வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

ஜெயலலிதாவின் போர்டிகோ அமைச்சர்கள் கார்டியோகிராம் எடுக்கும் நிலையில்!

அமாவாசைக்கும், அப்துல் காதருக்கும் என்ன சம்மந்தம்?” என்று பேச்சுவாக்கில் கேட்பார்கள். அமாவாசைக்கும் அமைச்சரவைக்கும் சம்மந்தம் இருக்கிறதா? உலகின் எந்தப் பகுதியிலும் கிடையாது… தமிழகத்தை தவிர!
அமாவாசை வரும் நாட்களில்தான் தமிழக அமைச்சர்கள் பலருக்கு பி.பி. எகிறும். காரணம், புரட்சித் தலைவி தமது போட்டிகோ சேவகர்களை மாற்றுவது வழமையாக அமாவாசை தினங்களில்தான் என்பதை அமைச்சர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். இந்த மாதம் கடந்த வெள்ளிக்கிழமை வந்தது அமாவாசை.
அன்று அமைச்சர்களின் அலுவலகங்களில் ஆடாத கால்கள், நாற்காலிக் கால்கள்தான்! அமைச்சர் பெருமக்கள் கால்கள் கிடுகிடுவென நடுங்க காத்திருந்தார்கள். ஆனால், எதுவும் நடக்கவில்லை.

கேரள நடைமுறையில் ஆர்வமுள்ள முதல்வர் ஜெயலலிதா, இம்மாதம் வந்தது ஷ்ரவன் அமாவாசை (ஆதிக் பத்ராபாத்) என்பதால், அமைச்சரவை மாற்றத்தை செய்யாமல் ஒத்தி வைத்திருக்கலாம் என்பதாக ஒரு ஊகம் உண்டு. ஆனால், அடுத்த அமாவாசை வரை காத்திருக்காமல், அதற்குமுன் மற்றொரு தேதியை குறித்து வைத்திருக்கிறார் என்பதாக, ஆன்மீக சர்க்கிளில் மற்றொரு பேச்சும் உலாவுகிறது.
இந்த பேச்சின்படி, தமிழக அமைச்சரவையில் உள்ள 7 அமைச்சர்கள் நீக்கப்படலாம்; அல்லது துறை மாற்றப்படலாம் என்பதாக கூறப்படுவதால், நம்ம அமைச்சர்கள் பலரும், அமாவாசை போன பின்னரும், அமாவாசை போல முகத்தை வைத்துக்கொண்டு நடமாட வேண்டியுள்ளது.
இப்போது அமைச்சர்கள் மத்தியில் உள்ள ட்ரென்ட் என்னவென்றால், சின்னம்மா கடாட்சத்தை பெறுவதுதான். சின்னம்மா மீண்டும் சர்வ வல்லமை பொருந்திய சக்தியாகி விட்டார் என, சில அமைச்சர்கள் (பயபக்தியுடன்) அடித்துக் கூறுகிறார்கள்.
இவர்கள் நம்புவதுபோல அடுத்துவரும் தினங்களில் 7 அமைச்சர்கள் மாற்றப்பட்டு, அதில் சின்னம்மா ஆதரவு ஆட்களுக்கு யோகம் அடித்தால், சின்னம்மாவுக்கு ராஜயோகம் ஆரம்பமாகி விட்டது என்று அர்த்தம்!
அமைச்சர்காள்… அதுவரை கோவில்களில் உள்ள இஷ்ட தெய்வங்களை வணங்கிக் கொண்டு, கொடநாட்டில் உள்ள நடமாடும் தெய்வத்தின் வார்த்தைக்காக காத்திருங்கள்!
“பத்ரம் கர்ணேபி ஸ்ருணுயாம தேவா” (தேவர்களே.. நல்ல சேதியை காதில் கேட்க வையுங்கள்) www.viruviruppu.com

கருத்துகள் இல்லை: