செவ்வாய், 11 மே, 2021

பொறியியல் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு... தேர்வுக்கட்டணம் செலுத்த தேவையில்லை” - அரசு அதிரடி அறிவிப்பு!

kalaignarseithigal.com : அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் தேர்வு குளறுபடி குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் பல்கலைக்கழக பதிவாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்தபிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, “பிப்ரவரி மாதம் நடைபெற்ற தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. அதை கருத்தில் கொண்டு மீண்டும் தேர்வுகள் நடத்தப்படும்.இதற்கு மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. பிப்ரவரி மாதம் நடந்த தேர்வில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட மாணவர்கள் விரும்பினால் அவர்களும் இத்தேர்வை எழுதலாம்.” எனத் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் முடிவு தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் “சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் நவம்பர் / டிசம்பர் 2020 க்கான பருவத் தேர்வுகள் ஒழுங்கு நிகழ்நிலைத் தேர்வாக (Proctored Online Exam) 2021 பிப்ரவரி மாதம் நடைபெற்றது.   இத்தேர்வில் மாணாக்கர்கள் தங்களுக்கு அதிக முறைகேடுகள் நடைபெற்றதாகவும் அதனால் தங்களுக்கு அதிக சிரமங்கள் ஏற்பட்டதாகவும் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது கவனத்துக்கு கொண்டு வந்தனர்.

இதில் மாணாக்கர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களைக் கருத்தில் கொண்டு அவர்களது வேலைவாய்ப்பு மற்றும் எதிர்காலத்தைக் கருதியும், நன்கு படிக்கும் சில மாணாக்கர்கள் தங்களுக்கு மதிப்பெண்கள் வெகுவாக குறைந்துவிட்டதாக தெரிவித்ததையும் கருத்தில் கொண்டு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர், உயர்கல்வித்துறைச் செயலாளர் மற்றும் அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து மாணாக்கர்களின் நலன் கருதி கீழ்க்கண்ட முடிவுகளை எடுத்துள்ளார்கள்.

1. பிப்ரவரி 2021-இல் நடைபெற்ற தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதைக் கருத்தில் கொண்டு மீண்டும் தேர்வுகள் நடத்தப்படும்.

2. இம்மாணக்கர்கள் இத்தேர்வுக்கு தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

3. பிப்ரவரி மாதம் நடந்த தேர்வில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட மாணாக்கர்கள் விரும்பினால் அவர்களும் இத்தேர்வினை எழுதலாம்.

4. தேர்வு 3 மணிநேரம் நிகழ்நிலைத் தேர்வாக (Online Exam) நடைபெறும். பல்கலைக்கழகம் கொரோனாவிற்கு முன்பு பின்பற்றிய பழைய வினாத்தாட்கள் முறையே கடைபிடிக்கப்படும். இத்தேர்வுகள், தமிழகத்திலுள்ள மற்ற பல்கலைக்கழகங்கள் நடத்தியது போலவே நடத்தப்படும்.

5. எதிர்வரும் ஏப்ரல் / மே 2021 பருவநிலைத் தேர்வுகளும் மேற்கண்ட முறையிலேயே நடத்தப்படும்.

பிற பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்புகளுக்கான தேர்வுகள் தற்போது ஊரடங்குக் காரணமாக் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள பட்டப்படிப்புகளுக்கான தேர்வுகள் மே 25 முதல் தொடர்ந்து நடத்தப்படும்.

அதற்கான அறிவுப்புகளை அந்தந்தப் பல்கலைக்கழகங்களே வெளியிடும். மாணாக்கர்கள் ஊரடங்குக் காலத்தைப் பயன்படுத்தி தேர்வுக்குத் தயாராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: