திங்கள், 20 ஆகஸ்ட், 2012

மோசடி குவாரி அதிபரிடம் விடிய விடிய விசாரணை

மதுரை :மதுரையில் நேற்று சரணடைந்த கிரானைட் குவாரி அதிபர் பி.ஆர்.பழனிச்சாமியிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர். போலீசாரின் கிடுக்கிப்பிடி கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் அவர் திணறினார். இன்று மதியம் அவரை மாஜிஸ்திரேட் வீட்டில் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் 16 ஆயிரம் கோடிக்கு கிரானைட் குவாரிகள் மூலம் மோசடி நடந்துள்ளதாக அப்போதைய கலெக்டர் சகாயம், அரசுக்கு அறிக்கை அளித்தார். இதையடுத்து, தற்போதைய கலெக்டர் அன்சுல் மிஸ்ரா உத்தரவின் பேரில் 300,க்கும் அதிகமான அதிகாரிகளை கொண்ட குழுவினர், மேலூர் பகுதியில் உள்ள பிஆர்பி உள்பட ஏராளமான குவாரிகளில் கடந்த 18 நாட்களாக அதிரடி சோதனை மற்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள கிரானைட் கற்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சோதனையை தொடர்ந்து பிஆர்பி நிறுவனம் மீது 3 வழக்குகள் உள்பட குவாரி நிறுவனங்கள் மீது மொத்தம் 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக ஓய்வுபெற்ற கனிமவளத்துறை அதிகாரி சண்முகவேலு உள்பட 30,க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். பிஆர்பி எக்ஸ்போர்ட் நிறுவனத்துக்கு சீல் வைக்கப்பட்டது. உரிமையாளர் பழனிச்சாமி வீடு, அலுவலகம் உள்பட 22 இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்கள், பணத்தை கைப்பற்றினர். பிஆர்பி நிறுவன பஸ்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த நிறுவனத்தின் சொத்துக்களை முடக்கும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, முன்ஜாமீன் கேட்டு பிஆர்பி நிறுவன அதிபர் பழனிச்சாமி உள்ளிட்ட கிரானைட் அதிபர்கள் பலரும் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். கிரானைட் முறைகேடு குறித்து சிபிஐ மற்றும் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும் பல்வேறு பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணையை கோர்ட் தள்ளிவைத்துள்ளது. இந்நிலையில், கிரானைட் உரிமையாளர்களை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இதையடுத்து நேற்று மதியம் 12.50 மணிக்கு மதுரை எஸ்பி அலுவலகத்தில் கூடுதல் எஸ்பி மயில்வாகனனிடம் பி.ஆர்.பழனிச்சாமி சரணடைந்தார். அப்போது கூடுதல் எஸ்.பி.யிடம் பழனிச்சாமி அளித்த மனுவில், தன் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுப்பதாக தெரிவித்திருந்தார். இதையடுத்து பழனிச்சாமியை மதுரை , அழகர்கோவில் சாலையில் உள்ள அப்பன் திருப்பதி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் எஸ்பி பாலகிருஷ்ணன், கூடுதல் எஸ்பி மயில்வாகனன், டிஎஸ்பி தங்கவேல், மேலூர், ஒத்தக்கடை, கீழவளவு ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்கள் விடிய விடிய விசாரணை நடத்தினர். பழனிச்சாமியிடம் கேட்க வேண்டிய கேள்விகள் குறித்து வருவாய்துறையினருடனும் போலீசார் ஆலோசனை நடத்தினர். இதுவரை எவ்வளவு கோடிக்கு கிரானைட் கற்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது, இதில் அரசுக்கு கணக்கு காட்டியது எவ்வளவு என்பது உள்பட பல்வேறு கேள்விகளை போலீசார் கேட்டனர். போலீசாரின் கிடுக்கிப்பிடி கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் பழனிச்சாமி தவித்தார். பெரும்பாலான கேள்விகளுக்கு ‘தெரியவில்லை, ஞாபகமில்லை, தொடர்பில்லை’ என்றே அவர் பதில் அளித்ததாக கூறப்படுகிறது. விசாரணையின்போது ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை தனது வக்கீல்களை சந்தித்து பேச பழனிச்சாமிக்கு அனுமதி வழங்கப்பட்டது. போலீசாரே அவருக்கு உணவு வாங்கிக் கொடுத்தனர். விசாரணை முழுவதும் வருவாய்த்துறையினர் முன்னிலையில் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கிரானைட் முறைகேடு குறித்து பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன. பல கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளிக்காமல் ஞாபகம் இல்லை, தெரியவில்லை என்றே பதில் அளித்தார். இன்று மதியம் ஒரு மணிக்குள் அவரை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்த உள்ளோம்’’ என்றார். இதற்கிடையே, இ.மலம்பட்டி விஏஓ முகமதுஅலி கொடுத்த புகாரின் பேரில் பி.ஆர்.பழனிச்சாமி மீது கீழவளவு ஸ்டேஷனில் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அளவுக்கு அதிகமாக கற்களை வெட்டி எடுத்தது, அரசு நிலங்களை ஆக்கிரமித்து கற்களை அள்ளியது, நீர்நிலைகளை அழித்தது, தடயங்களை மறைத்தது உள்பட 30 வகையான விதிமீறல்களை செய்துள்ளதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: