா? எங்க ஜாதிக்காரங்க.. ரொம்ப முற்போக்கு.’ என்று ‘முற்போக்காக’ பேசுகிற இந்து பார்ப்பன உணர்வு கொண்ட ஒரு காரிய ‘பைத்தியக்காரனை’ ப்போல்,
பார்ப்பன எதிர்ப்பை பெரியார் பேசியபோது எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், பாரதி பாடினான் என்பதை பெருமையாக குறிப்பிடுகிறா்கள்.
சரி. பாரதி உண்மையிலேயே பார்ப்பன எதிர்ப்பை பேசியதாகவே இருக்கட்டும். அப்படியானால் நீங்கள் ஏன் பார்ப்பன எதிர்ப்பை பேசுவதில்லை?
ஜாதி ஒழிப்பு அடிப்படையில் பெரியார் பேசிய பார்ப்பன எதிர்ப்பு வேண்டாம். ‘எங்க ஆத்துக்காரரும் கச்சேரிக்கு போறாரு..’ என்ற பாணியில் பெயரளவில் பாரதி பேசிய பார்ப்பன எதிர்ப்பையாவது பேசலமே? ஏன் முடியவில்லை?
இந்தியச் சூழலில் பார்ப்பன எதிர்ப்பு என்பது; ஜாதி எதிர்ப்பு, இந்து மத எதிர்ப்பின் அடிப்படை அரசியல் மட்டுமல்ல; பெண் விடுதலைக்கான முதல் எதிர்ப்பும் அதுவே.
பார்ப்பனர்களும், பார்ப்பனியமும் பார்ப்பனரல்லாத மக்களை இழிவாக நடத்துவதற்கு முன், தன் ஜாதியில் உள்ள பெண்களை இழிவாகவும் அவர்கள் மீது மோசமான வன்முறைகளும் செய்தது. செய்கிறது.
ஆக ஜாதி எதிர்ப்பு, பெண் விடுதலை குறித்து பேசுகிறவர்களின் அடிப்படை அரசியல் பார்ப்பன எதிர்ப்பு. அதிலிருந்து துவங்குவதுதான் சரியானது. நியாயமானது. அதைத்தான் டாக்டர் அம்பேத்கரும், தந்தை பெரியாரும் செய்தார்கள்.
பார்ப்பன எதிர்ப்பு அரசியல் என்பது, பார்ப்பனராக பிறந்தவர்கள், மற்றவர்களை விட தன்னை உயர்வாகவும், பெண்களை இழிவாகவும் கருகிறார்களோ அவர்களை மட்டும்தான் குறிக்கும்.
சரியாக திட்டவட்டமாக வரையறுத்துச் சொல்ல வேண்டுமென்றால்; பெரியாரையும், பார்ப்பன எதிர்ப்பையும் தவிர்த்து, பெண் விடுதலை பேசுகிற பெண்கள், ‘ஆணாதிக்கம்’ என்பதை சரியாக புரிந்து அந்த வார்த்தையை சொந்த விருப்பு வெறுப்பற்று மிகச் சரியாக பயன்படுத்துகிறார்கள்.
எந்த ஆண்கள் பெண்களை விட தன்னை உயர்வாகவும் பெண்களை ஆணுக்கு அடங்கியவளாகவும் கருதுகிறா்களோ அவர்களைத்தான் ‘ஆணாதிக்கம் நிறைந்தவர்கள்’ என்பதும் குறிக்கும்.
‘யாரோ சில ஆண்கள் செய்த தப்புக்கு எங்க அப்பா, அண்ணன், சித்தப்பா, அத்திம்பேரு, ஆத்துக்காரரு இவர்களை எல்லாம் சேர்த்து எப்படி நீங்கள் ‘ஆணாதிக்கக் கொடுமை’ என்று சொல்லலாம்?’ என்று கேட்க மாட்டார்களோ, அதுபோலவேதான் பார்ப்பன ஆதிக்கமும்.
பெண்கள் துயரம், பெண் உரிமை பேசும்போது,
‘அந்தக் காலத்துல ஆண்கள் செய்த தப்புக்கு, இன்னைக்கு இருக்கிறவர்களை எப்படி குற்றம் சொல்ல முடியும். பெண்கள் இன்னைக்கு எவ்வளவோ முன்னேறிவிட்டார்கள். ஆண்கள்தான் இன்னைக்கு நிறைய கஷ்டப்படுகிறார்கள். வேலையில்ல, வறுமையில் இருக்கிறார்கள். பெண்களுக்கு இடஒதுக்கீடு இருக்கு. சலுகையிருக்கு. தனிப்பட்ட முறையிலான காழ்ப்புணர்ச்சி காரணமாககூட, ஒருபெண் ஒரு ஆணை வன்கொடுமை சட்டத்தில் உள்ளே தள்ளிவிடலாம். பாவம் ஆண்கள், அவுங்க ஆண்களாக பிறந்ததைத் தவிர என்ன தவறு செய்தார்கள்?’ என்று பேசுவது எவ்வளவு பெரிய மோசடியோ,
அதுபோலவே பார்ப்பன எதிர்ப்பு பேசும்போது, ‘அந்தக் காலத்துல பிராமணர்கள் செய்த தப்புக்கு இந்தக் காலத்து பிராமணர்கள் என்ன செய்வார்கள்? இன்னைக்கு நிறைய கஷ்டப்படுகிறா்கள். பாவம் பிராமணர்கள், வேலையில்ல, வறுமையில் இருக்கிறார்கள். மத்த ஜாதிக்காரர்களுக்கெல்லாம் இடஒதுக்கீடு இருக்கு. சலுகை இருக்கு. பாவம் பிராமணர்கள். அவர்கள் பிராமணர்களாக பிறந்தததைத் தவிர என்ன தவறு செய்தார்கள்?’ என்பதும்.
எப்படி ஆணாதிக்க மனோபாவம் இல்லாத ஆண்களை பார்ப்பது வால் நட்சத்திரத்தை பார்ப்பது போன்று அரிதாக இருக்கிறதோ, அதுபோலவோ. பார்ப்பன சிந்தனையில்லாத பார்ப்பனர்களை பார்ப்பது… பார்ப்பது… பார்ப்பது.. தெரியில.. கண்ணுக்கு எட்டுன தூரம் ‘நூல்’ நட்சத்திரம்தான் தெரியுது வால் நட்சத்திரம் தெரியல..
ஆக, ஆணாதிக்கத்தை விமர்சிப்பதுபோல்தான் பார்ப்பன ஆதிக்கத்தை விமர்சிப்பதும் என்பதை புரிந்து கொண்டால் பெரியாரரும் டாக்டர் அம்பேத்கரும்தான் பார்ப்பனப் பெண்களுக்கும் தலைவர்களாக தெரிவார்கள்.
இல்லையென்றால் பெண்களுக்கு எதிரான கருத்துகொண்ட பாரதி மட்டுமல்ல ‘ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்’கூட முற்போக்காத்தான் தெரிவார். mathimaran.wordpress.com/
பெரியார் ஓவியம்: நன்றி ஓவியர் மணிவர்மா

கருத்துகள் இல்லை: