வியாழன், 23 ஆகஸ்ட், 2012

டிவியில் ஒருவர் தீக்குளித்ததைப் பார்த்து தீக்குளித்த 4ம் வகுப்பு மாணவன்

மதுரை: மேலூர் அருகே டிவியில் ஆட்டோ டிரைவர் ஒருவர் தீ்க்குளிப்பதைப் பார்த்த 4ம் வகுப்பு மாணவன் தன் உடலில் மண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கோட்டநத்தம்பட்டியை சேர்ந்த முத்துபோஸ் என்பவரின் மகன் சக்திவேல்(10). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கிறான். இந்த கால சிறுவர், சிறுமியர் வெளியே சென்று ஓடியாடி விளையாடாமல் டிவி, கம்ப்யூட்டரே கதி என்று இருக்கிறார்கள். அதில் பார்க்கும் பலவற்றை தானும் செய்ய முயற்சிக்கிறார்கள்.
அப்படித் தான் வீட்டில் இருந்த சக்திவேல் டிவி பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது அதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவகாசியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதை எதிர்த்து ஆட்டோ டிரைவர் கணேசன் தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து தனது வீட்டின் மொட்டைமாடியில் இருந்து கீழே குதித்த காட்சி வந்தது. அதைப் பார்த்த சக்திவேலுக்கு நாமும் தீக்குளித்துப் பார்த்தால் என்ன என்று தோன்றியது.

நினைத்ததை செயலாக்க நினைத்த அவன் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்தான். உடலில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்ததும் சிறுவன் அலறத் துவங்கினான். அவனது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவனை சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரது மருத்துவமனைக்கு சிறுவன் அனுப்பி வைக்கப்ப்டடான். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளித்துவரும் போதிலும் அவனின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த சம்பவம் குறித்து மேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை: