புதன், 12 மே, 2021

வீட்டில் இருந்து.. கட்டில் கொண்டு சென்றால்தான் அரசு மருத்துவமனையில் சிகிச்சை.. இது உ.பி.யின் அவலம்!

 tamil.oneindia.com   -   Rayar A   :  லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் பல நோயாளிகள் தங்கள் வீட்டில் இருந்து கட்டில் கொண்டு சென்று அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மாநில தலைநகர் லக்னோ, கான்பூர் நகர், புனித நகரமான வாரணாசி, பிரயாகராஜ் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் தொற்று வேகமாக பரவி வருகிறது.

இதில் தலைநகர் லக்னோவுக்கு அடுத்து மிக மோசமாக பாதிக்கப்பட்டது மீரட் மாவட்டமாகும்.. மீரட் மாவட்டத்தில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 1,368 புதிய பாதிப்புகள் பதிவாகின. 13,941 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 2,974 படுக்கைகள் உள்ளன, அவற்றில் 1,672 ஆக்ஸிஜன் மற்றும் 583 ஐசியு படுக்கைகள் ஆகும்.



திணறும் அரசு மருத்துவமனை இந்த படுக்கைகள் அனைத்தும் முழுமையாக நிரம்பியுள்ளன. மாவட்டத்தின் 172 வென்டிலேட்டர் படுக்கைகளில் பெருமளவு நிரம்பி விட்டன. இதனால் படுக்கைகளுக்காக நோயாளிகள் சாலைகளில் காத்திருக்கும் நிலை உள்ளது. மாவட்டத்தின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையான லாலா லஜ்பத் ராய் நினைவு மருத்துவக் கல்லூரி கொரோனா நோயாளிகளை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது.

கட்டிலுடன் செல்லும் நோயாளிகள் இந்த மருத்துவமனையில் 370 ஆக்ஸிஜன் படுக்கைகள் மற்றும் 140 ஐ.சி.யூ படுக்கைகள் உள்ளன. ஆனால் இவை அனைத்தும் நிரம்பி விட்டன. படுக்கைகள் முழுவதுமாக நிரம்பி விட்டதால் மருத்துவமனையில் சேரும் நோயாளிகள் வீட்டில் இருந்து கட்டில் கொண்டு வரும்படி மருத்துவமனை நிர்வாகம் கட்டாயப்படுத்தி உள்ளது. இதனால் பல நோயாளிகள் தங்கள் வீட்டில் இருந்து கட்டில் கொண்டு சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

கவனிப்பாரன்றி நோயாளிகள் மருத்துவமனையில் இருக்கும் அடிப்டை வசதிகளும் மிக மோசமாக உள்ளது யுஎன்று நோயாளிகள் குற்றம்சாட்டி உள்ளனர். மழைநீர் ஒழுகும் நிலையில் உள்ள கட்டிடங்கள், செயல்படாத மின்விசிறிகள் என்று நிலைமை மோசமாக உள்ளது. தில்லி பல்கலைக்கழக மாணவர் வஷிஷ்ட் சர்மா கூறுகையில், எனது தந்தாகி சிகிச்சை பெறுவதற்காக நங்கள் வீட்டில் இருந்து கட்டில் கொண்டு வந்தோம். இங்கே வசதிகள் மிகவும் மோசமாக உள்ளன. நோயாளிகள் மருத்துவமனை மாடியில் படுக்கை விரிப்புகளில் கவனிப்பாரன்றி கிடக்கின்றனர் என்றார்.

இது தொடர்பாக லாலா லஜ்பத் ராய் நினைவு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ஞானேந்திர குமார் கூறுகையில், மருத்துவமனையில் அதிக நோயாளிகள் உள்ளதால் சிகிச்சை அளிப்பதில் மிகவும் சிரமமாக உள்ளது. ஆனாலும் சுகாதார ஊழியர்கள் உட்பட 200 ஊழியர்களுடன் எங்களால் முடிந்தவரை முயற்சி செய்கிறோம்'' என்று கூறினார்.


கருத்துகள் இல்லை: