ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

வசதிக்கு ஏற்ப சொத்துக்குவிப்பு வழக்கை இழுத்தடிக்கின்றனர்

சென்னை: "அனைத்து சட்டங்களையும், தங்கள் விருப்பத்திற்கும், வசதிக்கும் ஏற்ப, துஷ்பிரயோகம் செய்தவர்கள் தான், சொத்துக்குவிப்பு வழக்கினையும், இழுத்தடிக்கின்றனர்' என, கலைஞர் குற்றம் சாட்டியுள்ளார்.
அவரின் அறிக்கை விவரம்: ஜெயலலிதா மீது, கடந்த 1996ம் ஆண்டு தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கு, பெங்களூரு சிறப்பு கோர்ட்டிற்கு மாற்றப்பட்டு, எட்டு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ஏற்கனவே, இந்த கோர்ட்டில், இரண்டு நீதிபதிகள் விசாரித்த பின், தற்போது விசாரிக்கும் மூன்றாவது நீதிபதி மல்லிகார்ஜுனையாவும், இம்மாதம் ஓய்வு பெறுகிறார். இந்த வழக்கில், விளக்கத்திற்கு மேல் விளக்கம்; கேள்விக்கு மேல் கேள்வி; வாய்தாவிற்கு மேல் வாய்தா கேட்டே, நாட்களை கடத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்களது கோரிக்கைக்கு எதிராக தீர்ப்பு வரும்போது, மேல்முறையீடு செய்து நாட்களை கடத்தி வருகின்றனர். இறுதியாக, இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்கே, தகுதியில்லை என்று ஜெயலலிதா தரப்பினர் முறையிட, "அந்த நீதிபதிக்கு தகுதி இருக்கிறதா, இல்லையா' என்ற விசாரணை தான், தற்போது கர்நாடகா ஐகோர்ட்டில், நடந்து கொண்டிருக்கிறது.
இதன் விளைவாக, அந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக, ஆரம்பம் முதல் தொடர்ந்து வாதிட்டு வரும், மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா, தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அவர் அளித்துள்ள ராஜினாமா கடிதத்தில், அவர் சந்தித்த நெருக்கடிகள், மிரட்டல்களை வேதனையுடன் தெரிவித்துள்ளார். சென்னை ஐகோர்ட்டில், மாரியப்பன் என்பவரின் மேல் முறையீட்டு மனு, 14 ஆண்டுகள் நிலுவையில் இருப்பதற்கு கண்டனம் தெரிவித்த ஐகோர்ட், மூன்று மாதங்களுக்குள், விசாரித்து தீர்ப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு, 14 ஆண்டுகள் நடந்த வழக்குக்கு என்றால், 16 ஆண்டுகளாக நடக்கும் ஜெயலலிதா தரப்பினரின், சொத்துக்குவிப்பு வழக்குக்கும் இந்த தீர்ப்பு பொருந்துமா. இவ்வாறு கருணாநிதி தெரிவித்து உள்ளார்.

கருத்துகள் இல்லை: