வெள்ளி, 14 மே, 2021

ஹரிநாடார்- கோடிக்கணக்கில் மோசடி… கேட்டால் கொலை மிரட்டல்! சிக்கியது எப்படி?

 விகடன்  :எம்.பி-யாக இருந்த சசிகலா புஷ்பாவுக்கு டெல்லியில் கிடைத்த மரியாதையைப் பார்த்த ஹரி நாடாருக்கு அரசியல் ஆசை துளிர்விட்டது.
வெள்ளை நிற ஜிப்பாவுக்குள் உடைசலான தேகம், நீண்ட தலைமுடி, கழுத்து நிறைய நகை… இதுதான் ஹரி நாடாரின் அடையாளம். நடமாடும் நகைக்கடையாக வலம்வந்த அவரை, கர்நாடக போலீஸார் மோசடி வழக்கில் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.
ராக்கெட் ராஜாவின் தலைமையிலான பனங்காட்டுப்படை கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஹரி நாடார், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டு 37,727 வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்தார்.
அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, கொலை முயற்சி என ஹரி நாடார் மீது ஏற்கெனவே பல வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், தற்போது பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபரான வெங்கட்ராமன் சாஸ்திரி என்பவரிடம் 7.2 கோடி ரூபாய் மோசடி செய்ததாகக் கைதாகியிருக்கிறார்.


ஹரி நாடாரின் பின்னணி பற்றி அவருக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தோம். ‘‘நெல்லை மாவட்டம், மேல இலந்தைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஹரி நாடார், குடும்பச் சூழ்நிலை காரணமாகச் சிறு வயதிலேயே மும்பைக்குச் சென்றார்.

அங்கே சில காலம் இருந்த பிறகு சென்னைக்கு வந்து வேலை பார்த்துவந்தார். சென்னையில் நாடார் சமுதாயத் தலைவர்கள் சிலருடன் அவருக்கு அறிமுகம் கிடைத்தது.

அதன் மூலம் சுபாஷ் பண்ணையார், ராக்கெட் ராஜா உள்ளிட்டோருடன் நட்பு ஏற்பட்டது. அவர்களுடன் நெருக்கமாகப் பழகியதால், அவர்கள் செல்லக்கூடிய பஞ்சாயத்துகளுக்கு அவர்கள் சார்பாக ஹரி நாடாரை அனுப்பத் தொடங்கினார்கள். அப்படித்தான் அவருடைய வளர்ச்சி ஆரம்பித்தது.

2016-ல் முன்னாள் முதல்வரான மறைந்த ஜெயலலிதாவுடன் சசிகலா புஷ்பா எம்.பி-க்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனால், ஜெயலலிதா தன்னை அடித்து ராஜினாமா செய்யச் சொன்னதாக நாடாளுமன்றத்தில் பேசி சர்ச்சையைக் கிளப்பினார்.

அந்தச் சமயத்தில், சசிகலா புஷ்பாவுக்குப் பாதுகாவலராக ஹரி நாடார் செயல்பட்டதால், ஜெயலலிதாவின் அதிருப்திக்கு உள்ளாகி, குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதானார்.

எம்.பி-யாக இருந்த சசிகலா புஷ்பாவுக்கு டெல்லியில் கிடைத்த மரியாதையைப் பார்த்த ஹரி நாடாருக்கு அரசியல் ஆசை துளிர்விட்டது. 2019-ம் ஆண்டு, ராக்கெட் ராஜா தலைமையிலான பனங்காட்டுப்படை கட்சியின் ஒருங்கிணைப்பாளராகி, நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு மூன்றாவது இடம்பிடித்தார்.

அடுத்து இந்தச் சட்டமன்றத் தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டார். அவருக்காக ராக்கெட் ராஜா ஹெலிகாப்டரில் வந்து வாக்குச் சேகரித்ததால், ஹரி நாடாருக்கு 37,727 வாக்குகள் கிடைத்தன. அவர் வாக்குகளைப் பிரித்ததால், தி.மு.க வேட்பாளர் பூங்கோதை தோற்றுப்போனார்’’ என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான வட்டாரத்தினர்.

அடிதடி, கட்டப்பஞ்சாயத்து என வலம்வந்த ஹரி நாடாருக்கு, நகைகள் மீது அலாதிப் பிரியம் உண்டு. அவரிடம் 11 கிலோ நகைகள் இருப்பதாக வேட்பாளருக்கான சொத்து விவரத்தில் தெரிவித்திருந்தார்.

‘நடிகர் அஜித் என் ரோல் மாடல்’ என்று சொல்லிக்கொள்ளும் ஹரி நாடாருக்கு, திரைப்பட நடிகராக வேண்டும் என்கிற ஆசையும் இருந்தது. அதனால், தனது தயாரிப்பில் ‘2கே அழகானது காதல்’ என்ற திரைப்படத்துக்கு பூஜை போட்டிருந்தார்.

அந்தப் படத்தில் அவரே கதாநாயகனாகவும் நடிக்கப்போவதாகத் துணிச்சலுடன் அறிவித்திருந்தார். இந்தநிலையில்தான் மோசடிப் புகாரில் கைதாகி கர்நாடக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

இது பற்றி கர்நாடக மாநில குற்றப்பிரிவு போலீஸாரிடம் பேசினோம். ‘‘ஹரி நாடாரும் அவரின் கூட்டாளிகள் சிலரும் சேர்ந்து தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் பண மோசடியில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள்.

பெரிய தொழிலதிபர்களுக்கு ஆறு சதவிகித வட்டிக்குக் கோடிக்கணக்கில் கடன் வாங்கிக் கொடுப்பதாகச் சொல்லி, நம்பிக்கையை ஏற்படுத்துவார்கள். அதற்கு சேவைக் கட்டணமாக கடன் தொகையில் இரண்டு சதவிகிதம் வாங்கிக்கொள்வார்கள்.

பெங்களூரைச் சேர்ந்த வெங்கட்ராமன் சாஸ்திரி என்பவருக்கு 360 கோடி ரூபாய் கடன் வாங்கிக் கொடுப்பதாகச் சொல்லி, சேவைக் கட்டணமாக 7.2 கோடி ரூபாயை ஹரி நாடார் கும்பலைச் சேர்ந்தவர்கள் வாங்கியிருக்கிறார்கள்.

அந்தப் பணத்தை ஹரி நாடார் தேர்தலில் செலவு செய்திருக்கிறார். சொன்னபடி வெங்கட்ராமன் சாஸ்திரிக்குக் கடன் பெற்றுக்கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார். கொடுத்த பணத்தையாவது திருப்பித் தருமாறு வெங்கட்ராமன் சாஸ்திரி கேட்டிருக்கிறார்.

அவருக்கு ஹரி நாடார் கும்பல் கொலை மிரட்டல் விடுத்திருக்கிறது. அதனால், எங்களிடம் புகார் செய்ததால் விசாரணை நடத்தி ஹரி நாடார் உள்ளிட்ட ஏழு பேர் மீது ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தோம்.

நாங்கள் அவரைத் தேடுவதை அறிந்ததும் தலைமறைவாகி விட்டார். வாக்கு எண்ணிக்கை மையத்துக்குக்கூட வரவில்லை. இந்தநிலையில், ஹரி நாடாரின் கூட்டாளியான கேரளாவைச் சேர்ந்த ரஞ்சித் பணிக்கர் என்பவரைக் கைதுசெய்தோம்.

அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் கேரளாவின் பூவார் பகுதியிலுள்ள ரிசார்ட்டில் பதுங்கியிருந்த ஹரி நாடாரைக் கைதுசெய்தோம். அவரிடமிருந்து 3,893 கிராம் தங்க நகை, 8.76 லட்ச ரூபாய் ரொக்கம், ஒரு சொகுசு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

ஹரி நாடாரின் கூட்டாளியான ரஞ்சித் பணிக்கரிடமிருந்து 10 லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும் காரும் பறிமுதல் செய்யப்பட்டன. இருவரின் வங்கிக் கணக்குகளையும் முடக்கியுள்ளோம்” என்றார்கள்.

ஹரி நாடார் தரப்பினரிடம் பேசியபோது, ‘‘ஹரி நாடார் திரைப்படங்களுக்கு ஃபைனான்ஸ் செய்யும் தொழில் செய்துவருகிறார். அவருக்கு நெருக்கமான சிலர் குறைந்த வட்டிக்குக் கடன் கொடுப்பது பற்றி தனக்கு அறிமுகமான வெங்கட்ராமன் சாஸ்

கருத்துகள் இல்லை: