வெள்ளி, 14 மே, 2021

இந்தியாவில் கரோனா 57அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோ பைடனுக்கு கடிதம்

 nakkeeran : இந்தியாவில் கரோனா பாதிப்பு தீவிரமடைந்து கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, இந்தியாவின் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பல்வேறு சர்வதேச நாடுகளும் உதவி அளித்து வருகின்றன. அந்தவகையில், அமெரிக்காவும் தடுப்பூசி தயாரிப்புக்கான மூலப் பொருட்களை இந்தியாவிற்கு வழங்கியதோடு, ஆக்சிஜன் செறிவூட்டி மற்றும் பிற மருத்துவ உபகரணங்களையும் இந்தியாவிற்கு அளித்துள்ளது. மேலும், இந்தியாவிற்குத் தொடர்ந்து உதவுவதாக உறுதியளித்துள்ளது.

 இந்தநிலையில் இந்தியாவில் நிலவும் கரோனா பாதிப்பு தொடர்பாக 57அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் அவர்கள், "கரோனா  பாதிப்பின் அதிகரிப்பு இந்தியாவின் சுகாதார அமைப்பை மூழ்கடித்துள்ளது. 

வைரஸ் தொற்று உள்ள எல்லா இடங்களிலும், அவற்றை அழிக்க நமது பங்கைச் செய்யவேண்டும். இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொடிய கரோனா இரண்டாவது அலை குறித்து நாங்கள் மிகவும் கவலை கொண்டுள்ளோம். இந்தியா இப்போது கரோனா தொற்றுநோயின் மையமாக உள்ளது. இந்த நெருக்கடியிலிருந்து மீள இந்தியாவுக்குக் கூடுதல் மருத்துவ உபகரணங்கள், மருத்துவ பொருட்கள் மற்றும் பிற முக்கிய வளங்கள் தேவைப்படுகின்றன" எனத் தெரிவித்துள்ளனர்.

 தொடர்ந்து, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த கடிதத்தில், "இந்தியாவிற்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள்,  ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், ஆக்ஸிஜன் ஜெனரேட்டர் ஆலைகள், கிரையோஜெனிக் ஆக்ஸிஜன டேங்கர்கள் உள்ளிட்டவரையும், ரெம்டெசிவிர், டோசிலிசுமாப் போன்ற மருந்துகளையும், வென்டிலேட்டர்கள், பைபாப் ஆகிய மருத்துவ உபகரணங்களையும் இந்தியாவிற்கு வழங்க வேண்டும்" என்று ஜோ பைடனுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: