வியாழன், 13 மே, 2021

அரசு பேருந்துகளில் ஆக்சிஜன் வசதி.. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கண்காணிப்பு கேமரா

kalaignarseithigal.com : தமிழக போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பதவியேற்ற பின்பு சென்னை பல்லவன் இல்லத்தில் நடைபெற்ற முதல் ஆய்வு கூட்டத்தில் போக்குவரத்துத்துறை மண்டல மேலாண் இயக்குநர்கள், போக்குவரத்து நிதி மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் , சாலை போக்குவரத்து நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்தில், போக்குவரத்து துறையின் செலவீனங்களை குறைத்து வருவாய் அதிகரித்தல், சுகாதார வழிமுறைகளை பேருந்துகளில் சீராக கடைபிடித்தல், 14வது ஊதிய ஒப்பந்தம் மற்றும் 'நிர்பயா' திட்டத்தினை விரைந்து செயல்படுத்துதல் , கிராம புறங்களில் பேருந்து தேவையை பூர்த்தி செய்ய கூடுதல் பேருந்து இயக்கம் தொடர்பாக அதிகாரிகள் மட்டத்தில் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

மேலும், டெல்லி மற்றும் மேற்குவங்க மாநிலங்களை போல பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என தமிழகத்தில் தொடங்கப்பட்ட திட்டத்தினை விரிவு படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நிர்பயா திட்டத்தின் மூலம் அனைத்து பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துதல், பேருந்து வழிதடங்களை செல்போன் மூலம் அறிந்து கொள்ளும் "சலோ ஆப்" பயன்பாடு குறித்தும் ஆலோசிக்கப்பட்டு உள்ளது.

தொடர்ந்து அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர் சந்தித்த போது, “கொரோனா பெருந்தோற்று காலத்தில் மக்களுக்கு உதவியாக இருக்கும் துறையாக "தமிழக போக்குவரத்துதுறை" விளங்கும் என்றார். மேலும், படுக்கைகள் பற்றாக்குறை இருக்கும் நேரத்தில், பேருந்துகளில் படுக்கை வசதிகள் செய்யப்படுமா என்ற கேள்விக்கு, ஆக்சிஜன் சப்ளை மற்றும் பயன்பாட்டை பேருந்துகளில் எவ்வாறு செயல்படுத்த முடியும் என்பதை சுகாதாரத்துறையுடன் ஆலோசித்த பிறகு முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

நிர்பயா திட்டத்தின் கீழ் அனைத்து அரசு பேருந்துகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என்று கூறிய அவர், அரசு பேருந்தில் முன்களப்பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள பத்திரிக்கையாளர்கள் ஊரடங்கு நேரத்தில் பயணிக்கவும் விரைவில் முடிவெடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: