திங்கள், 10 மே, 2021

அமைச்சர் சிவசங்கருக்கு கொரோனா: அமைச்சரவை கூட்டத்திற்கு வரவில்லை

tamil.indianexpress.com : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கொரோனா தொற்று காரணமாக கலந்துக் கொள்ளவில்லை.

தமிழகத்தில்  அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க மே 10ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கொரோனா தொற்று காரணமாக கலந்துக் கொள்ளவில்லை.    ஆனால், சிவசங்கர் கடந்த 5 ஆம் தேதி திமுக சட்டமன்றக் கட்சித் தலைவரை தேர்ந்தெடுக்கும், திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் கலந்துக் கொண்டார்.

அதன்பின் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. எனவே 7ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் சிவசங்கர் கலந்துக் கொண்டு அமைச்சராக பதவியேற்றார்.

பின்னர் அன்று மாலை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் அமைச்சர் சிவசங்கர் கலந்துக் கொண்டார்.

இந்நிலையில் அமைச்சர் சிவசங்கருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் கலந்துக் கொள்ளவில்லை.

அமைச்சர் சிவசங்கர் கொரோனா தொற்று உறுதியானதால், தனிமை படுத்திக் கொண்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைபடுத்திக் கொள்ள கேட்டுக் கொண்டுள்ளார்.

அமைச்சர் சிவசங்கர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதியில் இருந்து சட்டமன்றத்திற்கு தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: