செவ்வாய், 11 மே, 2021

மருத்துவமனைகளில் மூன்று வேளையும் இலவச உணவு!

minnambalm : தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மூன்று வேளையும் இலவச உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று கொண்டதையடுத்து, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 14 நாட்கள் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் உணவு, சிகிச்சை, படுக்கை வசதிகள், ஆக்சிஜன் தேவை போன்றவற்றை கண்காணிக்க வேண்டும். மேலும் மருத்துவமனையில் பணியாற்றும் முன்கள பணியாளர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா? என்பதையும் அமைச்சர்கள் கண்காணிக்க வேண்டும் என்று முதல்வர் தெரிவித்திருந்தார்.

சென்னை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளை கவனிக்க அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் மா.சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 24 மணி நேரமும் இலவச உணவு வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு இன்று(மே 11) தொடங்கி வைத்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “ சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உதவியாக இருப்பவர்களுக்கும், மற்ற நோய் காரணமாக அனுமதிக்கப்பட்டிருப்பவர்களை காண வருபவர்களுக்கும் 24 மணி நேரமும் இலவச உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தனியார் அமைப்பு மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்று தமிழகத்திலுள்ள அனைத்து அரசுமருத்துவமனைகளிலும் மூன்று வேளையும் இலவச உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வைரஸ் பரவலை தடுக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும், கட்சி சார்பில் நோய் தடுப்பு பணிகளில் ஈடுபட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி திமுகவினர் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வார்கள். திமுக ஆட்சியில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது ” என கூறினார்.

மேலும், இன்று மாலை ஶ்ரீரங்கம் ஜீயர் தேர்வு தொடர்பாக இந்து அறநிலைய துறை சார்பில் கூட்டம் நடைபெறும்” என தெரிவித்துள்ளார்.

-வினிதா

கருத்துகள் இல்லை: