சனி, 25 ஆகஸ்ட், 2012

பேய் கூப்பிட்டதாக கூறி பிளஸ்-2 மாணவி தற்கொலை

கடந்த சில நாட்களாக பேய் என்னையும் எனது உறவினர், நண்பர்கள் 4 பேரை கூப்பிட்டது. அவர்களை இழக்க நான் தயாராக இல்லை. மற்றவர்களை பேய் கூப்பிட வேண்டாம். நான் மட்டும் பேயிடம் செல்கிறேன். எனது சாவுக்கு வேறு காரணம் இல்லை
ஆம்பூர் சான்றோர் குப்பம் சுந்தரவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்து குமார். இவரது மனைவி ஜீவா (35). ஷு கம்பெனியில் வேலைபார்த்து வருகிறார். இவர்களது மகள் குறிஞ்சி மலர் (17). இவர் இங்குள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
நேற்று அவர் பள்ளிக்கு சென்றார். மாலையில் வழக்கம் போல் வீடு திரும்பினார். அப்போது வீட்டில் யாரும் இல்லை. இந்நிலையில் அவர் வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.


வேலையிலிருந்து வீட்டுக்கு திரும்பிய தாய் ஜீவா,   மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மாணவியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்திய போது மேசை மீது மாணவி எழுதி வைத்த கடிதத்தை கைப்பற்றினர்.
அக்கடிதத்தில்,  ‘’கடந்த சில நாட்களாக பேய் என்னையும் எனது உறவினர், நண்பர்கள் 4 பேரை கூப்பிட்டது. அவர்களை இழக்க நான் தயாராக இல்லை. மற்றவர்களை பேய் கூப்பிட வேண்டாம். நான் மட்டும் பேயிடம் செல்கிறேன். எனது சாவுக்கு வேறு காரணம் இல்லை’’ என்று எழுதியுள்ளார்.
பேய் கூப்பிட்டதாக கூறி பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆம்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: