செவ்வாய், 11 மே, 2021

புதுச்சேரிக்கு 3 பாஜகவினரை நியமன எம்எல்ஏக்களாக அறிவித்தது பாஜக!

BBC :புதுச்சேரிக்கு பாஜகவைச் சேர்ந்த 3 பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களை மத்திய அரசு நியமித்ததுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் முடிவுபெற்று தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் 16 இடங்களில் வெற்றி பெற்றது. குறிப்பாக புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் 10 தொகுதிகள், பாஜக 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக 6 இடங்கள், காங்கிரஸ் 2 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து 6 தொகுதிகளில் சுயேச்சைகள் வெற்றி பெற்றனர். இதில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற புதுச்சேரி தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் தலைவர் ரங்கசாமி கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல்வராக பதவியேற்றார்.

இதையடுத்து ஆளும் கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி 16 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இதைத் தவிர்த்து புதுச்சேரிக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தால் மூன்று நியமன சட்டமன்ற உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் உள்ளது‌.

அதன்படி இன்று மாலை மத்திய உள்துறை அமைச்சகம் கே.வெங்கடேசன், விபி.ராமலிங்கம் மற்றும் ஆர்.பி.அசோக் பாபு உள்ளிட்ட‌ மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமித்துள்ளது.

இதில் நியமிக்கப்பட்டுள்ள கே.வெங்கடேசன் கடந்த முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். கடந்த மார்ச் மாதம் தனது சட்டமன்ற பதவியை ராஜிநாமா செய்து பாஜகவில் இணைந்தார். விபி.ராமலிங்கம் கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் சபாநாயகராக இருந்து சிவக்கொழுந்துவின் இளைய சகோதரர். அடுத்து ஆர்.பி.அசோக் பாபு புதுச்சேரி பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ஆளும் கட்சி சார்பில் 16 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்துள்ள நிலையில், மேலும் 3 நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டதன் மூலமாக ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பலம் 19ஆக உயர்ந்துள்ளது.

கருத்துகள் இல்லை: