வியாழன், 23 ஆகஸ்ட், 2012

Police தேர்வில் பணம் பறிக்கும் கும்பல் : போட்டியாளர்கள் அதிர்ச்சி

மதுரை: போலீஸ் உடற்தகுதித் தேர்வில், வேலைக்கு சேர்ப்பதாகக் கூறி, பணம் பெற்று, சிலர் மோசடி செய்வதாக புகார் எழுந்துள்ளது. "இதுகுறித்து தகவல் தெரிவித்தால், மோசடி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, தேர்வு அதிகாரியான, மதுரை மாவட்ட எஸ்.பி., பாலகிருஷ்ணன் எச்சரித்தார்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம், கிரேடு 1 கான்ஸ்டபிளாக போலீஸ் பணியில் சேர, ஜூன் 24ல், எழுத்துத் தேர்வு நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு, நேற்று முன்தினம் முதல் உடற்தகுதித் தேர்வு நடந்து வருகிறது. இதில், போட்டியாளர்களை அணுகும் சில போலீசார், போலீஸ் வேலையில் சேர்ப்பதாகக் கூறி, 20 ஆயிரம் ரூபாய் வரை "கறக்கின்றனர்'. இது, சக போட்டியாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.பின், பணம் செலுத்திய போட்டியாளருடன், சக போலீஸ்காரர் ஒருவரை அனுப்பி வைக்கின்றனர். ஓட்டம், உயரம், நீளம் தாண்டுதலில், செ.மீ., வித்தியாசம் ஏற்படும்போது, அவர் "சிக்னல்' கொடுக்க, வித்தியாசம் "சரிகட்டப்படுகிறது'.இதில், குறிப்பிட்ட சிலருக்கு பங்கு இருப்பதாகவும், "சரிசெய்ய' முடியாத வித்தியாசம் எனில், குறிப்பிட்ட தொகையை மட்டும் இழுபறிக்குப் பின், போட்டியாளரிடம் திருப்பி கொடுப்பதாகவும், நேற்று புகார் எழுந்தது.


தேர்வு அதிகாரியான எஸ்.பி., பாலகிருஷ்ணன், நமது நிருபரிடம் கூறியதாவது:இத்தேர்வு நூறு சதவீதம் நேர்மையாக நடத்தப்படுகிறது. இதில், பணம் பெற்றுக்கொண்டு, தேர்வுப் பட்டியலில் சேர்க்க வாய்ப்பே இல்லை. அப்படி பணம் கொடுத்திருந்தால், நிச்சயமாக அது மோசடியாகத் தான் இருக்கும். இதுகுறித்து, பாதிக்கப்பட்டவர்கள் நேரிலோ, போனிலோ புகார் கூறினால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: